400 வகை யாகங்கள் பற்றி தெரியுமா? 400 types Yaagangal

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் (காஞ்சி பரமாசார்யார்) உரை:

சென்னையில் 20-11-1932-ல் ‘ஹவிர் யக்ஞங்களும் ஸோம யக்ஞங்களும்’ என்ற தலைப்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் (காஞ்சி பரமாசார்யார்) நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்:
விவாஹ காலத்தில் எந்த அக்கினியை சாக்ஷியாக வைத்துக் கொண்டு விவாஹம் பண்ணுகிறோமோ அதை வரன் வீட்டில் வைத்துக்கொண்டு அதில் ஔபாசனம் ஆரம்பித்துக்கொண்டு ஆயுள்பரியந்தம் அதை வைத்துக் காப்பாற்றிக் கொண்டு வர வேண்டும். வருஷத்தில் ஆறு கர்மாக்கள் ஔபாசனாக்கினியால் பண்ண வேண்டும்.

ஒரு பிள்ளை பிறந்தபின் மயிர் நரைப்பதற்கு முன் அக்னிஹாத்திரம் செய்யவேண்டும். பிள்ளை பிறக்காவிட்டால் அக்னிஹாத்திரம் இல்லை.
ஸந்யாசிக்கு சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. அது ஒரே இடத்திலிருந்து பண்ண வேண்டியது. கிருஹஸ்தனுக்கு அது ஒரு யாகம். அக்கினியாதனம், அக்னிஹாத்திரம், தரிசபூர்ணமாஸம், ஆக்ரஹாயணி, சாதுர்மாஸ்யம், பசுபந்தம், சௌத்ராமணி என்னும் ஏழும் ஹவிர் யக்ஞங்கள்.

வேறு சில சொற்பொழிவுகளில் அவர் கொடுக்கும் தகவல்களின் சுருக்கம்.
ஒவ்வொருவரும் 21 வகை யஜ்ஞங்களை செய்துவரவேண்டும். இவை பாக யஜ்ஞ, ஹவிர் யஜ்ஞ, சோம யஜ்ஞ என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாக யஜ்ஞம் ஏழிலும், முதல் ஐந்து ஹவிர்யஜ்ஞங்களிலும் உயிர்ப்பலி கிடையாது. வாஜபேய யஜ்ஞம் முதல்தான் உயிர்ப்பலி உண்டு. பிராமணர்கள் செய்யக்கூடிய பெரிய யஜ்ஞமான வாஜபேய யஜ்ஞத்தில் 23 பிராணிகளும், க்ஷத்ரியர்கள் செய்யும் மிகப்பெரிய யாகமான அஸ்வமேதத்தில் நூறு பிராணிகளும் பலியிடப்பட்டன.

அதர்வ வேதம் யாகங்களை,
அமைதிக்கான சாந்திகம், பலத்துக்கான பௌஷ்திகம், எதிரிகளை நாசம் செய்வதற்காண ஆபிசாரிகம் என மூன்று வகையாகப் பிரித்துள்ளது.
இராமபிரானைத் தோற்கடிக்க இந்திரஜித், நிகும்பிலயாகம் (ஆபிசார வகை) செய்ய முயன்றான்.

‘’காமதேனு போன்று யாகங்கள், மனிதனுக்கு விரும்புவதைக் கொடுப்பவை என்றும் மனிதனைப் படைத்தபோதே பிரம்மா அவர்களுக்கு யாகங்களை அளித்ததையும் பகவத் கீதை ஸ்லோகம் மூலம் சுவாமிகள் விளக்குகிறார்.
யாகங்கள் செய்வதன் மூன்று நோக்கங்களையும் சுவாமிகள் விளக்குகிறார்:1. எல்லா உயிரினங்களும் நலமுடன் வாழப் பிரார்த்திப்பது 2.இறந்தபின்னர் மேலுலகத்தில் சுகமாக வாழ 3. எல்லாவற்றையும் விட மேலாக, பிரதிபலன் எதிர்பார்க்காமல், உலக நலனுக்காக இதைச் செய்வது நமது கடமை என்று எண்ணிச் செய்வது.

