திரு. V. அரவிந்த் ஸுப்ரமண்யம் எழுதிய ஐயப்பன் வரலாறு | Aravind Subramanyam Ayappa History

திரு. அரவிந்த் சுப்ரமணியம்(Aravind Subramanyam) அவர்கள் எழுதிய அய்யப்பன் வரலாறு இங்கே உங்களுக்காக. அதில் சபரிமலை, மாளிகைபுரத்தம்மன், வாவர் சுவாமி பற்றிய கட்டுகதைகள் மற்றும் பெண்கள் வரக்கூடாததற்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றை உங்களுக்காக கீழே பதிவிடுகிறேன். இதற்காக நேரம் ஒதுக்கி இதை படித்து தெளிவுபெறுவீராக.

சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

Aravind Subramanyam Ayappa History

சபரிமலைக் கோவிலின் புராண சரிதம்

மஹாவிஷ்ணு மோகினியாக உருக்கொண்டு அவதாரம் எடுத்து, சிவ விஷ்ணு சக்திகள் சங்கமமாக – கர்ப்பவாசம் புரியாமல் சங்கல்ப மாத்திரத்தில் அவதரித்தவர் மஹாசாஸ்தா. இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் சிவ விஷ்ணு சங்கமம் என்பது சக்திகளின் சேர்க்கையே. உடல் சேர்க்கை அல்ல.

சாஸ்தாவின் ஆவிர்பாவம் ஆனதும் அவர் கைலையங்கிரியில் தனக்கென ஓர் உலகத்தை உருவாக்கி, பூரணை புஷ்கலை எனும் இரு தேவியரை மணந்து அவ்வுலகிலிருந்து அருளாட்சி நடத்தலானார்.

மஹிஷி எனும் அரக்கியை அழிக்கும் பொருட்டு, மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்து, ஆகாய கங்கைவழியாக பம்பையாற்றங்கரையில் ஒரு குழந்தையாகத் தோன்றினார். பரமசிவன் கொடுத்த நவரத்தின மணிமாலையைக் கழுத்தில் அணிந்திருந்த காரணத்தால் – மணிகண்டன் என்று பெயரிடப்பட்டார், (எல்லோரும் கருதுவது போல, அடிக்கும் கோவில் மணியல்ல – சம்ஸ்க்ருதத்தில் அதற்கு கண்டா என்று பெயர். மணி என்றால் நவரத்தின மணி என்றே பொருள். மணிப்பூர் என்றொரு மாநிலம் உள்ளதும் இங்ஙனமே. Land of Jewel என்றே அதற்குப்பெயர்.)

கழுத்தில் நவரத்தினமணிகள் ஜொலித்த காரணத்தால் மணிகண்டன் என்று பெயரிட்டு ராஜசேகர பாண்டியன் வளர்த்து வந்தான். அவதார நோக்கத்துக்காக பால பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த மணிகண்டன் – மஹிஷியை சம்ஹாரம் செய்து, கலியுக வரதனாக கோவில் கொள்ளத் தீர்மானித்தான். சாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனை மஹா யோகபீடமாக விளங்கும் ஸ்தலமான சபரிபர்வதத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்.

உலக நன்மைக்காக யோகத்திலேயே ஆழ்ந்து தவக்கோலம் பூண்ட மணிகண்டன் வருடத்தில் ஒருநாள் மகர சங்க்ரமத்தன்று கண்விழித்து பக்தர்களை அனுக்ரகிப்பேன் என்று வாக்களித்தார்.

பாண்டியர்களின் குருவான அகத்திய மாமுனிவரே சபரிமலைக்கான விரத வழிமுறைகளைக் கொடுத்தவர். ஒரு மண்டல பிரம்மச்சர்யாதி விரதங்களை மேற்கொள்ளுவோரே சபரிமலை செல்லத் தகுதி உடையவர் என்று வகுத்தளித்தார்.

சபரிமலைக் கோவிலின் ஸ்தலபுராணம் இதுவே. பிரமாண்ட புராணத்தின் பூதநாதோபாக்யானம் என்ற கேரளகல்பப் பகுதியில் நமக்குக் கிட்டும் புராண சரிதம்.

புராண காலம் தொட்டே சபரிமலை ஆலயம் உண்டென்றாலும் – வருடம் ஒருநாள் மட்டுமே வழிபாடு என்பதால் வந்து செல்லும் பக்தர் கூட்டம் மிகக் குறைவு. விரத அனுஷ்டானங்கள் பெண்களுக்கு நடைமுறைப்படுத்த முடியாத காரணங்களால் ஆண்கள் மட்டுமே சபரிமலை சென்றார்கள். (இன்றைக்குமே பெண்கள் செல்லவே முடியாத, ஆண்களுமே 15-16 வயதுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் பல சாஸ்தா ஆலயங்கள் உண்டு.)

