Krishna Avatar Story in Tamil

தசாவதாரம் 9 (krishna avatar story) கிருஷ்ண அவதாரம் – படித்து அந்த மாயவன் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் பெருங்கள்! பெருமாளின் அவதாரங்களில் இது 9வது அவதாரமாகும். வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்டவரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார். ஒரு முறை பூமாதேவி, நாராயணனிடம், பகவானே, பூமியில் நடக்கும் அக்கிரமங்களை என்னால் தாங்க முடியவில்லை. விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என வேண்டினாள். அதற்கு நாராயணனும் சற்று பொறுமையா இருக்கும் படி கூறினார்.

பல காலம் கழித்து பூமாதேவி நாராயணா, தாங்கள் சொன்னது போல இன்று வரை பொறுமையுடன் தான் இருக்கிறேன். ஆனால், முனிவர்கள் செய்யும் யாகத்தைக் கெடுப்பவர்கள், நாத்திகர்கள், காமுகர்கள், கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், உழைப்பைத் திருடுபவர்கள் ஆகியோரையும் சேர்த்து சுமக்கிறேனே.

இவர்களின் எடையைத் தாங்கும் சக்தி எனக்கில்லை பிரபு. இவர்களை அழிக்கும் அளவுக்கு பலமும் என்னிடமில்லை. புரூசோ ஷாத்தமா என்னையும், நான் தாங்கும் நல்லவர்களையும் இவர்களிடம் இருந்து காப்பாற்று. பூமாதேவியின் புலம்பல் சத்தம் அந்த பரந்தா மனுக்கும் கேட்டது, பிரம்மாவின் காதிலும் விழுந்தது. சிவனும் கொதித்தெழுந்தார். சிவனும், பிரம்மனும், மற்ற தேவர்களும் முன் செல்ல, பூமாதேவியும் அவர்களின் பின்னால், நாராயணனைச் சந்திக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் வைகுண்டத்தில் நாராயணனின் வரவுக்காக காத்திருந்தனர். நாராயணன் வரவில்லை. ஆனால், பிரம்மாவுக்கு ஒரு செய்தி மட்டும் வந்தது.

பிரம்மனே, பூமாதேவியின் கவலையை விடச் சொல். உலகத்திலுள்ள பாவிகளை அழிக்க நானே பூலோகத்தில் பிறக்கப்போகிறேன். அதற்கு முன்னதாக தேவர்கள் அனைவரும் பூலோகத்திலுள்ளயது வம்ச (இடையர்குலம்) குடும்பங்களில் பிறக்க வேண்டும். எனக்கு உதவியாக இருக்க வேண்டும், என்பதே அந்தச் செய்தி. பிரம்மா மகிழ்ந்தார். பூமாதேவிக்கு தகவல் தெரிவித்தார். சிவனும் மற்ற தேவர்களும் மகிழ்ந்தனர். தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர். எல்லா தேவர்களும் யதுகுலத்தில் அவதரித்தனர்.

யதுகுலத்தின் அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரன் வசுதேவர். இவருக்கு தேவகர் என்பவரின் மகள் தேவகியை பெண் பார்த்து நிச்சயமாயிற்று. தேவகரின் அண்ணன் உக்ரசேனன் போஜகுல மக்களின் ராஜாவாக இருந்தார்.
அவருக்கு ஒரு மகன். பெயர் கம்சன். தேவகி கம்சனின் சித்தப்பா மகள். கம்சன் தோற்றத் தால் தான் மனிதனே தவிர, உள்ளத்தால் அசுரன். ஒரு சுபமுகூர்த்த வேளையில் தேவகி யைக் கைப்பிடித்தார் வசுதேவர். தேவகிக்கு ஏகப்பட்ட சீர் வரிசையை அள்ளிக் கொடுத்தார் தேவகர்.
திருமணம் முடிந்தவுடன் மணமக்களை, மண மகளின் சகோதரன் அவளது புகுந்த வீட்டில் கொண்டு விடுவது அக்கால வழக்கம். தேவகி க்கு உடன்பிறந்த சகோதரர்கள் இல்லையென்பதால், பெரியப்பா மகன் கம்சன் தன் தங்கையை தேரில் அழைத்துச் சென்றான்.