யஜ்ஞங்கள் மூன்று தினுஸு, யஜ்ஞம் என்பது யாகம் வேதத்தில் யஜ்ஞாதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வேதத்தில் ஏறக்குறைய 400 வகை யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு பிராமணனும் செய்யவேண்டிய யஜ்ஞங்கள் 21. அவைகளில் பாக யஜ்ஞங்கள் ஏழு போக பாக்கி உள்ளவை 14. யாகங்களைப் பற்றிய விஷயங்கள் வேதங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன.
ஸோம யாகங்கள் ஏழு. அக்னிஷ்டோமம் முதல் யாகம். அதைச் செய்தவர்கள் ஸோமயாஜி. கடைசியில் இருப்பது வாஜபேயம். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வட தேசத்தில் பாஜபே என்று அவர்களைச் சொல்லுவார்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு அவப்ருத ஸ்நான காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும். திருவாங்கூர், மைசூர் இந்த ராஜ்யங்களில் அவர்களுக்கு சுவேதச் சத்திரம் கொடுக்கிறர்கள்.

ஸோம யாகம் பண்ணும்பொழுது ஸோமலதைச் சாற்றைப் பிழிந்து ஸோமபானம் செய்வார்கள். ஸோமலதையும் கிருஷ்ணாஜினமும்( மான் தோல்) இப்பொழுது மலையாளத்தில்தான் கிடைக்கின்றன. மற்ற இடங்களில் இல்லை. நம்பூதிரிகளில் பத்துக் குடும்பத்தில் ஒருவராவது ஸோம யாகம் பண்ணுகிறர்ர்கள். யஜ்ஞம், தானம், தபஸ், இவைகளைச் செய்வதினால் சித்த சுத்தி உண்டாகிறது என்று நம்முடைய ஸ்ரீ ஆச்சார்யர்கள் சொல்லியிருக்கிறர்கள்.

ஜோதிஷ்டோமம் ஜன்மாவில் ஒருதடவையாவது பண்ணவேண்டும்.

பரமாத்மாவை அறியப் பிரயத்தனப்படுகிறவர்கள் யஜ்ஞம், உபவாசம் முதலியவைகள் எல்லாவற்றையும் பரமேசுவரப் ப்ரீதியாகப் பண்ணவேண்டும்ம். பூர்வ ஜன்மத்தில் யாகங்கள் பண்ணினவன் இந்த ஜன்மத்தில் விவேகத்தைப் பெறுகிறான்.

400 யாகப் பட்டியல் :
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் 82 ஆண்டுகளுக்கு முன் நடத்திய உரையை மீண்டும் ஒரு முறை படித்தபோது 400 யாகங்களின் பட்டியல் கிடைக்குமா என்று தேடினேன்.
சுமார் 40 யாக, ஹோமங்கள் பட்டியலே கிடைத்தது. எதிர் கால ஆராய்சியாளருக்காவது நாம் அந்தப் பட்டியலை வைத்திருப்பது நல்லது.

இதோ இதுவரை நான் சேகரித்த யாக, யக்ஜஞ, ஹோம பட்டியல்:
1.ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்: எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னரும் நாம் செய்ய வேண்டியது.

2.நவக்ரஹ ஹோமம்: புதிய கட்டிடம், வீடு கட்டிய போதும், மேலும் பல புதிய முயற்சிகள் செய்யும்போதும் ஒன்பது கிரகங்களின் தீய பார்வை படாமல் இருக்க செய்யும் ஹோமம்.

3.சுதர்ஸன ஹோமம்: இது எதிரிகளின் தொல்லையைப் போக்கும்.

கேரளத்தில் திருச்சூர் அருகில் நடத்தப்படும் அதிராத்ர யக்ஞம்: பாஞ்சால் என்னும் கிராமத்தில் 1975 முதல் அதிராத்ர யக்ஞம் நடத்தப்படுகிறது. அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக் கழக தத்துவ இயல் பேராசிரியர் ப்ரிட்ஸ் ஸ்டால் இதை அப்படியே படம்பிடித்து உலகிற்கு அளித்தார்.

