நமிநந்தியடிகள் நாயனார்.
சோழ நாட்டில் திருவாரூக்கு அருகில் இருந்த ஏமாப்பேருரில் அவதரித்தவர் நமிநந்தி பெருமான். ஏமாப்பேரூர் தற்போது திருநெய்ப்பேர் என்று வழங்கப்படுகிறது.
நமிநந்தியர் சிவபெருமானிடம் மாறாத பக்தியும் சிவகைங்கரியத்தில் இடைவிடாத ஈடுபாடும் உடையவராக விளங்கினார். சைவமறைநூற் பயிற்சியும் ஒழுக்க சிறப்பும் இரவும் பகலும் இறைவனின் திருவடியையே சிந்தித்து வாழும் இயல்பும் கொண்டிருந்தார் அவர்.
அவர் தினமும் தன்னுடைய இல்லத்தில் சிவ வழிபாட்டினை முடித்து விட்டு, அருகிலிருந்த திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனான வீதிவிடங்கரை தரிசித்து, பகலில் சிவலாயத்தில் தொண்டுகள் செய்து, இரவு வீடு திரும்பி சிவவழிபாடு மேற்கொண்டு உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திருவாரூர் கோவிலில் பல சந்நிதிகள் உண்டு. அதில் திருக்கோவிலின் மதிலுக்கு அருகில் திருவாரூர் அறநெறி என்பதுவும் ஒன்று. அங்கிருக்கும் இறைவனாருக்கு அறநெறியப்பர் என்பது திருப்பெயராகும்.
அவ்வாறு ஒருநாள் திருவாரூர் கோவிலில் பகலில் தொண்டுகள் செய்து கொண்டிருந்தார் நமிநந்தியடிகள். மாலைவேளை நெருங்கியது. அப்போது நமிநந்தியடிகள் அறநெறியப்பருக்கு திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு செய்ய விருப்பம் கொண்டார்.அவரிடம் திருவிளக்கேற்ற நெய் இல்லை. அவரின் இல்லமோ தொலைவில் இருந்தது.ஆதலால் திருக்கோவிலின் அருகே இருந்த இல்லத்தில் நெய்யைப் பெற்று அறநெறியப்பருக்கு திருவிளக்கு ஏற்ற எண்ணம் கொண்டார்.
அச்சமயத்தில் பிறநெறிபினர் பலர் திருவாரூரில் வாழ்ந்து வந்தனர். நமிநந்தியடிகள் திருவாரூர் திருக்கோவிலின் அருகில் இருந்த ஒரு இல்லத்திற்குச் சென்று அறநெறியப்பருக்கு விளக்கு ஏற்ற நெய் கொடுத்துதவுமாறு வேண்டினார்.
அவ்வீடு ஓர் பிறநெறியினர் வீடு.
ஆதலால் அவர்கள் நெய் கொடுக்க மறுத்ததோடு “உங்கள் இறைவன்தான் கையில் தீயை வைத்துள்ளாரே. அவருக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்? அவ்வாறு விளக்கு ஏற்ற வேண்டுமாயின் நெய்க்குப் பதிலாக தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றுங்கள்.” என்று ஏளனம் செய்தனர்.
பிறநெறியினர் கூறியதைக் கேட்டதும் நமிநந்தியடிகள் மனம் கலங்கினார்.
அறநெறியப்பரின் சந்நதியை அடைந்து, “இறைவா, பிறநெறியினர் கூறிய வார்த்தைகளால் என்னுடைய மனம் மிகவும் வருத்தமுற்றுள்ளது. இம்மொழிகளைக் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?” என்று மனதிற்குள் வேண்டினார். அப்போது இறைவனார் அசீரியாக, “வருந்தாதே. திருக்குளத்தில் உள்ள நீரை முகர்ந்து வந்து விளக்கு ஏற்று.” என்று அருளினார். அதனைக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்த நமிந்தியடிகள் திருக்கோவிலிருந்த தேவாசிரிய மண்டபத்தை அடுத்து உள்ள சங்குத் தீர்த்தம் என்ற திருக்குளத்தை நோக்கி ஓடினார்.நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி திருக்குளத்து நீரை முகர்ந்து வந்து விளக்கில் ஊற்றி, திரியை இட்டு விளக்கை ஏற்றினார். விளக்கு முன்பு சுடர்விட்டதை காட்டிலும் பிரகாசமாய் சுடர் விடலாயிற்று.