மின்னல் வேகத்தில் குதிரைகள் பறந்து கொ ண்டிருந்தன. அப்போது, வானம் அதிர்ந்தது. அங்கிருந்து ஒரு குரல் எழுந்தது. நில்லு கம்சா! போஜகுலத்தின் இளவரசனை இவ்வளவு தைரியத்துடன் பெயர் சொல்லி ஒருமையில் அழைத்து, தடுத்து நிறுத்திய மாயக்குரலே.. யார் நீ? என்ற கம்சனுக்கு பதிலாக பயங்கர சிரிப்பொலி வானிலிருந்து எழும்பியது.
மூடனே, எமனுக்கு யாராவது தேரோட்டுவார்களா? உன்னைப் போல் மடையர்கள் தான் உண்டா? யார் அந்த எமன் என்கிறாயா? உனது சகோதரியின் வயிற்றில் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை தான் அது, குரல் அடங்கிவிட்டது. கம்சன் ஆவேசமானான்.
அத்தனை நாளும் ஊட்டி வளர்த்த அன்புத்தங் கையுடன் விளையாடிய காலத்தை மறந்தான். அவளுக்கு அன்று தான் திருமணமே நடந்திருக்கிறது என்பதையும் மறந்தான்.
இந்த உலகத்து இன்பங்களையெல்லாம் எப்ப டி எப்படியோ துய்க்க வேண்டுமென கனாக்கண்டு கொண்டிருக்கும் அவன் மடிவதா?. தேவகி, கேட்டாயா அசரீரி குரலை. ஒழிந்து போ, என்பவனாய், வாளை உருவினான். புது மணப்பெண்ணைக் கொல்வதற்கு கம்சன் வாளுடன் பாய்ந்ததைக் கண்ட வசுதேவர் கம்சனைத் தடுத்தார். மைத்துனரே ” நீர் வீரத்தில் வல்லவர். உம்மை அழிக்க யாரால் இயலும்? அசரீரி சொல்வது உண்மையே ஆனாலும் கூட, தேவகி அதற்கு எப்படி பொறுப்பாவாள்? அவளுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தானே உமக்கு ஆபத்து .நான் அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உம்மிடம் ஒப்படைத்து விடுகிறேன். அவர்களை என்ன வேண்டுமா னாலும் செய்யும். மேலும் மரணத்தைக் கண்டு நீர் அஞ்சுவீர் என நான் கனவிலும் எண்ணவில்லை.
மரணத்தைக் கண்டு மனிதன் ஏன் பயப்பட வேண்டும்? மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அது எல்லாருக்கும் வந்து சேரும். அது எந்தநாள் என்பதும் குறிக்கப்பட்ட ஒன்றுதான். அப்படியிருக்க, தைரியசாலிகள் மரணத்தைக் கண்டு அஞ்சுவார்களா? தேவகியின் குழந்தை யால் இல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் உமக்கு மரணம் சம்பவிக்கத்தானே போகிறது.
உனக்கு வயது 25 என்றால், நீர் ஏற்கனவே 25 ஆண்டுகள் இறந்து விட்டீர். மனிதன் தான் கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் மரணத்தின் வாசலை நோக்கித்தானே நகர்ந்து கொண்டிருக்கிறான்! இந்த உண்மையை நீர் அறிந்திருந்தும், இவ்வாறு செய்வது முறையானதாக தெரியவில்லை என பணிவு கலந்ததும், அதே நேரம் அழுத்தமாகவும் தெரிவித்தார். கம்சன் கோபம் தணிந்தார்.
வசுதேவரே, உமது சமாதானத்தை ஏற்கிறேன். நீர் உமது எட்டாவது குழந்தையை என்னிடம் தந்துவிடுவீர் என்பதை நான் அறிவேன். ஏனெனில், நீர் சத்தியசீலர், என்ற கம்சன் அவர்களை வீட்டில் கொண்டுபோய் விட்டான். காலம் ஓடியது. தேவகி முதல் குழந்தையைப் பெற்றாள். அந்தக் குழந்தையுடன் கம்சனின் அரண்மனைக்குச் சென்றார் வசுதேவர். கம்சன் ஆச்சரியப்பட்டான்.