வரலாற்று நாயகன் ஐயப்பன்:

புராண சரிதம் கடந்து பல நூற்றாண்டுகள் தாண்டி, பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சம் கேரளத்தில் புலம் பெயர்ந்து, பூஞ்சார், பந்தளம் எனக் கிளைகளாகப் பிரிந்தது. சபரிமலைக் கோவிலை பந்தள வம்சம் பராமரித்து வந்தது. அப்போதைய சபரிமலைப் பகுதி காட்டில் எல்லையாக விளங்கிய காரணத்தால், வணிகர்களின் நடமாட்டம் மிகுந்தது. வணிகர்கள் மிகுந்ததால் ஒரு காலகட்டத்தில் அப்பகுதி கொள்ளையர் வசமானது.

கொள்ளையர் தலைவன் உதயணன் என்பவன் சபரிமலை ஆலயத்தைத் தீக்கிரையாக்கி அழித்தான். பாண்டிய வம்சமான பந்தள ராஜ குடும்பத்தில், ராஜகுமாரிக்கு தெய்வாம்சத்துடன் ஆர்ய கேரள வர்மன் என்ற ஓர் மகன் பிறந்து, சபரிமலைக் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்து மீண்டும் அங்கே சாஸ்தாவின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்கிறான். ஆர்ய கேரள வர்மன் என்ற அந்த ராஜகுமாரனின் செல்லப்பெயரும் ஐயப்பன். சபரிமலையின் தேவதையான மணிகண்ட சாஸ்தாவின் பெயரே கேரள வர்மனுக்கும் இருந்ததால் பின்னாளில் சிலபல குழப்பங்கள் உண்டாயின.

இஸ்லாமியரான வாவர் என்ற கதாபாத்திரம் கதைக்குள் நுழைந்தது இந்தக் காலகட்டத்தில்தான். அது புராணக் கதை அல்ல.

யாத்திரையின் நடைமுறை:

இது இப்படி இருக்க, கேரள மக்கள் சபரிமலை தர்மசாஸ்தாவை தங்கள் ரட்சக தேவதையாக ஆராதித்து சபரிமலை யாத்திரை செல்வது தொடர்ந்தது. ஆண்கள் மட்டுமே யாத்திரை மேற்கொண்டார்கள். சபரிமலை யாத்திரைக் கிரமங்களில் பண்டைய கால நடைமுறை – இருமுடி கட்டி அவரவர் வீட்டிலிருந்தே நடந்தே செல்வது. பகவான் மணிகண்டன் கட்டிக்கொண்டு போன இருமுடி போல, யோகத்தில் இருக்கும் பகவானுக்காக காராம்பசுவின் நெய்யை இருமுடியில் அடைத்து அவனுக்காக ஆத்ம சமர்ப்பணமாகக் கொண்டு சென்றார்கள்.

நடைபாதையாக வரும் பக்தர்கள் சென்றடையும் முதல் கேந்திரம் எருமேலி. பண்டைய கால நடைமுறை பற்றிக் கேட்டால் வியப்பு உண்டாகிறது. காளார்க்காடு அப்பு ஐயர் என்ற பக்தர் 1850களில் சபரிமலை வெளிச்சப்பாடு ஸ்தானம் வகித்து வந்தார். அவரே எருமேலி வரும் பக்தர்களின் விரதத்தை அங்கீகரித்து பெரியபாதைக்குள் செல்ல அனுமதிப்பார். அனுமதி இல்லாதோர் மீண்டும் வீடு திரும்பித்தான் வேண்டும். இதுவே அப்போதைய நடைமுறை.

பகவான் மணிகண்டன் பயணப்பட்ட வழியே பெரிய பாதை எனப்படும் பாரம்பரியப் பாதை. இதனையே பகவானின் பூங்காவனம் என்பார்கள். எருமேலி துவங்கி கரிமலை கடந்து சன்னிதானம் அடையும் கிட்டத்தட்ட 41 மைல் கொண்ட பாதை. பண்டைய காலத்தில் சபரிமலைப் பயணம் என்பது எருமேலியில் வணங்கி, பெரியபாதை வழியே வந்து, பதினெட்டாம் படி ஏறி சாஸ்தாவை வணங்கி, மீண்டும் பெரியபாதை வழியே நடந்து திரும்புவது. அல்லது பெரியபாதை வழியே வந்து, புல்மேட்டுப் பாதை வழியே எறி, வண்டிப்பெரியர் குமுளி வழி திரும்புவது. சபரிமலை யாத்திரை என்பது பெரிய பாதையில் மட்டும் 7-8 நாட்கள் இருக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும் ஐயப்பன்மார்கள் வீடு திரும்ப குறைந்தது 15-20 நாட்கள் ஆகும்.

