ஒரு நல்ல கதை….. கீரைக்காரம்மா…..(சிறுகதை)

Keeraikaaramma aanmeegam story tamil

தெனமும் வீட்டுல கொண்டாந்து கீரை விக்கிற அந்த அம்மா போனவாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கலியாணம்ன்னு பத்திரிக்கை குடுத்துட்டுப் போச்சு. தெனம் காலையில கூடையில கீரக்கட்டு, முருங்கக்கா வாழக்கா மாத்திரம் கொண்டாரும். கீரக்கட்டு 25 ரூ முருங்கக்கா கட்டு 25 ரூ வாழக்கா 3, 25 ரூவான்னு குடுக்கும்…

பழைய லேசா கிழிஞ்ச சேலை கட்டிருக்கும் அள்ளி முடிஞ்ச தலை. எண்ண பாக்காத முடின்னு பாக்கவே கஸ்ட்டமா இருக்கும்.
கீரக்கட்டோட பத்திரிக்க குடுக்கக் கூடாதுன்னு தனியா வந்து குடுத்துட்டுப் போச்சு. இது மாதிரி பத்திரிக்கைகளைக் கண்டுக்கிறது இல்ல. அதுனால வாங்கி வைச்சதோட சரி மறந்தாச்சு.

ஆனா, கலியாணத்துக்கு மூணு நாளைக்கி முன்னாடி வந்து அம்மா ” அஞ்சு நாளைக்கி நான் வரமாட்டேன் கலியாண வேலை இருக்குன்னு” சொல்லிட்டுப் போச்சு.

நான் சொன்னேன் ‘ ஏதாவது பணத்த கவர்ல போட்டுக் குடுத்து அனுப்பு. இதுக்கெல்லாம் போக முடியாது. அன்னிக்கி எங்க ஆபீசுல என்னோட பாஸ் மகளுக்குக் கலியாணம் அங்க போகனும் அவர் கண்டிப்பா வரனும்ன்னு சொல்லிருக்காருன்னு’ சொன்னேன்.

அதுக்கு என்னோட சம்சாரம் கேட்டா ” நீங்க மொத நா ரிசப்சன் தான் போவீங்க; மறுநாள் ஞாயத்துக் கெழமதான் பக்கத்துக் கிராமத்துல அவங்க வீட்டுலதான் கலியாணம். போய்த் தலையக் காட்டிட்டு வரலாம்ன்னு” சொன்னா. அதுக்கு அவசொன்ன காரணம் ‘ அந்தம்மா கிட்டத்தட்ட பத்து வருசமா கீரை குடுக்குது. நல்ல பழக்கம்ன்னா’.

மேலிடத்தின் பேச்சை மீற முடியுமோ… சரின்னு ஒத்துக்கிட்டேன்.

வழக்கம் போல ஆபீஸ்ல வேலை செய்யிறவங்களோட ஒன்னா வேன் புடிச்சி, பாஸ் வீட்டுக் கலியாணத்துக்குப் போனோம். அங்க சரியான கூட்டம். பாஸ் மாப்பிள்ள வீட்டு ஆளுகளை கவனிக்கிறதுல பிசியா இருந்தாரு.

வரிசையில நின்னுட்டு இருக்கும் போதே குறுக்க குறுக்க மாப்பிள்ள வீட்டு ஆளுகன்னு கும்பல் கும்பலா போய்ட்டு இருந்ததால லேட்டாகி ஒருவழியா கைகுடுத்துக்கிட்டு இருக்குறப்ப யாரோ வர எங்களை அம்போன்னு விட்டுட்டு பாஸ் அவர்கிட்ட ஓடினாரு.

நாங்க ஃபார்மாலிட்டிக்கு நின்னு போட்டோ எடுத்துட்டு சாப்பிட போய் அங்க எடம்புடிச்சி சாப்பிட்டுட்டு வீடு வாரதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு.

மறுநாள் காலையிலதான் கீரக்காரம்மா வீட்டுக் கலியாணம். சம்சாரம் பட்டுச்சேலை ரெண்டு இஞ்ச் பார்டர் போட்டது கட்டிக்கிட்டு கொஞ்சமா நகை போட்டுக்கிட்டுக் கெளம்புனா. ‘ கார் எடுத்துக்கலாமான்னு’ கேட்டப்ப,

” வேணாம்; நாம ரொம்ப பகட்டா அங்க போகப்புடாது. அவங்களே சுமாராத்தான் இருப்பாங்க அளவோட இருக்குறது தான் நல்லது. நம்மமேல கண்ணு பட்டுடும்ன்னு” சொன்னா. அப்பீல் கெடையாது.

நானும் பைக் எடுத்துட்டு கெளம்புனேன். கவருல 201 போட்டு சீல் பண்ணி எடுத்துட்டுப் ” போதும் அவங்களுக்கு இதுவே பெருசு”-ன்ற எண்ணத்துல போனோம்.

அந்த ஊரு மெயின் ரோட்டுல இருந்து உள்ளாற மூணு நாலு கிலோ மீட்டர் இருக்கும். மெயின் ரோட்டில இருந்து தோரணம் கட்டிருந்துச்சு. வேற எதுவும் விசேசம் போலன்னு நெனச்சிக்கிட்டேன்.

போகப்போகத் தெரிஞ்சது அது கீரக்காரம்மா வீட்டுக் கலியாணத்துக்கானதுதான்…..
ஊருபூராம் வாழ்த்துப் போஸ்ட்டர் அடிச்சி ஒட்டிருந்துச்சு. போகப்போக வரிசையா விலை உசந்த காருகளும் நின்னுச்சு; எல்லாம் கலியாணத்துக்கு வந்தது போல.