வசுதேவரே ! உலகில் சொன்ன சொல் காப்பா ற்றுபவர்கள் மிகவும் குறைவு. நீர் உயர்ந்த ஆத்மா என்பதை நிரூபித்து விட்டீர். என் பாசத்திற்குரியவரே ! உமது பண்பை மதிக்கிறேன். இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம். உமது எட்டாவது குழந்தை தான் என்னை கொல்லும் என்ற விதி இருக்கிறது. எனவே, இந்தக் குழந்தையை நீரே வளர்த்துக் கொள்ளும், என்று சொல்லி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தான்.
வசுதேவர் சென்றதும், நாரதர் கம்சனைக் காண வந்தார். கம்சன் அவரை வரவேற்று ஆசனமளித்து உபசரித்தான். அவர் கம்சனிடம், உன் மீது கொண்ட அன்பின் காரணமாக நான் ஒரு ரகசியத்தை உனக்குச் சொல்கிறேன். தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறக்கப்போவது உறுதி. அது விஷ்ணுவின் அவதாரம் என்பதைத் தெரிந்து கொள்.
அதற்கு முன்னதாக யது குலத்தில், தேவர்களே குழந்தைகளாக வந்து பிறக்கப் போகிறார்கள். உன் தங்கைக்கு பிறந்த முதல் குழந்தையும், இனி பிறக்கப்போகும் குழந்தைகளும் எட்டாவது குழந்தைக்கு உதவி செய்வதற்காகவே பிறக்கப் போகின்றன. எனவே, நீ உன் தங்கைக்கு பிறக்கும் குழந்தைகளைக் கொன்றுவிடு. அதில் எது விஷ்ணு அம்சமுடை யது என்று கண்டுபிடிப்பது கஷ்டம், என்று தூபம் போட்டார்.
அவ்வளவு தான், கம்சனின் மிருக குணம் தலைதூக்கி விட்டது. நாரதரே காலம் முழுவ தும் நான் உமக்கு கடமைப்பட்டவன். இனி என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும், என்றவன், ” யாரங்கே, உடனே வசுதேவரையும், தேவகியையும் கைதுசெய்து பாதாள சிறையில் அடையுங்கள்..” என்றான். சில மணி நேரத்தில் வசுதேவரும், தேவகியும் சிறையில் தள்ளப்பட்டனர்.
வசுதேவருக்கு பிறந்த குழந்தைகள் அஷ்டவ சுக்கள் எனப்பட்டனர். இவர்கள் ஒரு சாபத்தின் விளைவாக பூமியில் பிறந்து, உடனே இறந்து இறைவனை அடைய விரும்பினர். அதன்படி அவர்களில் ஆறுபேர் இறையடி சேர்ந்து விட்ட னர். இப்படியிருக்க, ஏழாவது குழந்தையாக தேவகியின் வயிற்றில் பிறக்க கிருஷ்ணர் தன்னைத் தாங்கும் அனந்தனை (நாகம்) அனுப்பி வைத்தார்.
கிருஷ்ணாவதாரத்துக்கு முந்தைய அவதாரத்தில், அனந்தன், ராமனின் தம்பி லட்சுமணனாகப் பிறந்து, சேவை செய்தார். அதற்கு நன்றி சொல்லும் வகையில், இப் பிறப்பில் தனது அண்ணனாக அனந்தனை அனுப்ப முடிவெடுத்தாராம் பரமாத்மா. இவரே பலராமர் எனப்பட்டார்.
கிருஷ்ணரிடமே பல மாயசக்திகள் உண்டு என்றும், அதில் ஒரு சக்தியே அனந்தனாகிய பலராமர் என்றும் அதிதீவிர கிருஷ்ண பக்தர்கள் சொல்வார்கள். அதாவது இறைவனை யாராலும் தாங்க முடியாது. அவரே தன்னை தாங்க முடியும்.
எனவே, கிருஷ்ணரே அனந்தனாகிய பாம்பு வடிவில் இருந்தார் என்றும் சொல்வதுண்டு. இதே கிருஷ்ணருக்குள், இன்னொரு பெண் சக்தியும் அடங்கிக் கிடந்தது. அவளுக்கு யோக மாயை எனப்பெயர். அவளை கிருஷ்ணர் வரவழைத்தார்.
“மாயா, பூலோகம் செல் மதுராபுரி சிறையிலே தேவகியும், வசுதேவரும் சிறைப்பட்டு கிடக்கி ன்றனர். அவர்களின் வயிற்றில் நான் அவதரிக்கப் போகிறேன். அதற்கு முன்னதாக எனது மற்றொரு சக்தியான அனந்தன் தேவகியின் வயிற்றுக்கு போய் விட்டான். நீ, யதுகுலத்தின் தலைவரும், கோகுலத்தில் வசிப்பவருமான நந்தகோபனின் மனைவி யசோதையின் கருவில் உருவெடு.