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு ஒன்றிணைந்த தமிழக-கேரளத்தில், கேரள மக்களும், நெல்லை, குமரி பகுதி மக்களும், கோவை பாலக்காட்டு மக்களும் சபரிமலை யாத்திரையை சகஜமாக மேற்கொண்டவர்களே. என்னுடைய சிறிய பாட்டனார் ஸ்ரீ CV.கிருஷ்ண ஐயர் 1920-30களிலேயே சபரிமலை யாத்திரை மேற்கொண்டவர். அவருடைய டைரிக் குறிப்புகளில் கையில் அரிவாளுடன் பாதையை செப்பனிட்டுக்கொண்டு சென்ற சபரிமலைப் பயணம் பற்றி விவரித்திருக்கிறார். மற்ற தமிழகப் பகுதி மக்களுக்கு, நியமங்களுடன் கூடிய சபரிமலை யாத்திரை என்பது புதிய ஒன்றாக இருந்தது.

ஸ்வாமி ஐயப்பன் நாடகம்

இப்படி இருந்த சூழ்நிலையில், கிட்டத்தட்ட 1940களில் ஒருமுறை கேரள மாநிலம் ஆலப்புழையில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகம் போட தன் குழுவுடன் வந்திருந்தார். அப்போது ஒரு பக்தர் ராஜமாணிக்கம் பிள்ளையைத் தொடர்புகொண்டு ஐயப்பன் கதையை நாடகமாகப் போடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய ராஜமாணிக்கம் பிள்ளை, ஐயப்ப சரிதத்தைக் கேட்டவுடன் மனம் உருகி சபரிமலைக்குப் பயணப்பட்டார். அவருடன் நாடகக் குழுவில் பயணப்பட்ட நடிகர் மஞ்சேரி நாராயணன் என்பவரே பிற்காலத்தில் நம்பியார் குருசுவாமியாக அறியப்பட்ட எம்.என்.நம்பியார்.

முதன்முதலில் தமிழகத்தில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் ஸ்வாமி ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடகம் மக்கள் மனதை ஈர்த்து தமிழகம் எங்கும் மக்கள் சபரிமலையை நாட ஆரம்பித்தார்கள். நாடகம் போட்ட நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, தான் கேட்ட கதைகள் பலதையும் திரைக்கதையில் இணைத்து விட்டார். அதன் நம்பகத்தன்மையை முழுமையாக அவர் ஆராயவில்லை. முடிவாக : புராண காலத்து ஐயப்பனும் வரலாற்று ஐயப்பனும் குழப்பப்பட்டு விட்டார்கள். நாடகத்தில் இடைவேளைக் காட்சியில் மேடையில் கடல், கடலில் கப்பல், கப்பலில் வாவர் என ஜனங்கள் வாய்பிளந்து பார்த்தார்கள். அதுவே மனதில் நின்றுவிட்டது. இன்று ஏதோ வாவர் பள்ளிக்குப் போனால்தான் சபரிமலைக்குப் போன பலன் கிடைக்கும் என்று நம்பும் அளவுக்கு அது வளர்ந்து விட்டது. பின்னாளில் வந்த புத்தகங்களும் இதே கதைகளையே சொல்ல ஆரம்பித்துவிட்டன.

புனலூர் சுப்ரமண்ய ஐயர், என்னுடைய தாத்தா CV ஸ்ரீநிவாஸ ஐயர், தளிப்பறம்பா நீலகண்ட ஐயர் முதலான பண்டைய குருமார்கள் தொட்டு தாணுலிங்க நாடார், எம்.என்.நம்பியார் வரை யாருமே வாவர் பள்ளிக்குச் செல்வதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்றே அடுத்த குழப்பம் – மாளிக்கைப்புறத்தம்மன் ஐயப்பனை திருமணம் செய்யக் காத்திருப்பதாகக் கூறப்படும் வரலாறு. இதெல்லாம் நாடகத்தில் சுவைக்காகச் சேர்க்கப்பட்ட சம்பவங்கள். புராண ஆதாரம் ஏதும் கிடையாது. மாளிகைப்புறத்தம்மனுக்கு உருவம் கிடையாது. பல கேரள ஆலய பகவதி ஸங்கல்பம் போலவே கண்ணாடி பிம்பமாகவே இன்றும் பூஜிக்கப்படுகிறாள். மேலே கவசமே சார்த்தப்படுகிறது. அவள் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி ஸ்வரூபமாகவே பூஜிக்கப்படுகிறாள். பாண்டிய குல தேவதையான மீனாக்ஷி ஸங்கல்பம் என்பதே பந்தள அரண்மனையின் நம்பிக்கை. அவள் ஐயப்பனுக்கு தாய் ஸ்தானமே அல்லாது, இணையாக புராணத்தில் எங்குமே சொல்லப்படவில்லை. மகரவிளக்கு உற்சவத்தில் யானை மீது சரங்குத்திக்கு பவனிவருவது மாளிகைப்புறத்து அம்மன் என்றே பலரும் கருதுகிறார்கள். உண்மையில் பவனி வருவது ஐயப்பனே- அந்த பிம்பத்தில் தெள்ளத் தெளிவாக மீசை உள்ளதைக் காணலாம்.

