மானக்கஞ்சாற நாயனார்.

செங்கரும்பின்சாறு ஆறென பாயும் சோழவளநாட்டில் காஞ்சாறு என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் மானகாந்தன் என்னும் சிவனடியார். இவரது இல்லத்தரசியர் கல்யாணசுந்தரி ஆவர்.வளமும் செல்வமும் நிறைந்த அடியார்.தம்மை நாடிவரும் அடியார்களுக்கு வேண்டும் பொன் பொருளை இல்லையெனாது வழங்கி சிறப்பிப்பார்.

எக்குறையும் இல்லாத அடியார்க்கு ஒரு சிறுகுறை மட்டும் இருக்க நேர்ந்தது. தமக்கு மக்கட்பேறு இல்லாத குறைதான் அச்சிறு குறை. எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனிடம் தமக்கு ஓர் வாரிசை நல்கும்படி வேண்டிப்பணிந்தார். தம் அடியார்க்கு தம்மையே உகந்து அளிக்கும் எம்பெருமான் அழகில் மயிலை போன்று ஒரு பெண்மகவை அடியாருக்கு வாரிசாக தந்தருளினார்.

அடியாரின் செல்வ வளம் போன்றே பெண்மகவும் கிடுகிடுவென தேவர்களும் வியந்து போற்றும் பேரழகுடன் வளர்ந்து நின்றது.பெண் திருமணபருவம் எய்திவிட்டமையால் திருமணம் செய்விக்க மானக்கஞ்சாறர் ஆயத்தமானார். அறுபத்துமூவரில் ஒருவரான ஏயர்கோன் கலிகாமர் என்னும் அடியார் கஞ்சாறரின் மகளை மணம் செய்விக்க நிச்சயம் செய்து திருமணத்கிற்கான நாளும் குறித்துவைத்தனர்.

திருமணநாள் நெருங்கியதும் ஊரே விழாக்கோலம் பூண்டது. வீதியெங்கும் வாழைமரமும், செங்கரும்பும், மாவிலை தோரணமும் அணிவகுத்து நின்றன. மங்கள வாத்தியங்கள் விண்ணதிர முழங்கிற்று. மணமகன் அழைக்கப்பெற்று அவரது உறவினர்களோடு விருந்தோம்பல் செய்வித்து மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் வடபுல மாவிரதையர் எனும் பிரிவை சார்ந்த சிவனடியார் ஒருவர் திருமணமாளிகையில் எழுந்தருளினார். இவர்களது வழக்கம் பெண்ணின் கூந்தலால் திரிக்கப்பட்ட பட்டையான முப்புரிநூலை மார்பில் அணிவர். அப்படிப்பட்ட சிவனடியாரை கண்டதும் கஞ்சாறர் விரைந்துவந்து அடியாரை வணங்கி பணிந்துநின்றார். சிவனடியாரும் இம்மாளிகை விழாக்கோலம் பூண்டுள்ளதே என்ன காரணம் என வினவினார். கஞ்சாரரும் எமது மகளுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது என்றார். உள்ளே சென்று தம் மகளை அழைத்துவந்து சிவனடியார் திருவடியை வணங்கி பணிந்து ஆசிபெறும்படி பணத்தார். மணமகளும் அவ்வாறே திருவடியை பணிந்து சிவனடியாரின் ஆசியையும் பெற்றார். சிவனடியாரின் பார்வை மணமகளின் கூந்தல் மீது விழுந்தது. கஞ்சாறரிடம் சிவனடியார் தங்கள் மகளின் கூந்தல் மிக நீளமாக உள்ளது. அதனை எமக்கு அளித்தால் யாம் எம் மார்பில் அணியும் முப்புரிநூல் செய்ய ஏதுவாக இருக்கும் என்றார்.

கஞ்சாறர் மறுப்பேதும் கூறாமல் மணமகளின் மலர்சூடிய கூந்தலை அடியோடு அரிந்து சிவனடியார் திருக்கரங்களில் அளித்தார். சிவனடியாரும் அங்கிருந்து புறம் சென்றார். சிவனடியார் ஒருவர் வந்துள்ள சேதி அறிந்த ஏயர்கோன் கரிகாமர் அவரது திருவடிபணிந்து அருள்பெற மணமகள் மாளிகையை அடைந்தார்.ஆங்கு தமக்கு இல்லத்தரசியாக வரவிருக்கும் மணமகள் கூந்தல் இல்லாது இருப்பதை கண்டார். கஞ்சாறர் மணமகனை நெருங்கிவந்து தாம் மணம்செய்ய இருக்கும் எம் மகளின் கூந்தலை தங்கள் அனுமதியின்றி சிவனடியார் ஒருவருக்கு தானமாக தந்துவிட்டேன். எம்மை மன்னித்து அருளுங்கள் என்றார்.

அதைக்கேட்ட கலிகாமர் சிவனடியாருக்கு தானம் செய்விக்க எமது அனுமதியை பெறவேண்டிய நிலைக்கு தங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளிய அடியேன் பெரும்பாவியானேன்.தாங்கள் எம்மிடம் மன்னிப்பும் கேட்க செய்துவிட்டு கொடும்பாவியும் ஆகிவிட்டேன். இறைவா எமக்கு மன்னிப்பே கிடையாது என கதறினார்.

அடியாரின் அழுகையை தாங்க மனமின்றி விடைமேல் உமையவளோடு வந்தருளி திருக்காட்சி தந்து மணமக்களை வாழ்த்தி மணமகளின் கூந்தலை மறுபடியும் வளரச்செய்வித்தார்.திருமண நாளென்றும் பாராமல் மகளின் கூந்தலை அரிந்து அளித்த மனக்கஞ்சாறரை சிவபுரத்தே தம் திருவடிப்பேற்றை அடையும் வழியை அருளினார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகும் அருளையும் வழங்கினார்.

மானக்கஞ்சாற நாயனார் குருபூசை மார்கழி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

மானக்கஞ்சாற நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.