சில காலம் கழித்து, நீ தேவகியின் வயிற்றிலுள்ள கருவை மாய சக்தியால் அகற்றி, வசுதே வரின் இன்னொரு மனைவியான ரோகிணி யின் வயிற்றுக்கு மாற்றிவிடு. பின்னர் நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார். தலைவணங்கி அவரது உத்தரவை ஏற்ற யோகமாயை, பரந்தாமா! என் பங்கு பூலோகத்தில் என்ன? என்றாள்.
தங்கையே, பூலோக மக்கள் உன்னை என் சகோதரியாக கருதுவர். உன்னை துர்க்கை என அழைப்பர். வைஷ்ணவி, சாமுண்டி, காளி, விஜயா, சாரதா, அம்பிகா இப்படி பல பெயர்களை சூட்டுவர். புஷ்பம், பழங்களால் ஆராதிப்பர்.
மேலும் உன்னை நம்பி யாகங்கள் பல நடத்தி, தங்கள் சொந்த நலனை எல்லாம் நிறைவேற் றித்தர வேண்டுவர். தகுதியானவர்களுக்கு நீ தகுதியானதைச் செய்வாய், என்றார். மகிழ்ச்சியடைந்த துர்க்கை பூமிக்கு வந்து யசோதையின் வயிற்றில் கருவானாள். சில காலம் சென்றதும், தேவகியின் வயிற்றில் இருந்த பலராமனை, ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றி விட்டாள்.
இதன்மூலம் கிருஷ்ணர், தன்னோடு என்றும் இருக்க வேண்டிய ஒரு சக்தியை உறுதிப்படுத்திக் கொண்டார். பலராமனின் கரு பலவந்தமாக இன்னொரு பெண்ணின் வயிற்றுக்கு ஈர்க்கப்பட்டதால் அவரை ஆகர்ஷணன் என்றும், ரமணன் என்றும் சொல்வார்கள்.
அவரை யார் உளமார நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அவரே குழந்தையாவார் என்பது இதன் உட்கருத்து. ஆறு குழந்தைகளைக் கொன்ற பாவமும், ஒரு குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்து போகவும், தன்மூலம் தேவகிக்கு ஏற்பட்ட பயமே என்பதால் அதையும் ஏழாவது கொலையாகக் கருதி, அதனால் தனக்கு துன்பம் விளையுமோ என்று அச்சமும் கொண்டிருந் தான் கம்சன்.
கிருஷ்ணர் தேவகியின் கர்ப்பத்தில் இருந்தார் ஒரு நன்னாளில் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை வசுதேவர் பார்த்தார். பரவசத்தி ன் உச்சிக்கே போய்விட்டார். ஆம்… குழந்தையின் கைகளில் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஆகியவை இருந்தன. மஞ்சள் பட்டு உடுத்தி, ஆபரணங்களும் அணிந்திருந்தான் சின்னக்கண்ணன். பிறந்த குழந்தைக்கு நான்கு கைகள், ஆடை, ஆபரணம். இதெப்படி சாத்தியம்? தன் வயிற்றில் பிறந்த மகன் சாட்சாத் பரமாத்மாவே என வசுதேவர் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனார்.
தேவகி வைத்த கண் வாங்காமல் திருமாலை ரசித்து, தரிசித்துக் கொண்டிருந்தாள். கடவுளை பெற்ற அந்த திருவயிறு குளிர்ந்து போயிருந்த வேளையில், அண்ணன் கம்சன் அவளது நினைவில் ஊசலாடினான்.
அவள் அந்த தெய்வக் குழந்தையிடம், பரந்தாமா, உலகம் உய்விக்க வந்த விளக்கே, தாங்கள் உங்கள் சொந்தக் கோலத்தில் எங்களிடம் எப்படி வளர முடியும்? என் அண்ணன் கம்சன் உங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறான். அத்துடன் எங்களையும் அவன் கொன்று விடுவான்.
