தசாவதாரம் – 10 – கல்கி அவதாரம் (Kalki avatar story in Tamil) – பெருமாளின் அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும். இந்த கலியுகத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் படி, விஷ்ணுவை சரணடைந்து அவரது நாமத்தை சொல்லி, செய்யும் செயல்களை எல்லாம் அவர்க்கு சமர்ப்பணம் செய்து, அவரே சரணம் என்று வாழ்வதே இந்த கலியுகத்திலிருந்து நாம் மீண்டு இறைவனை அடையும் வழியாகும்.
கிருஷ்ண அவதாரம் முடிந்து பகவான் வைகுண்டம் சென்றதும் கலி புருஷன் பூலோகத்திற்குள் நுழைந்து விட்டான். அவன் ஆட்சியினால் தர்மம் நசிந்து விடும் என அறிந்த தருமபுத்திரர் முதலிய பாண்டவர்களும் கிருஷ்ணனைத் தொடர்ந்து வைகுண்டம் போனார்கள்.
கலி பிறந்ததும் கலி தோஷத்தால் மக்கள் உடல் மெலியும். அவர்களுடைய பிராண சக்தி குறைந்து போகும். வர்ணாசிரமம் நிலை குலையும். வேததர்ம மார்க்கங்கள் மறைந்து விடும். ஆளும் அரசர்கள் திருடர்கள் போல் ஆவார்கள். தர்மம் பாஷாண்டம் மயமாகும். ஆளப்படும் மாந்தர்களும் திருட்டு, பொய் மற்றும் வீணான அபவாதங்களுக்கு ஆட்படுவர். பந்துக்கள் மைத்துனன்மார்களாக நடந்து கொள்வர். வர்ணங்கள் எல்லாமே சூத்திர வண்ணமாக மாறும். பசுக்கள் ஆடுகள் போல மெலியும். முனிவர்களின் ஆசிரமங்கள் என்று சொல்லப்படுபவை கிருகஸ்தாஸ்ரமத்திற்குள் போய்விடும். தாவரங்களில் மரங்கள் வன்னி மரங்களைப் போலக் காணப்படும். செடிகள் அணுவெனச் சிதைந்து விடும். மேகங்களில் மின்னல்கள் மிகும். தர்மானுஷ்டாணம் அற்றுப் போவதால் வீடுகள் சூன்யப் பிரதேசம் ஆகும். மக்கள் கழுதைகளின் தர்மங்களை உடையவர் என ஆவார்கள். இப்படிக் கலி முற்றிய நிலையில் பகவான் சத்துவ குணத்தால் மீண்டும் அவதாரம் செய்வார்.
சராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் ஈஸ்வரரான விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார்.
அணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார். ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர்.
அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும்.
சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடித் தோன்றக்கூடிய கிருதயுகம் எனப்படும்.
ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
யுகங்கள் நான்கு வகைப்படும். அவை கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இதில் கிருத யுகம் – 17, 28, 600 வருடங்களும், திரோதா யுகம் – 92, 96, 000 வருடங்களும், துவாபர யுகம் – 8, 64, 000 வருடங்களும், கலியுகம் – 4, 32, 000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம் ஆகும்.
கலியுக முடிவு பற்றி வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகள் தரும் குறிப்பு: முதல் யுகத்திற்கு நாள் எட்டு, 2வது யுகத்திற்கு நாள் ஆறு. 3வது யுகத்திற்கு நாள் நான்கு. 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. ஆகக்கூடிய நாள் இருபதும் கல்பம் முடிக்கக் கூடிய நாள்கள் (அதாவது ஓர் ஆயிரம் சதுர் யுகம் என்பது ஒரு கல்பமாகும்.) 60*60*60 = 216000 நொடி = 1 நாள். அதாவது, நாள் ஒன்றுக்கு நாழிகை 60. நாழிகை ஒன்றுக்கு வினாடி 60. வினாடி ஒன்றுக்கு நொடி 60. இப்படி நாளிரண்டிற்கு 4, 32, 000 நொடி. இந்த 4, 32, 000 நொடியும் வருஷமாக கலியுகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்தக் கலியுகம் தோன்றி 5000 வருடங்கள் தான் ஆகிறது.
“யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்.
பரித்ரானாய சாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்.
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே.”
எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன். நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன்.
கல்கி அவதாரம் – கேள்வி – பதில்
கேள்வி: கல்கி அவதாரம் எப்போது?
பதில்: கலியுகத்தின் இறுதி காலத்தில்.
கேள்வி: ஸ்ரீஹரி எங்கு கல்கியாக அவதரிப்பார்?
