பகை கடிதல் பாடல் வரிகள் | Pagai Kadithal Lyrics in Tamil

பகை கடிதல் (Pagai Kadithal) என்னும் பாடல் ஸ்ரீ பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது! “பகை கடிதல்” என்னும் “இந்தத் திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திருமயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்ல முடியும்

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1)

மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே (2)

இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே (3)

பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே (4)

அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே (5)

இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே (6)

எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே (7)

இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே (8)

இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே (9)

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே (10)

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் விளக்கம் கீழ்வருமாறு:

தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே! அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக

வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திருமுன்பிருந்தே மூல மந்திரப் பொருள் விரித்த குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திருமுகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக்குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு வருவாயாக!

பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என என்னும்படி ஒளிவளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!

பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமை பொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே! உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!

அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே! தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே! எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்) தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க!

மற்றொப்பாரில்லாத அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!

ஏழையாகிய அடியேனது இறைவா! குகா! என்று தியானிக்கும் என் எதிரில் வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழிபடைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!

மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!

சிவகுமார! என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!

அருள்மழை பொழியும் கருணை மேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!

 

திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அறிய தகவல்கள்

குமாரஸ்தவம் பாடல் வரிகள்

பண்பொழி ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி கோவில்

Leave a Comment