சபரிமலையும் திருவிதாங்கூர் அரசும்

1780களில் தர்மராஜா என்று அழைக்கப்படும் கார்த்திகைத் திருநாள் ராமவர்மா காலத்தில் திப்புவின் கேரள ஆக்ரமிப்பு துவங்கியபோது, போர்ச் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்தச் சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசரிடம் அடைமானம் வைத்தது. அடைமானத்தை மீட்க முடியாத நிலை உருவாகி, சபரிமலைக் கோவில் உட்பட மொத்தமும் திருவிதாங்கூர் அரசர் வசமானது. சபரிமலை ஆலயம் திருவிதாங்கூர் ஆளுகைக்குச் சென்றது இப்படித்தான்.

வழக்கமாக ஆலயத்தைக் கையகப்படுத்தும்போது அதன் நகைகளையும் எடுத்துக்கொள்ளும் அரசு, சபரிமலை விஷயத்தில் திருவாபரணத்தை பந்தள அரசரிடமே இருக்கும்படியும், அவரே மகர ஸங்க்ரமத்துக்குக் கொண்டு வரும் சம்பிரதாயத்தைத் தொடரும்படியும் சொல்லியது.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் திருவிதாங்கூர் அரசர் சித்திரை திருநாள் பாலராமவர்மா தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கோவில்களை தனி அமைப்புடன் இணைத்தார். அதுவே திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு. இப்படித்தான் சபரிமலை நிர்வாகம் திருவிதாங்கூர் போர்டு கையில் சென்றது. தேவஸ்வம் போர்டு கேரள அரசின் ஒரு அங்கம் ஆனது.

சபரிமலையில் புனர் பிரதிஷ்டை

சபரிமலையில் பகவானின் யோகாக்னி காரணமாக ஆலயம் பலமுறை தீ விபத்துக்களைச் சந்திக்கும் என்பது பெரியோர் நம்பிக்கை. அதே போல ஆலயம் பலமுறை தீ விபத்துக்களைச் சந்தித்துள்ளது. பல முறை விக்ரஹமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கல்விக்ரஹம், பஞ்சலோகம் எனப் பலமுறை மாற்றப்பட்டது. 1800களில் பல வருடங்கள் தாரு சிலை என்று சொல்லப்படும் மரவிக்ரஹம் கூட இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான், மர விக்ரஹத்தில் நெய் அபிஷேகம் நேரடியாகச் செய்ய முடியாமல் இருமுடி நெய்யை நெய்த்தோணியில் கொட்டிவிடும் பழக்கம் உண்டானது. அன்று பெரும்பாலும் வந்தவர்கள் கேரளத்தவர்களே. இன்றும் அந்தக் குறிப்பிட்ட சில ஊர்க்காரர்கள், இருமுடி நெய்யைக் கருவறையில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. நெய்த்தோணியிலேயே நெய்யைக் கொட்டி அதிலிருந்து சிறிதளவு பிரசாதம் எடுத்துச் செல்கிறார்கள்.

பின்னர் பஞ்சலோக விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1902ல் ஒரு தீவிபத்து ஏற்பட்டு, மேல்சாந்தியின் முயற்சியால் விக்ரஹம் காப்பாற்றப்பட்டு, 1904ல் புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழு ஆலயமும் சீரமைக்கப்பட்டது. அப்போது வேறு பாதை இல்லை. எல்லாக் கட்டுமானப்பொருட்களும் பெரிய பாதை வழியாகவே சன்னிதானம் வந்தடைய வேண்டும்.

பந்தளம் அரண்மனையிலிருந்து திருப்பணிக்காக மரங்கள் எருமேலிக்குக் கொண்டு வரப்பட்டன. அழுதைவரை மரங்களைக் கொண்டுவந்துவிட்ட தொழிலாளர்கள் கல்தூண் போல கனத்த மரங்களை இனி மலையேற்ற முடியாது என்று பிரமித்துக் கைவிரித்தார்கள்.