என்னைத் திருமணம் செய்த பாவத்திற்காக, என் கணவர் உயிர்விடுவது எவ்வகையில் நியாயம்? தாங்கள் தான் இதற்கொரு வழி சொல்ல வேண்டும், என பிரார்த்தித்தாள். அந்தக் கணமே குழந்தை பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். என்னைப் பெற்ற புண்ணியவதிக்கும், என் தந்தை வசுதேவருக்கும் நமஸ்காரம்.
தாயே, முன்னொரு பிறவியில் தந்தை வசுதேவர் சுதபா என்ற பெயரில் ஒரு நாட்டின் மன்னனாக இருந்தார். தாயான நீ பிருச்னி என்ற பெயருடன் அவரது மனைவியாய் இருந்தாய். அப்போது இந்தப் பூவுலகில் மக்கள் தொகை குறைந்தது. இதனால் கலவரமடைந்த பிரம்மன் உன்னை அணுகி மக்கள் தொகையை அதிகரிக்க உதவ வேண்டும் என்றான். ஆனால், நீயும், சுதபாவும் ஐம்புலன்களையும் அடக்கி விரதம் ஒன்றை அனுஷ்டித்துக் கொண்டிருந்தீர்கள். இதனால் பிரம்மாவுக்கு நீங்கள் கட்டுப்படவில்லை. கோபமடைந்த பிரம்மன் புயலை உருவாக்கி தவத்தை கெடுக்க முயன்றான். ஆயினும், உங்களை இயற்கை கூட ஒன்றும் செய்யமுடியவில்லை.
ஏனெனில், உங்கள் இதயம் பரிசுத்தமாயிருந்தது. பரிசுத்தமான மனம் எங்கே உள்ளதோ, அங்கே இயற்கை பாதிப்பை ஏற்படுத்தாது. இப்படி 12 ஆயிரம் தேவஆண்டுகள் விரதம் அனுஷ்டித்தீர்கள். உங்கள் மனம் முழுவதும் என்னைப் பற்றிய சிந்தனையே தவிர வேறில்லை. அப்போதும், நான் உங்களுக்கு காட்சி தந்து, என்ன வரம் வேண்டுமெனக் கேட்டேன். நீங்கள் வைகுண்டம் வர விரும்புவீர்கள் என எண்ணினேன். ஆனால், நீயோ, பரந்தாமா, நீ என் வயிற்றில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்றாய். நானும் சம்மதித்தேன்.
அதன்பின் நீங்கள் தவ வாழ்க்கையை நிறுத்தி விட்டு இல்லறத்தில் புகுந்தீர்கள் நான் உங்கள் வயிற்றில் பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாய் பிறந்தேன். அடுத்த பிறவியில், நீங்கள் காஷ்யபர் – அதிதி என்ற தம்பதியராய் பிறந்தீர்கள். அந்தப்பிறவியில் நான் உபேந்தி ரன் என்ற பெயரில் உங்களுக்கு பிறந்தேன். இப்போது கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்தி ருக்கிறேன். நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியது தான். பல பிறவிகளில் என்னை அன்புடன் மகனாய் வளர்த்த உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். கம்சனிடமிருந்து உங்களைக் காப்பது என் கடமை.
நீங்கள் உடனே என்னை கோகுலத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கே வசுதேவரின் நண்பர் நந்தகோபனுக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்க என்னை நந்தகோபரின் மனைவி யசோதையிடம் கொடுத்து வளர்க்க சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு சாதாரண குழந்தையாக உருமாறி விட்டார்.
பின்னர், ஒரு குழந்தை பிறந்துள்ள நினைவும், தன்னை கோகுலத்துக்கு கொண்டு போகச் சொன்னதையும் தவிர மற்ற எல்லாவற்றையும், தன் தாய் தந்தைக்கு மறக்க செய்து விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். கனவிலிருந்து விழித்தவர் போன்ற வசுதேவர், குழந்தையைப் எடுத்துப் போகும் ஏற்பாட்டைச் செய்தார். அவர் குழந்தையைத் தொட்டாரோ இல்லையோ, கையிலிருந்த விலங்குகள் கழன்றுவிட்டன. சிறைக்கதவுகள் தானாகத் திறந்தன. காவலர்களோ மயக்கம் வந்தது போன்ற தூக்கத்தில் கிடந்தனர். அங்கு கிடந்த ஒரு பழைய கூடையில் தன் அங்கவஸ்திரத்தை விரித்தார். குழந்தையை அதற்குள் வைத்தார். பெண்
குழந்தை பெற்றிருந்த யசோதை, மயக்கத்தில் இருந்து எழவில்லை.