100 இரவு யாகங்கள்

100 இரவுகள் நடத்தும் யக்ஞம்: திருநெல்வேலி மாவட்ட அரியநாயகிபுரம் ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரி 1936 ல் எழுதிய மகாமேரு யாத்திரையில் ஒரு இரவு முதல் நூறு இரவு வரை நடத்தப்படும் (சதராத்ர்க் க்ரது) பற்றி சிரௌத சூத்திரங்களால் தெரிந்துகொள்ளலாம் என்று எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் விபா உபத்யாய எழுதிய கட்டுரையில் அந்த மாநிலத்தில்தான் யூப ஸ்தம்பங்கள் அதிகம் என்று சொல்லி கல்வெட்டுகளில் குறிப்பிட்ட யாகங்களின் பட்டியலை கொடுத்துள்ளார். இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் விரிவாகக் கொடுத்துள்ளேன்.

12 ஆண்டுகள் நீடிக்கும் யக்ஞம் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. நைமிசாரண்யம் காட்டில் நடந்த ரிஷிகள் கூட்டத்தில்தான் புராணங்கள் இயற்றப்பட்டன.

அஸ்வமேதம்: அரசர்கள் செய்யும் மிகப்பெரிய யாகம் இது. இதில் நூறு வகை மிருகங்கள் பலியிடப்படும். ராஜாவின்யாகக் குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ அவை எல்லாம் ராஜவுக்குச் சொந்தம். அதை மறுப்பவர்கள் குதிரையைப் பிடித்து கட்டிப்போடலாம். பின்னர் பெரிய யுத்தம் நேரிடும். 200 வகையான பிராணிகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியன தீயில் இடப்படும். இறுதியில் நாடு நாடாகச் சென்று திரும்பிய குதிரையும் பலியிடப்படும்.

புருஷமேதம்: நர பலி கொடுக்கும் யாகம். ஆனால் இது நடை பெற்றதாகத் தெரியவில்லை. ஜப்பானியர்கள் ஹராகிரி செய்துகொள்வது போல தமிழ் வீரர்கள் போருக்கு முன், கழுத்தை அறுத்து, தங்களைப் பலியிட்டுக் கொண்ட செய்திகள் தமிழ் இலக்கியம் முழுதும் இருப்பதையும், சிலைகள் தமிழ்நாடு முழுதும் இருப்பதையும் பற்றி ஏற்கனவே படங்களுடன் எழுதிவிட்டேன். மஹாபாரதத்திலும் இப்படி களபலி நிகழ்ச்சி இருப்பதையும் குறிப்பிட்டேன். இது போல புருஷமேதம் இருந்திருக்கலாம். ஆனால் அஸ்கோ பர்போலா போன்ற சம்ஸ்கிருத் அறிஞர்கள் இது அடையாள பூர்வமாக (அதாவது மனித பொம்மை செய்து) நடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட கல்லறைகள் பஹ்ரைனில் உள்ளன. பல்லாயிரக் கணக்கான அடிமைகள் பலியிடப்பட்டதை எகிப்திய கல்லறைகளில் காண்கிறோம். பாரத நாட்டில் இப்படி எதுவும் நடக்கவில்லை.

ராஜசூயம்: சோழ மன்னன் பெருநற்கிள்ளீ நடத்திய ராஜசூய யக்ஞத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் மூவரும் ஒரே மேடையில் அமர்ந்ததை பிராமணர்களின் முத்தீக்கு ஒப்பிட்டு அவ்வையார் பாடிய பாடல் புறநானூற்றில் (367) உள்ளது. தர்மன் செய்த ராஜசூய யாகம் பற்றி மஹாபாரதத்தில் மிக விரிவாக உள்ளது.

வாஜபேயம்: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி இந்த வாஜபேய குடும்பத்தில் பிறந்த பிராமணர். இந்த ஜாதியினர் செய்யக் கூடிய மிகப் பெரிய யாகம் இதுதான். இதில் 23 பிராணிகள் பலியிடப்படும்.

புத்ர காமேஷ்டி யாகம்: குழந்தைகள் இல்லாதவர்கள் செய்யும் யாகம். தசரதன் செய்த இந்த யாகம் குறித்து ராமாயணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது.

புறநானூற்றில் யாகம்

பூஞ்சாற்றுர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் மீது ஆவூர் மூலங்கிழார் பாடிய ஆர்புதமான பாடலில் 21 வகை யாகம் பற்றிய அரிய தகவல்களைப் பாடுகிறார். உரைகாரர்கள் முக்கியத் தகவல்களைச் சேர்த்துள்ளனர்.