திடீரென எங்கிருந்தோ அங்கே வந்து சேர்ந்த ஒரு பக்தர், உரத்த குரல் கொடுத்தார். ஆவேசம் வந்தவர் போல ஒரு பரவச நிலையில் காணப்பட்ட அவர், கட்டளை போல ஒரு வாக்கினைச் சொன்னார் : “இனி இந்தத் தூண்களை சுமப்பவர்கள், சன்னிதானம் அடையும் வரை எந்தச் சுமையையும் உணரவே மாட்டார்கள்.”

இவரது ஆவேசத்தால் உந்தப்பட்ட தொழிலாளர்கள் அவரது சத்திய வாக்குக்கு ஏற்ப சுமையே இல்லாமல் மயிலிறகு போலச் சுமந்து சென்றார்கள்.

சன்னிதானம் அடைந்து எல்லாவற்றையும் கீழே வைக்கும் வரை அதே ஆவேசத்துடன் உடன் இருந்த அந்த பக்தர், அடுத்த நொடி யார் கண்ணிலும் காணாமல் மறைந்து விட்டார். அப்படி உருவாக்கப்பட்டதே இன்று நாம் காணும் சபரிமலை அமைப்பு.

சபரிமலையின் புகழ் நாளுக்கு நாள் அதிகமானது அங்கிருந்த சில ஆசாமிகளுக்குப் பொறுக்கவில்லை. கோவிலின் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சி அப்போதே நடந்தது. 1950ல் சதியின் காரணமாக சபரிமலையில் பெரு நெருப்பு உண்டாக்கப்பட்டு திருக்கோவில் சாம்பலானது. ஐயப்பனின் விக்ரஹமும் மூன்றாக உடைந்து சேதமடைந்தது. ஆனால் ஐயனின் திருவுள்ளம் வேறுவகையில் இருந்தது. எந்தக் காரணத்துக்காக இந்தச் சதிச்செயல் அரங்கேறியதோ அதற்கு நேர் எதிராக, மிகச்சிலர் மட்டுமே அறிந்திருந்த சபரிமலைக் கோவில் பார் முழுவதும் அறிய இந்த நெருப்பு காரணமாகி விட்டது. இதன் பின்னர் சில மாதங்கள் பின்னப்பட்ட விக்ரஹமே பூஜையை ஏற்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் – தீவிபத்து குறித்து கேள்விப்பட்டு வந்த போலீஸும், தீயணைப்புத்துறை வீரர்களும் பம்பையில் பரிதவித்து நின்றார்கள். விரதமில்லாத நாம் எப்படி சபரிமலை ஏறுவது, அதனால் ஏதும் தெய்வதோஷம் உண்டாகுமோ என்ற பயம் அவர்களை ஏறவிடாமல் தடுத்தது. அப்போது என்னுடைய பாட்டனார் உட்பட அங்கிருந்த குருமார்கள் அவர்களுக்கு விபூதி கொடுத்துக் கடமையைச் செய்யுங்கள் என்று ஆசி கூறி மலையேறச் சொன்னதாக அவர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன்.

இன்றைய ஐயப்ப பிரதிஷ்டை

இதன் பின்னர் சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய புதிய விக்ரஹம் உருவாக்கப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த சுவாமி விமோசனானந்தா என்பவர் ஒரு விக்ரஹத்தையும், தமிழகத்தின் பிடி.ராஜனும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை இருவரும் சேர்ந்து ஒரு விக்ரஹத்தையும், என்னுடைய பாட்டனார் CVஸ்ரீநிவாஸ ஐயர் ஒரு விக்ரஹத்தையும் தயார் செய்தார்கள். 1952ல் இன்று நாம் காணும் ஐயப்பனின் விக்ரஹம், பிடி.ராஜன், ராஜமாணிக்கம் பிள்ளை கொணர்ந்த விக்ரஹம் தேவ ப்ரச்னத்தின் மூலம் ஏற்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தப் பிரதிஷ்டையை நடத்தியது கண்டரரு சங்கரரு. (பின்னர் ஐயப்பனைக் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த, பிடிராஜன் தலைமையில் தென்னகம் எங்கும் எடுத்துச் செல்லப்பட்ட மற்றொரு விக்ரஹமும் உண்டு. அது ஹரித்வாரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்வாமி விமோசனானந்தா உருவாக்கிய விக்ரஹம் காசியில் 18 படிகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனது பாட்டனார் உருவாக்கிய விக்ரஹம், இன்றும் பாலக்காட்டில் எங்கள் பூர்வீக வீட்டில் உள்ளது.)