அவளுக்கு தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற உணர்வு இருந்ததே தவிர, என்ன குழந்தை பிறந்தது என்று பார்ப்பதற்குள் மயக்கமாகி விட்டாள். சப்தமின்றி, வசுதேவர் கண்ணனை யசோதையின் அருகில் கிடத்தினார். பெண் குழந்தையை எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு சிறைக்கு வந்து சேர்ந்தார். சந்தேகமின்றி இருக்க விலங்குகளை பூட்டிக் கொண்டார். குழந்தை வீறிட்டு அழவே, காவலர்கள் விழித்தனர்.
தேவகிக்கு குழந்தை பிறந்து விட்டதென்ற செய்தி கம்சனுக்கு பறந்தது. மிகப்பெரிய வாளுடன் வசுதேவர் பூட்டப்பட்டிருந்த அறைக்குள் புகுந்தான் கம்சன். என் உயிரைக் குடிக்க வந்த அந்த எமன் எங்கே? அவனுக்கு எமனாய் நான் வந்திருக்கிறேன், என்ற கம்சனின் பாதத்தில் விழுந்தாள் தேவகி.
அண்ணா, ஏதோ ஒரு அசரீரி சொன்னது என்பதற்காக, என் ஆண் குழந்தைகளையெல் லாம் கொன்றாய். இப்போது பிறந்திருப்பது பெண். அசரீரியின் வாக்கு உண்மையே என்றாலும் கூட, என் வயிற்றில் பிறக்கும் எட்டாவது ஆண்பிள்ளையால் தான் உனக்கு மரணமே தவிர, பெண்ணால் இல்லை. பார்த்தாயா, இது பெண் குழந்தை, என குழந்தையை நீட்டினாள்.
கொடிய உள்ளம் கொண்ட கம்சன், அவள் சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை. குழந்தையின் கால்களைப் பிடித்தான். தலை யை சுவரில் ஓங்கி அடித்தான். அவ்வளவு தான், மதுராபுரியே கிடுகிடுக்கும் வகையில், ஓங்கி ஒலித்த சிரிப்புடன் ஒய்யாரமாய் வளர்ந்து நின்றது அந்தக் குழந்தை. அந்த நடுநிசியில் சூரியன் உதித்து விட்டது போல பிரகாசம். கையில் சங்கு, சக்கரம் மின்ன, திரிசூலம், வாள் பளபளக்க, மண்டை ஓடுகள் மாலையாய் கழுத்தை அலங்கரிக்க அந்தப் பெண் ஆங்காரமாய் சிரித்தாள்.
அவள் விஷ்ணுவின் சகோதரி என்பதாலும், உலகைக் காக்கப்போகும் ரட்சகி என்பதாலும் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல், வானத்து தேவர்களும், கந்தர்வர்களும், கிங்கரர்களும் அந்த தேவியைத் தரிசிக்க பரிசுப் பொருள்களுடன் வந்து அவளை பணிந்தார்கள். துர்க்கை கர்ஜித்தாள்.
கொடியவனே, உன் தங்கைக்கு நீ இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா, மனிதனாய் பிறந்தவன் அழிவது உறுதி என்று தெரிந்திருந்தும், இவ்வுலகம் உள்ளளவும் உயிர் வாழப் போவதாக எண்ணி, அப்பாவி குழந்தைகளை கொன்றாயே, உன்னைக்கொல்ல போகிறவன் பிறந்து விட்டானடா. அவன் ஒளிந்து வளர்கிறான் உன் அழிவு நெருங்கிவிட்டது இவர்க ளை விடுதலை செய்து ஒரு புண்ணியத்தையாவது தேடிக்கொள், என்றாள். அத்துடன் அவள் மறைந்து  விட்டாள். கம்சனின் மனம் அந்தக்கணமே மாறிவிட்டது. அம்மா தேவகி, என் அன்பு சகோதரியே, உனக்கு எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்து விட்டேன். என் கொடுமைக்கு பலனாக பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) என்னைப் பற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே என்னை இருவரும் மன்னிக்க வேண்டும் என்று கூறி வசுதேவரின் கால்களில் விழுந்து வணங்கினான்.