பதில்: ஷம்பள க்ராமமுக்யஸ்ய ப்ராம்ஹணஸ்ய மஹாத்மன: |
பவனே விஷ்ணுயஷஸ: கல்கி: ப்ராதுர்பவிஷ்யதி ||
ஷம்பளம் என்னும் கிராமத்தில், விஷ்ணுயஷஸ் என்னும் பிராமணரின் வீட்டில் ஸ்ரீஹரி ‘கலி’ என்னும் ரூபத்தில் அவதரிப்பார்.
கேள்வி: அவதாரத்தின் நோக்கம் என்ன?
பதில்: கலியின் தாக்கத்தால் பூமியில் எல்லா இடங்களிலும் திருடர்களே நிறைந்திருப்பர். அவர்கள் அனைவரையும் கொல்வதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
கேள்வி: அவர்களை கல்கி எப்படி அழிப்பார்?
பதில்: குதிரையில் வாளை ஏந்தியவாறு, அனைத்து ஐஸ்வர்யங்களாலும் நிறைந்த கல்கியானவர், பூமியில் நிறைந்திருக்கும் திருடர்களை அழிப்பார்.
கேள்வி: எவ்வளவு நேரத்தில்?
பதில்: வெறும் 12 மணி நேரத்தில், லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்த கழிவுகளை துடைத்தெறிந்து, அனைத்து துஷ்டர்களையும் கொன்றழிப்பார்.
கேள்வி: சஜ்ஜனர்களின் நிலைமை?
பதில்: இரவு வேளையில் சஜ்ஜனர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, தன் உடலிலிருந்து சந்தனத்தை உற்பத்தி செய்து, அந்த சந்தனத்தால் சஜ்ஜனர்களின் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை துடைத்து அழிப்பார்.
கேள்வி: அனைத்து துஷ்டர்களும் அழிந்தபிறகு என்ன நடக்கும்?
பதில்: அடுத்த நாள் க்ருதயுகம் துவங்கும்.
கேள்வி: கலியுகத்தின் முடிவில் பிரளயம் வருமா?
பதில்: அல்ல. பிரளயம் வராது. பூமி அழியாது. கல்கி அனைத்து துஷ்டர்களையும் அழிப்பார். க்ருதயுகத்தின் துவக்கத்திற்கு உந்துசக்தியாக இருப்பார்.
கேள்வி: கல்கி அவதாரத்தின் கதையை சுருக்கமாக கூறவும்.
பதில்: கலியின் ஆவேசத்தால் எல்லா இடங்களிலும் அதர்மம் தலைவிரித்தாடும். பூமிதேவி மிகவும் துக்கமடைவாள். பூமிதேவியின் துக்கத்தை அறிந்து, பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீமன் நாராயணனிடம் சென்று முறையிடுவர். சஜ்ஜனர்களின் ரட்சணைக்காக ‘கல்கி’ என்னும் பெயரில் அவதாரம் செய்து ஸ்ரீஹரி பூமிதேவியின் துக்கத்தைப் போக்குவார்.விஷ்ணுவின் தசாவதாரங்களில் கடைசியானது கல்கி. கலியுகம் மற்றும் க்ருதயுகத்தின் நடுவில் விஷ்ணுயஷஸ் மற்றும் சுமதி என்னும் தம்பதிகளுக்கு ‘கல்கி’ என்னும் பெயரில் அவதாரம் செய்வார். பரசுராமரிடமிருந்து அனைத்து கல்விகளையும் கற்று பெருமை அடைவார். இவரது பெருமையை மெச்சி, ருத்ரதேவர் இவருக்கு வாள் மற்றும் குதிரையை அளிப்பார். பின்னர் சிங்களத்தீவின் ராஜனான ப்ருஹத்ரதனின் மகளான பத்மாவதியை திருமணம் செய்வார்.பூமியின் அனைத்து பாகங்களிலும் வியாபித்திருக்கும் கலியை முற்றிலுமாக அழிப்பார். ஒரே நாளில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநிறுத்தும் கல்கியின் சக்தி நம் கற்பனைக்கு எட்டாதது. கலியுகத்தின் கடைசி நாளில், கலியை அழித்து, க்ருதயுகத்தின் துவக்கத்தில் அனைத்து சஜ்ஜனர்களுக்கும் தர்மத்தின் வழியைக் காட்டும் அவதாரமே ‘கல்கி’.
கேள்வி: கல்கியை எப்படி பூஜிக்க வேண்டும்?
பதில்: கல்கி கலே: காலமலாத் ப்ரபாது’ கலியின் தாக்கத்தால் உருவான கழிவுகள் அனைத்தையும் துடைத்தெறிந்து, என்னை தூய்மைப்படுத்து என்று வணங்கவேண்டும். தசாவதாரத்தின் கடைசி ரூபத்தை பலமுறை வணங்குவோம். ஒவ்வொரு நொடியும் நமக்குள் தோன்றும் கெட்ட சிந்தனைகளை அழித்து, நல்ல எண்ணங்களை வளர்க்குமாறு அவனை சரணடைவோம்.
