குலச்சிறையார் நாயனார்.

பாண்டிய நாட்டில் உள்ள மணமேற்குடி என்னும் ஊரில் சிவனடியார்கள் பலர் வாழ்ந்து வந்தார்கள். சிவனடியார்களின் உயர்குடியில் பிறந்தவர்களில் ஒருவர் குலச்சிறையார். இளமைப்பருவம் முதலே சிவனின் பாதக்கமலங்களைப் பற்றி கொள்வதிலும் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதிலும் விருப்பமுற்று இருந்தார்.

உயர் குலத்தில் பிறந்தாலும் அவரை நாடிவரும் சிவனடியார்கள் எக்குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை இன்முகத்தோடு உபசரிப்பதைப் பெரும் பணியாக செய்துவந்தார். திருநீறும், ருத்ராட்சமும் அணிந்து வந்த சிவனடியார்களின் பாதத்தைப் பற்றி வழிபடுவதில் பெருமகிழ்ச்சி கொண்டார்.

பாண்டிய மன்னனான கூன்பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணிபுரிந்த இவர் சமயஞானம் தான் சகல நலன்களுக்கும் முதன்மையானது என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார். ஆனால் இவர் காலத்தில் பாண்டியநாடு சமண சமயத்தை அதிகமாக கொண்டிருந்தது. பாண்டிய மன்னனும் சமணர்கள் வஞ்சத்தால் அதை ஆதரித்தார். அதனால் மக்கள் அனைவரும் அந்த மதத்தை தழுவினார்கள். ஆனால் சிவனின் பாதக்கமலங்களை விடாமல் பற்றிய குலச்சிறையாரும், பாண்டிமாதேவி மங்கையர்கரசியும் மட்டும் சைவசமயத்தைப் பற்றியிருந்தார்கள்.

சைவ சமயத்தை பாண்டிநாட்டில் பரப்பவேண்டும் என்று நினைத்த குலச்சிறையார் அரசியாருடன் ஆலோசித்தார். அப்போது திருஞான சம்பந்தரை சைவ சமயமும் தமிழும் பாண்டிநாட்டில் பரப்ப அழைக்கலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள். பாண்டிமாதேவியும் சம்மதித்து திருஞான சம்பந்தரை அழைத் திருந்தார்.அரசியின் கோரிக்கையை ஏற்று வந்திருந்த திருஞான சம்பந்தரது வருகையை விரும்பாத சமணர்கள் அவர் தங்கியிருந்த குடிலுக்கு தீமூட்டினார்கள். அதிலிருந்து குலச்சிரையரும் அரண்மனை மெய் காவலர்களும் திருஞானசம்பந்தரை காப்பாற்றினர்.

மக்கள் செய்யும் தவறு மன்னனை சாரும் என்பதால் சமணர்கள் மூட்டிய தீ வெப்புநோயாக மன்னனைத் தாக்கிற்று. வைத்தியர்கள் எவ்வளவு வைத்தியம் செய்தும் பலனற்று போனது. இறுதியாக பாண்டிமாதேவி மீண்டும் திருஞானசம்பந்தரை அழைக்க அவர் மறுப்பு சொல்லாமல் திருநீற்றுபதிகம் பாடி திருநீற்றைத்தந்து அரசனின் வெப்புநோயை தீர்த்தார்.அதோடு மட்டுமன்றி கூன்பாண்டியனாக இருந்த மன்னனின் கூனல் முதுகை சீராக்கி நின்றசீர் நெடுமாறன் என்ற சிறப்பு பெயரையும் வழங்கினார்.

மன்னரும் சைவ சமயத்திற்கு மாறினார். மன்னனை சைவசமயத்துக்கு மாற்றியதால் கோபம் கொண்ட சமணர்கள் ஞானசம்பந்தரை வாதத்துக்கு அழைத்தார்கள். இருதரப்பினர் முன்னிலையில் வாதம் துவங்கியது. நெருப்பில் ஏடுகளை விட்டு எரியாமல் இருக்க வேண்டும் என்று சொன்ன சமணர்களின் ஏடுகள் எரிந்து சாம்பலானது. ஆனால் திருஞான சம்பந்தரின் ஏடுகள் எரியாமல் பத்திரமாக இருந்தது. அனல் வாதத்தில் ஞானசம்பந்தர் வெற்றிபெற்றார். இரண்டாவதாக தண்ணீரில் ஏடுகளை விடுவோம்.அது மூழ்கினால் அரசன் எங்களை கழுவேற்றலாம் என்ற சமணர்கள் ஓடும் நீரில் தங்கள் ஏடுகளை விட்டார்கள். அது நீரின் போக்கில் அடித்து சென்றுவிட்டது. ஆனால் திருஞான சம்பந்தரின் ஏடுகள் எதிர்திசையில் மிதந்து வந்தது. திருஞான சம்பந்தர் வென்றுவிட்டார்.

இவ்வாறு போட்டியில் தோற்றுவிட்டமையால் சமணர்கள் கூறியது போன்றே கழுவில் ஏற்றப்பட்டனர். இவ்வாறு சைவசமயமும் தமிழும் உலகறிய செய்வதில் முக்கியபங்கு வகித்தவர் குலச்சிறையார் ஆவார். ஒட்டக்கூத்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இவரை பெருநம்பி குலச்சிறையார் என்று பதிகத்தில் பாராட்டியிருக்கிறார்கள்.

குலச்சிறையார் இறுதிவரை சிவனது பாதக்கமலங்களைப் பற்றியபடி இறைவனுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு புரிந்தார். இதனால் ஈசன் திருவடிபேறு பெற்று சிவபுரம் சார்ந்தார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராக அருளப்பெற்றார். சிவாலயங்களில் ஆவணி மாதம் அனுச நட்சத்திரத்தில் குருபூசை நடைபெறுகின்றது.

குலச்சிறைய நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

Leave a Comment