தன்னையுமறியாமல் அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது. வசுதேவர் அவனைத் தேற்றும்படியான சூழ்நிலை உருவாகி விட்டது. அதன்பின் கம்சன் ஒருநாள் அரசவையில் வீற்றிருந்தான். அவனுடைய சகாக்கள் வந்தனர். கம்சா! நீ ஏதோ தியாகி போல உன் தங்கையை விடுவித்து விட்டாய். உன்னைக்கொல்ல பிறந்திருப்பவன் விஷ்ணு என்பதை நீ அறிவாய். எங்கோ, அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகிறது. அவன் வளர்ந்து அதன்பிறகு தானே உன்னைக் கொல்ல வருவான். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டாயோ? அசரீரி சொன்னதை ஒரு பொருட்டாக நீ மதிக்கவில்லை.
இதன் பலனை நீ அனுபவிக்கத்தான் போகிறாய் என கம்சனை எச்சரித்தனர். உடனே கம்சன் அரசவையைக் கூட்டி நமது அதிகார எல்லைக் குள் கடந்த பத்து நாட்களுக்குள் பிறந்துள்ள எல்லாக் குழந்தைகளையும் கொன்று விடுமாறு கூறினான். இந்த தகவல் வசுதேவருக்கு தெரிய வந்தது. நந்தகோபருக்கு இதை தெரிவித்து, கோகுலத்தில் இருக்கும் தன் குழந்தைகளான கிருஷ்ணரையும், பலராமரையும் பாதுகாக்க ஏற்பாடு செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.
இந்நேரத்தில், தங்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகவே நம்பிவிட்ட கோகுலத்த லைவர் நந்தகோபரும், அவர் மனைவி யசோதையும் குழந்தைக்கு ஜாதகம் கணிக்க முடிவெடுத்தனர். தன் மகன் கிருஷ்ணரின் ஜாதக கணிப்பு திருநாளை, மலை போல் செல்வத்தை குவித்து வைத்து கொண்டாடினார் நந்தகோபர். பசுக்களையும், பொன்னையும், நவரத்தினங்களையும், தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என வேதம் சொல்கிறது. பிராமணர்களுக்கு இத்தகைய தகுதி இருந்தால், அவர்களுக்கு தங்கள் பொருளை தானமாகக் கொடுத்து, தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டனர் கோகுலவாசிகள். நந்தகோபர் மிக அதிகமாகவே தானம் கொடுத்தார். ஏனெனில் அவர் வீட்டில் லட்சுமியின் மணவாளனே பிறந்திருந்ததால், செல்வத்திற்கு ஏது குறை.
கிருஷ்ணனுக்கு மிக சிறப்பாக ஜாதக் கணிப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது இதன் பிறகு, கோகுலத்தின் சார்பில் கம்சனுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகையை செலுத்த நந்த கோபர் மதுராபுரி வந்தடைந்தார். அவரை வசுதேவர் சந்தித்தார். குழந்தைகளைக் கொல்ல கம்சன் முடிவெடுத்திருக்கிறான் என்ற விபரத்தை நேரடியாகச் சொல்லி அவரை பயமுறுத் தாமல், கோகுலத்தின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் வரப்போகிறது. நீங்கள் கவனமாக இருப்பது நல்லது என்று மட்டும் சொல்லி வைத்தார். வசுதேவர் க்ஷத்திரியர், நந்தகோபர் வைசியர். இருப்பினும், இவர்கள் சிறந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர். தன் நண்பர், தனக்கு தந்த எச்சரிக்கையை மறக்காத நந்தகோபர் மிக கவனமாகவே இருந்தார். இதற்குள் கம்சன் குழந்தைகளைக் கொல்வதற்குரிய ஏற்பாட்டை செய்து முடித்து விட்டான்.
சூன்யக்காரியான பூதனா என்பவளை அழைத்தான். குழந்தைகளை கொல்லும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தான். இப்படிப்பட்ட சூன்யக்காரிகளை கேசரீ என்பார்கள். சூன்யம், தெய்வ வழிபாட்டில் ஊறிப்போனவர்களை தாக்காது. கோகுலத்திலும் அதுவே நிகழ்ந்தது.