Ayyappan specialities

பின்னம் அடைந்த பழைய ஐயப்ப விக்ரஹம் மணியாக்கப்பட்டு சந்நிதிக்கு எதிரே கட்டிவைக்கப்பட்டது. மணி ரூபத்தில் காட்சி தரும் மணிகண்ட ஸ்வாமி, ஒலி ரூபமாகவும் அதாவது சப்தமாகவும் இருந்து அருள்பாலிக்கிறார். இதன் பிறகுதான் சபரிமலையின் ஒலி, உலகெங்கும் இன்னும் பிரவாகமெடுத்துப் பரவியது.

சின்னப்பாதை

இந்த சம்பவங்களுக்குப் பிறகு கொஞ்சக் கொஞ்சமாக சபரிமலைக்கு பக்தர் கூட்டம் வரத்துவங்கியது. 1960களில் திரு விவி.கிரி கேரள மாநில கவர்னராகப் பணியாற்றினார். கவர்னருக்கு சபரிமலை செல்லும் ஆசை உண்டானது. ஆனால் பெரிய பாதையில் செல்ல அவரால் முடியாது. கவர்னர் விவி.கிரிக்காக சாலக்காயம் பாதை உருவானது. அதிலிருந்துதான் சின்னப்பாதை என்று சொல்லப்படும் பம்பை பாதை பிரபலமானது. இன்று நாம் காணும் பம்பா கணபதி ஆலயம், ராமர் சன்னிதி போன்றவையெல்லாம் இதன் பின்னர் உருவானதே. பழமலைக்காரர்களைப் பொருத்தவரை பகவான் குழந்தையாக வந்திறங்கிய பம்பை என்பது பெரியானவட்டம் பகுதியில் ஓடும் பம்பைக்கரையே.

ஆக, அரசியல் தலையீடே பெரியபாதையை சுருக்கி சின்னபாதையை உருவாக்கிய காரணம். அதே போல டோலி முறை உருவாகவும் விவி.கிரியே காரணம். சின்னப்பாதையிலும் நடந்து ஏற முடியாத விவி.கிரி தன்னை நாற்காலியில் அமர்த்திச் சுமந்து செல்லும்படிக் கேட்டுக் கொண்டார். சபரிமலை விதிகளை மீறி அப்படி சுமந்து செல்ல எல்லோருமே பயப்பட்டார்கள். தன்னைச் சுமந்து செல்ல முன்வருபவர்கள் நால்வருக்கும், குடும்பத்துக்கு ஒரு ஆளுக்கு அரசு வேலை தருவதாக விவி.கிரி சொன்னார் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி டோலி முறையும் சபரிமலைக்குள் வந்தது.

பெண்களுக்கான நிலை

சில விஷயங்கள் சட்டம் போட்டுத்தான் சொல்லப்பட வேண்டும் என்றில்லை. பாரம்பரிய நம்பிக்கை என்பது நம் பாரத மக்கள் உணர்விலேயே கலந்தது. ஆலயத்துக்குள் செருப்புப் போட்டுக்கொண்டு வரக்கூடாது என்பது போர்டு எழுதி தெரிவிக்க வேண்டிய நிலை இந்தியாவில் இல்லை. ஆனால் அதை அறியாதவர்களுக்கே விதிகளை எடுத்துச் சொல்லவேண்டும்.

1820ல் வெளியான ஒரு கேரள அரசு சர்வே குறிப்பு சபரிமலை பற்றிப் பேசுகிறது. Word and Connor என்ற ஆங்கிலேய அதிகாரிகள் வெளியிட்ட அரசு வெளியீடு, பூப்படைந்த பெண்களும் மாதவிடாய் நிற்காத பெண்களும் சபரிமலை ஏறத் தடை இருப்பதைத் தெளிவாக உரைக்கிறது. ஆங்கிலேயர்களும் கூட அதற்கு மதிப்பளித்து அந்த ஆலய சம்பிரதாயத்தை மாற்ற முயற்சிக்கவில்லை.

ஆனாலும் 1950கள் வரை ஒன்று இரண்டு பெண்கள் சபரிமலைக்கு வந்தது கூடக் கேள்விப்பட்டது இல்லை. அது யோகபீடம் என்ற காரணத்தால், மாதவிடாய் சுழற்சி இருக்கும் பெண்களின் உடற்கூறுக்கு அந்த க்ஷேத்ரத்தின் யோக நிலை ஏற்றது இல்லை, அதனால் பாதிப்பு உண்டாகும் என்பதை பக்தர்கள் நம்பி, அதற்கு மதிப்பளித்தே இருந்தார்கள்.

திருவிதாங்கூர் அரசுக்கே அப்போது சபரிமலைக் கோவில் சொந்தமாக இருந்தது. ஆனால் திருவிதாங்கூர் மஹாராணி, ராணி பார்வதி பாய், கோவில் விதிகளை அனுசரித்து, 1942ல், தனது கருப்பை நீக்கப்பட்ட பின்பே சபரிமலை வந்து ஐயப்பனை தரிசித்தார்.