இறையருளால் பல நாட்களாக நமிநந்தியடிகள் நீரால் விளக்கு ஏற்றியதைக் கேள்வியுற்ற சோழ மன்னன், திருவாரூர் திருக்கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பினை நமிநந்தியாருக்கு வழங்கினான்.
அதனை ஏற்றுக்கொண்ட நமிநந்தியடிகள், வீதிவிடங்கர் திருவிளையாடலை காட்டும் விழாவையும் பங்குனி உத்திர விழாவையும் சிறப்பாக நடத்தினார்.
ஆண்டுக்கொருமுறை வீதிவிடங்கர் ஏமாப்பேரூரை அடுத்த மணலி என்ற ஊருக்கு எழுந்தருளுவது வழக்கம். அந்த ஆண்டும் வீதிவிடங்கர் மணலிக்கு வழக்கம்போல் எழுந்தருளினார்.
அப்போது எம்பெருமானை வழிபட தொண்டர்களும் அன்பர்களும் என எல்லோரும் சாதிமத பேதமின்றி கலந்து கொண்டு இறைவனின் பேரருளை பெற்று அகம் மகிழ்ந்தனர். அவர்களுடன் நமிநந்தியடிகளும் கலந்து கொண்டு வீதிவிடங்கரை வழிபட்டார்.
மாலை வேளையில் வீதிவிடங்கர் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.
நமிநந்தியாரும் வீதிவிடங்கருடன் திருக்கோவிலுக்கு சென்றுவிட்டு வழிபாடு மேற்கொண்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
வீட்டுத் திண்ணையில் படுத்து விட்டார். அதனைக் கண்ட அவரது மனைவியார் வெளியே படுத்திருக்கும் காரணத்தை வினவினார்.
அதற்கு நமிநந்தியார் “மணலியில் எழுந்தருளிய வீதிவிடங்கரைத் தரிசிக்க சாதிமத பேதமின்றி மக்கள் எல்லோரும் கூடினர். ஆதலால் தூய்மை கெட்டுவிட்டது. நான் குளிப்பதற்கு தண்ணீர் கொண்டு வா. குளித்துவிட்டு வீட்டிற்குள் வருகிறேன்” என்றார்.
அவ்வம்மையாரும் கணவர் குளிப்பதற்காக தண்ணீர் கொண்டுவர உள்ளே சென்றார். அதுசமயம் இறையருளால் நமிநந்தியாருக்கு உறக்கம் உண்டானது.
அவருடைய கனவில் இறைவனார் தோன்றி “திருவாரூரில் இருப்பவர்கள் எல்லோருமே எம் கணத்தவர். அவர்களுடன் நீ கலந்து எம்மை தரிசித்தது பற்றி உனக்கு ஏன் இவ்வாறான மாறுபட்ட எண்ணம் ஏற்பட்டது? உண்மையை திருவாரூரில் நாளை காண்பாயாக.” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
பின்னர் குளிக்காமலே தமது இல்லத்திற்குள் சென்றார் நமிநந்திபெருமான்.
மறுநாள் காலையில் எழுந்து தமது இல்லத்தில்ல் வழிபாடு மேற்கொண்டுவிட்டு திருவாரூர் சென்றார்.
அப்போது அங்கிருந்தோர் எல்லோரும் சிவகணங்களாக காட்சியளித்தனர். அவர்களை கண்டதும் சிரம்மேல் கரம்குவித்து நிலந்தனில் வீழ்ந்து பலவாறு துதித்து வணங்கி வழிபட்டார்.
‘இந்த உண்மையை இதுவரையிலும் அறியாமல் போனேனே’ என்று வருந்தினார். ‘உண்மையை அறிவுறுத்தியதோடு இச்சிவகண காட்சியும் எமக்கு இறைவனின் கருணையால் கிடைத்ததே’ என்று மகிழ்ந்தார்.
அதுவரையிலும் சிவகணங்களாகக் காட்சியளித்தவர்கள் மீண்டும் பழைய உருவிற்கு வந்தனர்…
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அறநெறியாம் சைவநெறியை பின்பற்றி வாழ்ந்து நமக்கும் வழிகாட்டிய
நமிநந்தியடிகள் நாயனார் குருபூசை வைகாசி பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
நமிநந்தியடிகள் நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.
மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More
Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More
Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More
ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More
சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Leave a Comment