அற்புதப் பத்து
திருப்பெருத்துறையில் அருளியது
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
மையலாய் இந்த மண்ணிடை வாழ்வு எனும்
ஆழியுள் அகப்பட்டு,
தையலார் எனும் சுழித் தலைப் பட்டு, நான்
தலை தடுமாறாமே ,
பொய் எலாம் விடத் திருவருள் தந்து, தன்
பொன் அடி இணை காட்டி
மெய்யன் ஆய் வெளி காட்டி, முன் நின்றது ஓர்
அற்புதம் விளம்பேனே!
ஏய்ந்த மா மலர் இட்டு முட்டாதது ஓர்
இயல்பொடும் வணங்காதே ,
சாந்தமார் முலைத் தையல் நல்லாரொடும்
தலை தடுமாறு ஆகி ,
போந்து ,யான் துயர் புகா வணம் அருள் செய்து,
பொள் கழல் இணைகாட்டி,
வேந்தனாய் வெளியே என முன் நின்றது ஓர்
அற்புதம் விளம்பேனே!
நடித்து மண்ணிடை, பொய்யினைப் பல செய்து
‘நான், எனது’ எனும் மாயும்
கடித்த வாயிலே நின்று, முன் வினை மிகக்
கழறியே திரிவேனை.
பிடித்து, முன் தின்று அப் பெரு மறை தேடிய
‘அரும் பொருள்’, அடியேனை
அடித்து அடித்து அக்காரம் முன்
தீற்றிய அற்புதம் அறியேனே!
பொருந்தும் இப் பிறப்பு இறப்பு, இவை நினையாது
பொய்களே புகன்று போய்:
சுருங் குழலினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியே கிடப்பேனை;
திருந்து சேவடி சிலம்பு அவை சிலம்பிடத்
திருவொடும் அகலாதே,
அருந் துணைவன் ஆய் , ஆண்டுகொண்டு அருளிய
அற்புதம் அறியேனே !
மாடும், சுற்றமும், மற்று உள போகமும்,
மங்கையர் தம்மோடும்
கூடி, அங்குள குணங்களால் ஏறுண்டு,
குலாவிய திரிவேனை,
வீடு தந்து, என் தன், வெந் தொழில் வீட்டிட
மென் மலர்க் கழல் காட்டி,
ஆடுவித்து, எனது அகம் புகுந்து ஆண்டது ஓர்
அற்புதம் அறியேனே!
வணங்கும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது,
மங்கையர் தம்மோடும்
பிணைந்து, வாய் இதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி, நான்
பித்தனாய்த் திரிவேனை,
குணங்களும் குறிகளும் இலாக் குணக் கடல்
கோமளத்தொடும் கூட,
அணைந்து வந்து, எனை ஆண்டுகொண்டு அருளிய
அற்புதம் அறியேனே!
இப் பிறப்பினில் இணை மலர் கொய்து, நான்
‘இயல்பொடு அஞ்சு-எழுத்து’ ஓதி,
தப்பு இலாது பொற் கழல்களுக்கு இடாது. நான்
தட முலையார் தங்கள்
மைப்புலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை,
மலர் அடி இணை காட்டி,
அப்பன், என்னை வந்து ஆண்டுகொண்டு, அருளிய
அற்புதம் அறியேனே!
ஊசல் ஆட்டும் இவ் உடல் உயிர் ஆயின
இரு வினை அறுத்து, என்னை,
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன்
உணர்வு தந்து, ஒளி ஆக்கி.
பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன்
பரம் பெருங் கருணையால்
ஆசை தீர்த்து அடியார் அடிக் கூட்டிய
அற்புதம் அறியேனே!
பொச்சை ஆன இப் பிறவியில் கிடந்து, நான்
புழுத்து அலை நாய்போல,
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து, அங்கு
இணங்கியே திரிவேனை,
இச்சகத்து அரி, அயனும் எட்டாத, தன்
விரை மலர்க் கழல் காட்டி,
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு, அருளிய
அற்புதம் அறியேனே!
செறியும் இப் பிறப்பு, இறப்பு இவை நினையாது,
செறி குழலார் செய்யும்
கிறியும், கீழ்மையும், கெண்டை அம் கண்களும்,
உன்னியே கிடப்பேனை,
இறைவன், எம்பிரான், எல்லை இல்லாத தன்
இணை மலர்க் கழல்காட்டி,
அறிவு தந்து, எனை ஆண்டு கொண்டு, அருளிய
அற்புதம் அறியேனே!
திருச்சிற்றம்பலம்