பம்பை கணபதி கோவில் உருவாக்கப்பட்டு, சின்னப்பாதையும் வந்த பிற்பாடே அதாவது 1960களுக்குப் பிறகே பெண்கள் சபரிமலைக்கு வரத்தலைப்பட்டார்கள். அப்போதும் இளம் வயதுப் பெண்கள் மலைக்கு வரவில்லை. யாரும் அழைத்து வரவும் இல்லை. தனது 50வது வயதுக்குப் பிறகு சபரிமலை யாத்திரை துவங்கி 40 மலை யாத்திரை முடித்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஒரு பாட்டியம்மா மிகவும் பிரபலம். பஜனைப்பாடகியான பெங்களூர் ரமணியம்மாளும் தனது 55 வயதுக்குப் பின்னர் சபரிமலை யாத்திரை மேற்கொண்டு பெரும் குழுக்களையும் அழைத்துச் சென்றார். சபரிமலையுடனும் ஐயப்பனுடனும் தொடர்புடைய குடும்பங்களான தாழமன் இல்லம், கம்பங்குடியார், பந்தளம் ராஜ குடும்பம், ஆலங்காடு, அம்பலப்புழை சங்கம் என இவர்கள் குடும்பங்களில் யாரும் விதியை மீறித் தங்கள் குடும்பப்பெண்களைக் கூட மலைக்கு அழைத்து வருவதில்லை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

1900களில் வருடம் ஒருமுறை திறந்த சபரிமலை நடை, பின்னர் மண்டல பூஜைக்குத் திறக்கப்பட்டு, இரு மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, 1960க்குள் மாதா மாதம் திறக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் பம்பா வழிப்பாதை உருவான காரணத்தால், வசதிகள் அதிகமாயின. பெண்கள் அதிகம் வரத்துவங்கினார்கள். 1975-80களுக்குப் பின் ஆந்திர கர்நாடக மாநில பக்தர்கள் அதிகம் வருவதும், அவர்கள் குடும்பத்துடன் வந்து, பம்பையில் பெண்களை விட்டுவிட்டு, தாங்கள் மட்டும் மேலே சென்று தரிசனம் கண்டு வரும் வழக்கத்தை உருவாக்கினார்கள். மாத பூஜைகளில் பலநாட்களில் ஆளே இல்லாத நிலை இருப்பதைக் கண்டு இந்தப்பெண்களில் சிலர் தன்னிச்சையாக மேலே வரத் துவங்கினார்கள்.

அதிகாரிகள் சிலரும் இதனைக் கண்டும் காணாமலும் இருந்து வந்தார்கள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். 2017ல் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டி, பழைய கொடிமரம் பிரிக்கப்பட்டபோது ஒரு குட்டு வெளிப்பட்டது. 1965-66களில் சபரிமலைக்குக் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தக் காலத்திலேயே வெறும் காங்க்ரீட் சிமெண்ட்டைக் கொண்டு கொடிமரம் போலக் கட்டி அதற்கு மேலே பித்தளைத் தகடுகளால் மூடும் அளவுக்கு அரசு அதிகாரிகள் ஜித்தர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் விதிகளை மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களை அனுமதித்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இந்நிலையில், இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல எம்.என்,நம்பியார் நடித்த ‘நம்பினார் கெடுவதில்லை’ திரைப்படத்தை சபரிமலையிலேயே படமாக்க எண்ணினார்கள். 1986ல் சுதாசந்திரன், ஜெயஸ்ரீ போன்ற இளம் நடிகைகளுடன் படக்குழுவினர் அங்கே வந்து நடிக்க, படம் எடுக்கப்பட்டது. இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

கேரள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 1991ல் (பூப்பெய்திய பெண்கள், மாதவிடாய் நிற்காத பெண்கள் என்றெல்லாம் விதியில் எழுத முடியாத காரணத்தால், நாகரீகமாக) 10 வயதுக்கும் குறைவாகவும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதி அமலானது.