ஔபாசனம்: பிராமணர்கள் முதல் நான்கு வருணத்தவர்களும் திருமணம் ஆன பின்னர் செய்ய வேண்டிய தினசரி ஹோமம் இது. சந்யாசி ஆனால் இதைச் செய்ய வேண்டாம்.

சமிதாதானம்: தினமும் இரண்டு முறை பிரம்மச்சாரி மாணவர்கள் செய்யவேண்டிய ஹோமம்.

அக்னிஹோத்ரம்: தினமும் செய்யவேண்டியது. போபாலில் விஷவாயு வெளியேறி 3000 பேர் இறந்தபோது அக்னிஹோத்ரம் செய்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் விஷவாயு பாதிக்காமல் தப்பிய செய்தி பத்திரிகைகளில் வெளியானது.
புருஷசூக்த ஹோமம் என்பது ரிக்வேதத்தில் உள்ள புருஷசூகத மந்திரத்தைச் சொல்லி செய்வது.

ம்ருத்யுஞ்சய ஹோமம்: ஸ்ரீ ருத்ரத்தில் ஆயுளை வளர்க்கவும் மரண பயத்தைப் போக்கவும் வரும் மந்திரம் ஓம் திரயம்பகம்….. என்ன்னும் மந்திரம் ஆகும். இதைச் சொல்லி செய்யும் ஹோமம் இது.

காயத்ரி ஹோமம்: காயத்ரி மந்திரத்துடனும், பகவத் கீதா ஹோமம் கீதை ஸ்லோகங்களுடனும் செய்யப்படும்

ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேத மகத்தான யக்ஞம்

ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது
மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது
அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.

தமிழ்க் கலைகளஞ்சிய தகவல்
நூறு ஆண்டுகளுக்கு முன் ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற என்சைக்ளோபீடியா தரும் தகவல் பின்வருமாறு:–

யாகங்கள்: இவை பிரமம், தெய்வம், பூத, பிதுர், மானுஷம் என்பன. இவற்றுள் வேதம் ஓதல் பிரம யாகம். ஓமம் வளர்த்தல் தெய்வ யாகம். பலியீதல் பூத யாகம். தர்ப்பணம் செய்தல் பிதுர் யாகம். இரப்போர்க்களித்தல் மனுஷயாகம். இவை வேதங்களிலும் புராணங்களிலும் கூறிய அக்னி காரியங்களாம். இவற்றின் குண்ட மண்டல மந்திராதி கிரியைகள் ஆங்காங்கு வழக்கங்குறைந்து சிதைந்தும் பிறழ்ந்தும் கிடத்தலின் அவைகளின் கிரியைகளையும் குண்ட மண்டல வேதிகைகலையும் எழுதாது பெயர் மாத்திரம் எழுதுகிறேன்.
(1).அக்னிஷ்டோமம் (2)அத்யனிஷ்டோமம் (3) உக்தீயம் (4) சோடசீ (5) வாசபேயம் (6) அதிராத்ரம் (7) அப்தோரியாமம் (8)அக்னியாதேயம் (9) அக்னிஹோத்ரம் (10) தரிச பூர்ணமாசம் (11) சாதுர்மாஸ்யம் (12) நிருட பசுபந்தம் (13) ஆக்கிரயணம் (14) சௌத்திராமணி (15) அஷ்டகை (16) பார்வணம் (17) சிராத்தம் (18) சிராவணி (19) அக்ரசாயணி (20) சைத்திரி (21) ஆச்வயுசீ (22) விசுவசித் (23) ஆதானம் (24) நாசிகேதசயனம் (25) காடகசயனம் (26) ஆருண கேதுக சயனம் (27) கருடசயனம் (28) பௌண்டரீகம் (29) சத்திரயாசம் (30) சாவித்ரசயனம்.

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் ஸ்லோக வரிகள்!!!

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால் கிடைக்கும் பலன்கள்

வில்வம் அதன் பயன்களும் மருத்துவ குணங்களும்

 

Courtesy:
Sri Kanchi Maha Periyava Dasan
Dr.Krishnamoorthi Balasubramanian

Leave a Comment