Arthamulla Aanmeegam

Thirunallar Pathigam Lyrics in Tamil | திருநள்ளாறு தேவாரப்பதிகம் திருநாவுக்கரசர்

Thirunallar Pathigam Lyrics in Tamil

திருநள்ளாறு தேவாரப்பதிகம் (Thirunallar Pathigam Lyrics) திருநாவுக்கரசர் தேவாரம் 6ம் திருமுறை 20ம் பாடல். சிவபெருமானை வணங்கி இன்னல்கள் நீங்க பெறுவோம்

திருநள்ளாறு தேவாரப்பதிகம் திருநாவுக்கரசர் தேவாரம் 6ம் திருமுறை 20ம் பாடல்

பண் :
பாடல் எண் : 1
ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
மாதிமைய மாதொருகூ றாயி னானை
மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
பொழிப்புரை :
ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய் , அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய் , விரும்பத்தக்க பார்வதி பாகனாய் , தாமரை மலர் மேல் உள்ள பிரமனும் , திருமாலும் காண முடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந் தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம் செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும் .

பண் :
பாடல் எண் : 2
படையானைப் பாசுபத வேடத் தானைப்
பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்
அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
பொழிப்புரை :
பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய் , முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்கு ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய் , காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

பண் :
பாடல் எண் : 3
படஅரவ மொன்றுகொண் டரையி லார்த்த
பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
யமுதாக வுண்டானை ஆதி யானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
மாமணியை மாணிக்காய்க் காலன் தன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
பொழிப்புரை :
படமெடுக்கும் பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய , மேலும் கீழுமாய் நிற்பவனை , பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை , வலிய பாம்பினைக்கொண்டு கடைந்த போது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை , எல்லோருக்கும் முற்பட்டவனை , இதழ்களிலே வண்டுகளின் ஒலி நிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை , சிறந்த இரத்தினம் போன்று கண்ணுக்கு இனியவனை . மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை , நள்ளாற்றில் உகந்தருளி யிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .
குறிப்புரை :

பண் :
பாடல் எண் : 4
கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்
கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்
சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்
சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப்
பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்
நட்டங்க மாடியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
பொழிப்புரை :
கட்டங்கம் என்ற படையைக் கையில் ஏந்திக் கங்கணம் அணிந்து , காதில் தோடு அணிந்து , உடம்பை எரித்த சாம்பலைத் தன் திருமேனியில் நிறையப் பூசி அழகனாய்த்தன் கையில் சூலம் ஏந்தி எலும்பு மாலையை நிறையச் சூடிப் பூதக்கூட்டமும் தானுமாய்ப் பரந்து சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

பண் :
பாடல் எண் : 5
உலந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்
ஒருநொடியி லுழல்வானை உலப்பில் செல்வம்
சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்
திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோகனைக்
கலந்தார்தம் மனத்தென்றுங் காத லானைக்
கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
பொழிப்புரை :
இறந்தவர்களுடைய எலும்பு மாலையை அணிந்து உலகமெல்லாம் ஒரு நொடிநேரத்தில் சுற்றிவருகின்றவனாய் , அழிவில்லாத பெருஞ்செல்வத்தைச் சிலந்திப் பூச்சிக்கு அருளிய தேவதேவனாய்ச் சிராப்பள்ளியில் உகந்தருளியிருக்கும் சிவலோகனாய்த் தன்னைக் கூடிய அடியவருடைய உள்ளத்தைத் தான் என்றும் விரும்புபவனாய்க் காஞ்சியில் ஏகம்பத்து உறைவானாய் , நறுமணம் கமழும் கொன்றைப் பூவினால் செயற்கை அழகு கொண்ட குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

பண் :
பாடல் எண் : 6
குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்
குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்
சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்
தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
பொழிப்புரை :
அடியவர் குடி என்ற பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்க வல்லவனாய் , பார்வதியை இடப்பாகனாய் , உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குக்களை நீக்கித் தன் திருவருளாகிய புனித நீரில் அவற்றை மூழ்குவிப்பவனாய் , வேதத்தை ஓதுபவனாய் , பிறை சூடிய சடையினனாய் , நடுக்கத்தைப் போக்கி இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு அறம் என்னும் உண்மைப்பொருளின் வழியில் வாழ்ந்து தன்னை வழிபடுபவருக்கெல்லாம் நன்மையை நல்கும் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