1972ல் பரணீதரன் ஆனந்த விகடனில் கேரள விஜயம் என்ற பெயரில் ஒரு தொடர் எழுதினார். அதில் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறார்: சபரிமலையில் ஒரு பெரியவர் தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அங்கிருந்த தகவல் பலகையைச் சுட்டிக் காட்டி, “இங்கே குழந்தைகளுக்கு அன்னப்ராஸனம் நடத்த கட்டணம் என்று போட்டிருக்கிறீர்களே, அம்மா இல்லாமல் கைக்குழந்தை எப்படி வரும்? நீங்களே இங்கே இளம் பெண்கள் வருவதை ஊக்குவிக்கிறீர்களா?” என்று சண்டை போட்ட சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

1994ல் இதே போல வத்ஸலா குமாரி என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது 42வது வயதில், பணி நிமித்தமாக சபரிமலை செல்ல அனுமதி வேண்டி நீதிமன்றத்தை அணுகினார். பணிநிமித்தமாக மேலே செல்ல அனுமதி அளித்த நீதிமன்றம், ஆலய சம்ப்ரதாயத்தில் தலையிடக்கூடாது என்ற காரணத்தால் பதினெட்டாம்படி ஏறவோ, சன்னிதானம் செல்லவோ அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வத்ஸலா குமாரியும் 50 வயது வரை காத்திருந்தே ஐயப்பனை தரிசனம் செய்தார்.

அப்போதுமே பக்தர்கள் இது ஆலய ஸம்ப்ரதாயத்துக்கு எதிரானது என்று உணர்ந்து அதை கடைப்பிடிக்கவே செய்தார்கள், அதை மீற நினைத்தவர்களை எதிர்த்தும் இருக்கிறார்கள்.

இன்றைய நிலை

இன்று சபரிமலை மாறிவிட்டது; பழைய ஆசாரங்கள் பலதும் பலரும் கடைப்பிடிப்பது இல்லை. மண்டல விரதம் இன்ஸ்டண்ட் விரதம் ஆகிவிட்டது. பெண்கள் மட்டும் வந்தால் தவறா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

இன்றைக்கும் மண்டல விரதத்தை திரிகரண சுத்தியோடு கடைப்பிடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். 40 வருடம் ஆனாலும் ஒரே குருநாதருடன் அவர் கட்டளையை ஏற்றே மலைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் தவறு செய்கிறார்கள் என்பதால் தவறு நியாயம் ஆகாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஐயப்பனைப் பக்தி பூர்வமாக நம்புபவர்கள் ஐயப்பன் வாக்கை மீற மாட்டார்கள். மீறி வர நினைப்பபர்கள் ஐயப்பனை முழுமையாக நம்பவில்லை என்றே பொருள்.

சபரிமலை ஆலயம் தனித்தன்மை கொண்டது. பகவான் சாஸ்தா மனிதனாக பூமியில் தோன்றி, நமக்காக தவக்கோலம் பூண்டு நைஷ்டீக பிரம்மச்சரியத்தில் தனியோகம் புரியும் மஹா யோக பீடம். இன்னும் அங்கே மணிகண்டன் ஜீவனோடுதான் இருக்கிறான். அதனாலேயே எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு விரத நியமம் இல்லை; எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு பதினெட்டுப் படியும் அதற்கான பூஜையும் இல்லை; எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு ஆத்ம சமர்ப்பண தத்துவமான இருமுடியும் நெய் அபிஷேகமும் இல்லை.

இப்படிப்பட்ட ஒரு சம்பிரதாயத்தைதின் ஒரு பகுதியைத்தான் இன்று நீதிமன்ற ஆணை மூலம் தகர்த்துவிட்டதாக எண்ணுகிறார்கள். ஆனால் இது ஒரு சோதனைக் காலம் என்றே பக்தர்கள் கருதுகிறார்கள். தீ விபத்தைக் காரணமாக்கி ஐயப்ப தர்மத்தை உலகறியச் செய்த பகவானின் லீலை போல, இந்தச் சோதனையை சாதனையாக்கி இன்னும் லீலைகள் நடத்துவான் ஹரிஹரசுதன்.

க்ஷத்ரிய தர்மத்தைக் கைவிடாமல், நீதிமன்றத் தலையீட்டை ஏற்காமல், சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்க குரல் கொடுக்க பந்தள ராஜா கூட்டிய கூட்டத்துக்கு 1 லட்சம் பக்தர்கள் – பெண் பக்தைகள் கூடி இருக்கிறார்கள். உண்மை பக்தர்கள் இருக்கும் வரை ஆலயத்தின் சம்பிரதாயங்கள் காக்கப்படும்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

குறிப்பு: கட்டுரையாசிரியர் திரு. அரவிந்த் சுப்பிரமணியம் கடந்த 22 வருடங்களாக ஐயப்பனைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சபரிமலையில் பங்குனி உத்திரத் திருநாளை துவங்கி நடத்திய கல்பாத்தி ஸ்ரீநிவாஸ ஐயரின் பேரன் என்ற முறையில், இவரது குடும்பத்துக்கும் சபரிமலைக்குமான தொடர்பு நூறாண்டுகளுக்கும் மேலானது. இவர் ஐயப்பனைக் குறித்து மஹா சாஸ்தா விஜயம் என்ற 1000 பக்க நூலை இயற்றியுள்ளார்.

Leave a Comment