திருவால வாயான படலம் | Thirualavai story thiruvilayadal

திருவால வாயான படலம் (Thirualavai story) இறைவனான சொக்கநாதரின் அருளினால் பாம்பானது மதுரையின் எல்லையை வரையறுத்துக் கூறியதைக் குறிப்பிடுகிறது.
மதுரை திருஆலவாய் என அழைக்கப்படும் காரணத்தையும் இப்படலம் கூறுகிறது.
பிரளயத்திற்கு பின் உலகம் உண்டாதல், வங்கிசேகரப் பாண்டியன் இறைவனாரிடம் மதுரையின் எல்லையை வரையறை செய்ய வேண்டல், பாம்பு மதுரையின் எல்லையை வரையறுத்தல், மதுரை திருவாலவாய் என்று அழைக்கப்படுதல் ஆகியன இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.
திருவால வாயான படலம் திருவிளையாடல் புராணத்தின் திருவாலவாய்க் காண்டத்தில் நாற்பத்து ஒன்பதாவது படலமாக அமைந்துள்ளது.

பிரளயத்திற்குப் பின் உலகம் உண்டாதல்
சுகுண பாண்டியனின் மரபில் கீர்த்தி பூடண பாண்டியன் என்பவன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான்.
அப்போது ஒரு சமயம் ஊழிக் காலம் எனப்படும் பிரளயம் உண்டானது. கடல் நீர் பொங்கியதால் உலகில் உள்ளவை அழியத் தொடங்கின.
அப்பிரளயத்திலிருந்து அங்கயற்கண் அம்மை திருக்கோவில், திருக்கோவிலின் இந்திர விமானம், பொற்றாமரைத் தீர்த்தம், பசுமலை, பன்றிமலை, நாகமலை, இடபமலை, யானைமலை ஆகியவை அழியாதிருந்தன.
பிரளயக் காலம் முடிந்ததும் இறைவனார் உலகத்தையும், உயிர்களையும் படைத்தார்.

வங்கிசேகரப் பாண்டியனின் வேண்டுதல்
அப்போது பாண்டிய மரபில் வங்கிசேகரப் பாண்டியன் என்பவன் தோன்றினான். அவன் அறுபத்து நான்கு கலைகளிலும் சிறந்தவனாய் விளங்கினான்.
அவன் அங்கயற்கண் அம்மை திருக்கோவிலைச் சுற்றிலும் சிறிய நகரத்தை உண்டாக்கி ஆட்சி செய்து வந்தான்.
நாளடைவில் அவனின் நல்லாட்சியின் விளைவால் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆதலால் வங்கிசேகரப் பாண்டியன் நகர எல்லையை விரிவாக்க எண்ணினான்.
எனவே அவன் திருக்கோவிலை அடைந்து “எம் பெருமானே, உன் அருளினால் நான் இந்நாட்டை ஆண்டு வருகிறேன். இப்போது என்னுடைய குறை ஒன்றை போக்கி அருள வேண்டும்.
என்னுடைய குடிமக்கள் வசிக்க ஒரு நகரம் அமைக்க வேண்டும். இந்நகரத்திற்கு ஆதியில் வரையறுக்கப்பட்ட எல்லையை வரையறுத்துக் காட்டி அருள்க.” என்று வேண்டினான்.

திருவால வாயான நகரம் உண்டாதல்
வங்கிசேகரப் பாண்டியனின் வேண்டுதலை ஏற்ற இறைவனார் சித்தமூர்த்தி வடிவம் கொண்டு மகாமண்டபத்தின் அருகே வந்து நின்றார்.
தமது திருக்கரத்தில் கங்கணமாகக் கட்டி இருந்த பாம்பினைப் பார்த்து “நீ இப்பாண்டியனுக்கு இந்நகரத்தின் எல்லையை வரையறை செய்து காட்டுவாயாக” என்று ஆணை இட்டார்.
உடனே அப்பாம்பு “எம்பெருமானே, இந்நகரம் எனது பெயரினால் விளக்க அருள்புரிவாயாக.” என்று வேண்டுகோள் விடுத்தது.
இறைவனாரும் “அவ்வாறே ஆகுக.” என்று அருளினார்.
உடனே பாம்பு விரைந்து சென்று கிழக்கு திசையில் சென்று வாலை நீட்டியது. நகருக்கு வலமாக தரையில் படிந்து உடலை வளைத்து வாலைத் தன் வாயில் பிடித்து பழைய நகரின் எல்லையைக் காட்டியது.

பின்னர் கங்கணமாக மாறி இறைவனாரின் திருக்கரத்தில் மீண்டும் அமர்ந்தது. பாம்பு வரையறுத்த எல்லையின் படி வங்கிசேகரப் பாண்டியன் சக்கர வாளகிரி என்னும் மதிலைக் கட்டுவித்தான்.
அந்நகருக்கு தெற்கு வாயிலுக்கு திருப்பரங்குன்றமும், வடக்கு வாயிலுக்கு இடபமலையும், மேற்கு வாயிலுக்கு திருஏடகமும், கிழக்கு வாயிலுக்கு திருப்பூவணமும் எல்லையாக அமைந்தன.
அப்பெரிய மதிலை ஆலவாய் மதில் என்றும், அந்நகரை ஆலவாய் என்றும் அழைக்கத் தொடங்கினர்.
பாம்பு வரையறுத்த எல்லையில் வங்கிசேகரப் பாண்டியன் நகரினை விரிவு செய்து சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான்.

திருவால வாயான படலம் கூறும் கருத்து
வழி தெரியாமல் இறைவனை சரணடைபவர்களை இறைவனார் எவ்விதத்திலும் காப்பார் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.