தசாவதாரத்தில் ஸ்ரீஹரி காட்டிய பல்வேறு லீலாவினோதங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நினைத்து மகிழ்ச்சியடைந்து, மனதில் ஸ்ரீஹரியையே நினைத்தவாறு, தசாவதாரத்தின் சிந்தனையை ஸ்ரீமத்வமடத்தின் ஸ்ரீகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்வோமாக.
கேள்வி: கல்கி அவதாரம் சொல்லும் செய்தி என்ன?
பதில்: அதர்மம் தலைவிரித்தாடும்போது, ஸ்ரீஹரி கல்கியாக அவதாரம் செய்து, தர்மத்தை நிலைநாட்டுவார். இது பிரம்மாண்டத்தைப் (உலகத்தைப்) பற்றிய விஷயம். பிண்டாண்டத்தில் (நம் உடலில்) பிரம்மாண்டத்த்தை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே அவதாரங்களைப் பற்றி சிந்தித்ததன் பலன் கிடைக்கும். நம் மனதில் இருக்கும் அதர்ம, அநியாய, ஆதாரம் இல்லாத சிந்தனைகள் ஆகிய கெட்ட குணங்கள் கலியாக தலைதூக்கும்போது, ஸ்ரீஹரி அவற்றை அழிப்பதற்காக கல்கியாக வரவேண்டும். பூமிதேவியைப்போல் நம் புத்தியும் (அறிவு), பிம்பரூபியான ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட வேண்டும். அப்போது, ஜீவாத்மா என்னும் குதிரையில் ஏறி, மெய்யறிவு (ஞானம்) என்னும் வாளை ஏந்தி, மனதில் தலைதூக்கும் கலியை அழித்து, ஸ்ரீஹரி கல்கியாக காட்சி தருவார். இத்தகைய கல்கியின் அவதாரத்தை தினமும் நம் மனதில் நினைத்து அவனை வணங்கவேண்டும்.
கேள்வி: கல்கி அவதாரத்தின் சிறப்பு என்ன?
பதில்: கலியை அழிப்பதனால் கல்கி என்னும் பெயரைப் பெற்றார். கலியுகத்தில் உள்ள அனைத்து சஜ்ஜனர்களுக்கும் இந்த கல்கிரூபியான ஸ்ரீஹரியே ஆதரவு/ கதியாக இருக்கிறார். கலியுகத்தின் சஜ்ஜனர்களுக்கு கல்கி அவதாரம் கடைசியானது. க்ருதயுகத்தின் சஜ்ஜனர்களுக்கு இதுவே முதலாவதாகும். த்வாபர மற்றும் கலியுகத்தின் சந்தியில், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டினார். கலியுகம் மற்றும் க்ருதயுகத்தின் சந்தியிலும் இதே ஸ்ரீஹரி, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுபவரான கல்கி ரூபியான ஸ்ரீஹரியை நாம் எப்போதும் நினைக்கவேண்டும்.
நம் மனதில் தசாவதாரங்கள் நிலைத்திருக்க வேண்டும். முதலில், வேதங்களிலிருந்து ஞானத்தைப் பெற்று நம் மனதை நிறைக்கவேண்டும். அதற்காக மத்ஸ்யாவதாரம் ஆகவேண்டும். ஞானத்தின் எடையினால் மனம் அமிழ்கிறது. அதை மேலெடுக்க வேண்டுமெனில், கூர்மாவதாரம் ஆகவேண்டும். ஹிரண்யன் என்னும் கெட்ட சிந்தனையின் அழிப்பிற்காக வராகன் பிறக்கவேண்டும். பக்தி என்னும் பிரகலாதனை அருளுவதற்காக நரசிம்மர் அவதரிக்கவேண்டும். ஒவ்வொரு பொருளை சம்பாதிக்கும்போதும் உண்டாகும் கர்வத்தை அழிக்க, வாமனனின் சிறிய பாதங்கள் நம் மனதில் தோன்ற வேண்டும். பற்பல துர்குணங்கள் என்னும் க்ஷத்ரியர்களை அழிக்க கோடலி பிடித்த ராமன் ஓடி வரவேண்டும். பிறகு நம் மனதில் ராமன் மற்றும் கிருஷ்ணன் இருவரும் வந்து அமரவேண்டும். இவர்கள் நம் மனதில் இருப்பதற்கு பிரச்னை ஏற்பட்டால், புத்தன் மற்றும் கல்கி ரூபங்கள் நம்மை ரட்சிக்க வேண்டும்.
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ சித்திரை ~… Read More
Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
Leave a Comment