பூதனா, கோகுலத்திற்குள் நுழைந்தவுடன் தன்னை பேரழகியாக மாற்றிக்கொண்டாள். முகத்தில் கனிவை படரவிட்டுக் கொண்டாள். அவளது அழகும், போலி சாந்தமும் அங்கிருந்த வர்களின் கண்களை ஏமாற்றி விட்டது. அவ்வூர் மக்கள் அந்தப் புதியவளை சந்தேகக் கண்ணுடன் பார்க்கவில்லை. நல்லவர்களின் கண்களுக்கு கெட்டது கூட நல்லதாகத்தான் தெரியும்,
இதைப் பயன்படுத்திக் கொண்டு தன் மார்பில் நஞ்சை தடவி பல குழந்தைகளை அவர்களது பெற்றவர்கள் அறியாமல் கொன்றாள். அவள் நந்தகோபரின் மாளிகைக்குள் நுழைந்தாள். அவள் மீது சந்தேகம் கொள்ளாத வாயிற்காவ லர்கள், அவள் யசோதையைப் பார்க்க வந்திருக்கலாம் எனக் கருதி தடுக்கவில்லை. யாரும் அறியாமல், கிருஷ்ணன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். குழந்தையை பார்த்ததும் பூதனாவின் மனதில் ஏதோ சஞ்சலம்.
அது சாதாரண குழந்தையாக தெரியவில்லை. ஏதோ ஒரு சக்தி அதனுள் மறைந்து கிடப்பதை புரிந்து கொண்டாள். இருப்பினும், கம்சனின் கட்டளையை அவளால் மீற முடியுமா? குழந்தையை மடியில் வைத்தாள். அவள் மார்புக்காம்பை வாயில் திணித்தாள். கிருஷ்ணன் விஷப்பாலோடு அவளது உயிரையும் சேர்த்து குடித்தான்.
அவள் அலறினாள். கோகுலத்தையே அதிர வைத்தது அந்த அலறல். அது மட்டுமா, அவளது அசுர உருவம் வெளிப்பட்டது. 12 மைல் நீளத்துக்கு அவளது உடல் நீண்டது. பூதனாவின் உடலை பார்க்கவே பயங்கரமாக இருந்தது. கோகுலத்தையே அதிரச்செய்த அவளது அலறல் கேட்டு, யசோதையும் ரோகிணியும் இதர கோபியர்களும் ஓடிச் சென்று கிருஷ்ணரை தூக்கினர். தங்கள் அன்புக்குழந்தையின் உயிர்காப்பாற்றப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு கண்ணேறு பட்டு விட்டது என எண்ணி பசுவின் வாலைப்பிடித்து குழந்தையின் உடலைச்சுற்றி திருஷ்டி கழித்தார்கள். பசுக்கன்றுகளின் பாதத்தில் ஒட்டியிருந்த தூசை குழந்தையின் உடல் மீது தூவினார்கள். இதன் பிறகு கிருஷ்ணரை நாராயணின் 22 திருநாமங்கள் சொல்லி பாதுகாப்பு தருமாறு வேண்டினார்கள்.
நாராயணின் 22 நாமங்களை சொல்வோர் அருகில் எந்த கெட்ட சக்திகளும் நெருங்குவதில்லை என நம்பிய கோகுல மக்கள், மணி மான், யக்ஞர், அச்யுதா, ஹயக்ரீவர், கேசவா, விஷ்ணு, உருக்ரமா, ஈஸ்வரா, சக்ரதாரி, கதாதரா, மதுசூதனா, குபேந்திரா, தாரக்ஷயா, ஹலாதரா, ஹ்ருஷிகேசா, நாராயணா, ப்ருஷ்ணிஹர்பா, யோகேஸ்வரா, புருஷோத்தமா, கோவிந்தா, மாதவா, வைகுண்டாதிபதி, என்ற நாமங்களால் அவரைப் பூஜித்தனர்.
இந்த நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பூதனா கொடுமைக்காரியாக இருந்தாலும் கூட, குழந்தைகளை கொன்றவள் என்றாலும் கூட, கடைசி நேரத்தில் கிருஷ்ணருக்கு பாலூட்டிய காரணத்தால் அவள் வைகுண்டத்தை அடைந்தாள். அவளுக்கும் முக்தியும் கிடைத்தது. அவளது  உடலை கோகுலவாசிகள் எரித்த போது, அதிலிருந்து நறுமணம் கிளம்பியது.

Leave a Comment