பண் :
பாடல் எண் : 7
பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்
புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
சிதைத்தானை யுதைத்தவன்தன் சிரங்கொண் டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
பொழிப்புரை :
பூவாய் விரியும் கொன்றை மலரைச் சூடிய சடையினனாய்ப் புறம்பயம் , புகலூர் , மறைக்காடு , வலிவலம் என்ற திருத்தலங்களை உகந்தருளிய பெருமானாய் , மற்றைய விலங்குகள் அஞ்சி ஓடுதற்குக் காரணமான வலிமையை உடைய களிற்றின் தோலை உரித்த வலிமையை உடையவனாய் , ஏனைய தேவர்களும் அஞ்சி ஓடுமாறு தக்கனுடைய வேள்வி முழுதையும் அழித்தவனாய் , அவனை ஒறுத்து அவன் தலையை நீக்கினவனாய் , நாவினின்றும் வெளிப்படுமாறு வேதத்தை ஓதுபவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

பண் :
பாடல் எண் : 8
சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற
வில்லானை யெல்லார்க்கும் மேலா னானை
மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்
காளத்தி யானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
பொழிப்புரை :
வேதங்களை ஓதுபவனாய் , ஒளி வீசும் பவளம் போன்ற செந்நிறத்தானாய்ப் பழைய அசுரருடைய மூன்று மதில்களையும் எரியச் செய்த வில்லினை ஏந்தியவனாய் , எல்லாருக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய்க் கல்லாலின் கீழே அமர்ந்து நால்வேதங்களின் அறத்தையும் மௌன நிலையில் நால்வருக்கு உபதேசித்தவனாய்க் காளத்தியையும் , கயிலை மலையையும் உகந்தருளிய பெரியவனாய்க் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

பண் :
பாடல் எண் : 9
குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை
அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ
ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்
சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்
சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும்
நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
பொழிப்புரை :
மேம்பட்ட முனிவனான மார்க்கண்டேயனுடைய குறை வாழ்நாள் ஆகிய சாபம் தீருமாறு திருவடியால் கூற்றுவனை வருத்திய பெருமானாய்ப் பகைமை உண்டாயினமையின் அசுரர் உடைய மும்மதில்களையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்தவனாய்த் தன்னை அடைந்து வேண்டியவர் வேண்டியதை ஈவானாய்ச் ` சிவ பெருமானே எம் இறைவன் ` என்று அவனையே வழிபட்டுக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு எல்லா நலன்களாகவும் விளங்கும் குண பூரணனாகிய நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

பண் :
பாடல் எண் : 10
இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க
இராவணனை யிருபதுதோள் நெரிய வூன்றி
உறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டே
யுற்றபிணி தவிர்த்தருள வல்லான் தன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
பொழிப்புரை :
தான் சாகா வரம் பெற்றானாகச் செருக்கிய இராவணனை அவன் தோள்கள் இருபதும் நசுங்குமாறு திருவடி விரலை ஊன்றியவனாய்ப் பின் அவன் உறவாகி இசைத்த இன்னிசை கேட்டு இரங்கி அவன் துயரைத் துடைத்தவனாய்த் தன்னை மறவாத அடியவர் மனத்து என்றும் நிலைபெற்றிருப்பவனாய்க் கொன்றை , வன்னி , ஊமத்தம் பூ இவற்றின் தேன் நிறைந்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

தோடுடைய செவியன் பாடல் வரிகள்

இடரினும் தளரினும் பாடல் வரிகள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Shiva
  • Recent Posts

    Today rasi palan 18/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் வியாழக் கிழமை சித்திரை – 05

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°° *சித்திரை - 05* *ஏப்ரல்… Read More

    18 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    2 weeks ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    1 month ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago

    Gomatha stotram in tamil | பசுமாடு ஸ்தோத்ரம்

    கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More

    2 weeks ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 month ago