கலியாணம் நடக்குற வீடுன்னு சொன்னா அடிச்சிப் புடுவாங்க அவ்வளவு பெரிய பங்களா. தெருவே அடைச்சிப் பந்தல் எக்கசக்கக் கூட்டம். ஒரே பட்டுச் சேலை பெண்கள்.

அவங்களோட கம்பேர் பண்ணிப் பாத்தா ‘ நாங்க ரொம்ப சுமார்’. உள்ளாற விடுவாங்களோன்ற மாதிரி. எனக்கே கூச்சமாப் போச்சு. வெளிய தயக்கத்தோட நின்னப்ப கீரக்காரம்மா தச்செயலா வெளிய வந்துச்சு.

இவங்களைப் பாத்துட்டு நேர இவங்க கிட்ட வந்து ” வாங்கய்யா” ந்னு கூப்புட்டுட்டுப் போச்சு. எனக்கு அடையாளமே தெரியல. அரையடி பாடர் பட்டுச்சேலை கழுத்து பூராம் நகைகள் பெரிய ஜமீன் தாரம்மா மாதிரி ஜொலிச்சிச்சி. உள்ளார கூட்டிட்டுப் போய், எல்லா பட்டுச் சேலைகாரங்களையும் ஒதுக்கி விட்டுட்டு மணமக்களை கூப்புட்டு, கால்ல விழுகச் சொல்லிச்சி. ” அய்யா ஒங்களைபோல படிச்ச பெரியவுக ஆசீர்வாதம் பண்ணனும்ன்னு_” சொல்லிச்சி நாங்க ஆசீர்வாதம் பண்ணுனோம்.

கொண்டுபோயிருந்த 200 ரூவா கவர் கூசிச்சி; எப்புடிக் குடுக்குறதுன்னு யோசனை வந்துச்சு. வேற வழியில்லாம குடுத்துத்துட்டு திரும்புனவன, ” வாங்கய்யான்னு” கூட்டிட்டுப் போய் தனியா டேபிள் ஒதுக்கி பக்கத்துல நின்னு சாப்பாடு பரிமாறி சாப்புட வைச்சி கெளம்பும் போது தாம்பூலப்பைன்னு ஒண்ணு குடுத்துச்சு. ” ரொம்ப சந்தோசமுய்யா நீங்க வந்துதுலன்னு” மனம் சந்தோசத்தோட வழி அனுப்புச்சு.

வீட்டுல வந்து தாம்பூலப் பையப் பிரிச்சா அதுக்குள்ள வெள்ளில சிமிழ்கள் ரெண்டு இருந்துச்சு….எனக்கு ஒருமாதிரி ஆகிப்போச்சு. இது புரியவே இல்ல. அப்பத்தான் அவங்க குடுத்த கலியாணப் பத்திரிக்கைய பிரிச்சி படிச்சா, அதிர்ந்து போனேன்.

அந்த ஊருல பெரிய வெவசாயக் குடும்பம் அது. மகன் பேருக்கு நேர M.Sc (Agriculture) ன்னும், பொண்ணு பேருக்கு நேரயும் M.Sc (Agriculture)-ன்னும் போட்டிருந்துச்சு. சொந்தக்காரங்க பலரு பெரிய படிப்பு பதவில இருக்குறதும் தெரிஞ்சது,

அடுத்த வாரம் ஞாயத்துக் கெழம, அதே கீரக்காரம்மா பழையபடி கீரைக் கூடையோட வந்துச்சு. என்னால ஆவல அடக்கமுடியல இத விசாரிக்கனும்ன்னு தோணிச்சு. அவங்களை வீட்டுக்குள்ள கூப்புட்டு ஒக்கார வைச்சி மரியாதையோட விசாரிச்சப்ப அந்த அம்மா சொல்லிச்சி, ” உங்களுக்கு சந்தேகம் வந்தது ஞாயம் தான் நாங்க அந்த ஊருல பல தலமுறையா வெவசாயக் குடும்பம். அஞ்சு ஏக்கருக்கு மட்டும் கீரை பயிரிட்டு இருக்குறோம்.

மகன் தான் படிச்சிட்டு வெவசாயத்துக்கு ஒதவி பண்ணுறான். அந்த விவசாயக் கல்லூரில தான் வேலை பாக்குறான். பொண்ணும் அதே கல்லூரி தான். அவளுக்கும் வெவசாயத்துல ஆர்வம். அதுனால தான் காதல் கலியாணம்.

முறையா வெவசாயம் செஞ்சி தரகர் இல்லாம நாங்களே வியாபாரமும் பண்ணுரோம். காலையில வேன்ல கொண்டாந்து எறக்கி தனித்தனியா கூடையில சொமந்து விக்கிறோம். நான் ஆர்வத்தோட நடந்து விக்கிறதால ஒடம்பும் நல்லாருக்கு. லாபமும் கெடைக்கிதுன்னு_” சொல்லிச்சி.
தோற்றத்தப் பத்தி கேட்டேன்

” ஏன் அங்க ராணி மாதிரி இருந்த நீங்க இங்க கீரை விக்கிறப்ப இப்புடின்னு_” கேட்டேன்.

அதுக்கு சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சி
” கீரவிக்கிறப்ப பட்டுச்சேலையும் நகை நட்டோட வந்தா நல்லாருக்குமா ஆராவது வாங்குவாகளான்னு_”. அப்ப
நாம சும்மா 40 ஆயிரம் மாசச் சம்பளம் வாங்குற நாம என்னா அலட்டு அலட்டுறோம்ன்னு நெனைக்கிறப்ப வெக்கமா இருந்துச்சு
அந்த விவசாயத் தாயை கையெடுத்துக் கும்புடத் தோணிச்சி.

Leave a Comment