Pushpanjali Lyrics in Tamil

புஷ்பாஞ்சலி பாடல் வரிகள் – Pushpanjali lyrics in Tamil
ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள் ராஜேஸ்வரியே பூஜை செய்தால் தேசாதி தேசம் மெச்சும் ஒரு ராஜாப்போல வாழச் செய்வாள்
முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள் மோகனாங்கியை பூஜை செய்தால் இல்லை என்று சொல்லாமலே அவள் அள்ளி அள்ளி அளித்திடுவாள்
மருக்கொழுந்து கொண்டு வந்தே எங்கள் மனோன் மணியை பூஜை செய்தால் திருக்கோலம் கொண்டு அங்கே அவள் தினந்தோறும் வந்திடுவாள்
ஜாதிப்பூ கொண்டு வந்தே எங்கள் ஜோதி அவளை பூஜை செய்தால் ஓதி உணரா வித்தையெல்லாம் தந்து மேதை என்றாக்கி விடுவாள்
மகிழம்பூ கொண்டு வந்தே எங்கள் மாதங்கியை பூஜை செய்தால் மணமாகாத கன்னியர்க்கு திருமணம் அவள் நடத்தி வைப்பாள்.
தாழம்பூ கொண்டு வந்தே எங்கள் தாட்சாயணியை பூஜை செய்தால் வாழாப் பெண்ணை நாதனுடன் அவள் சேர்த்து வாழவைப்பாள்
பத்ரம் பல கொண்டு வந்தே எங்கள் பகவதியை பூஜை செய்தால் சித்தரைப் போல உள்ளவர்க்கு அவள் புத்ர பாக்கியம் செய்திடுவாள்
தாமரைப்பூ கொண்டு வந்தே எங்கள் ஷியாமளியை பூஜை செய்தால் தாமதம் செய்யாமலே அவள் தாலிப் பிச்சை தந்திடுவாள்
மல்லிகைப்பூ கொண்டு வந்தே எங்கள் மஹேஸ்வரியை பூஜை செய்தால் பில்லி சூன்யம் ஏவல் எல்லாம் அவள் பின்னாலே ஓடச்செய்வாள்
செண்பகப்பூ கொண்டு வந்தே எங்கள் அம்பிகையை பூஜை செய்தால் ஜென்மாந்திர பாவமெல்லாம் அவள் தீர்த்து விளக்கி ஓட்டிடுவாள்
பாரிஜாதம் கொண்டு வந்தே எங்கள் பார்வதியை பூஜை செய்தால் பால ரூபம் கொண்டுமே நம் பாவமெல்லாம் போக்கிடுவாள்
அரளிப்பூ கொண்டு வந்தே எங்கள் அபிராமியை பூஜை செய்தால் அளவில்லாத செல்வத்தை அவள் அகமகிழ தந்திடுவாள்
செம்பரத்தை கொண்டு வந்தே எங்கள் சண்டிகையை பூஜை செய்தால் தந்திரமாய் நம் கனவில் வந்து அவள் அந்தரங்கம் சொல்லிடுவாள்
மாதுளம்பூ கொண்டு வந்தே எங்கள் மாதாவை பூஜை செய்தால்
மங்கள வாழ்வு தந்து அவள் மனமகிழச் செய்திடுவாள்
மருதாணிப்பூ கொண்டு வந்தே எங்கள்
மீனாட்சியை பூஜை செய்தால் மாறாத மனத்துடன் பக்தி பாடல்கள் பாடச் செய்வாள்
பத்திரிப்பூ கொண்டு வந்தே எங்கள்
திரௌபதியை பூஜை செய்தால் அருள்கூர்ந்து நம்முள்ளே அவள் அனுக்ரஹம் செய்திடுவாள்
நீலாம்பரம் கொண்டு வந்தே எங்கள் நீலாயதாட்சியை பூஜை செய்தால் நித்யானந்தம் கொண்டுமே உலகில் நித்யவாசம் செய்திடுவாள்
மனோரஞ்சிதம் கொண்டு வந்தே எங்கள் மாலினியை பூஜை செய்தால் சுகமான ஸூகந்தமுடன் அவள் அவள் மனம் போல வீசச் செய்வாள்
சம்பங்கிப்பூ கொண்டு வந்தே எங்கள் சர்வேஸ்வரியை பூஜை செய்தால் சகல சௌபாக்கியம் தந்து அவள் சஞ்சலத்தை நீக்கிடுவாள்
சாமந்திப்பூ கொண்டு வந்தே எங்கள்  சங்கரியை பூஜை செய்தால் சத்தியமாய் வாழ்வினிலே அவள் சந்தோஷத்தை அளித்திடுவாள்
தும்பைப்பூ கொண்டு வந்தே எங்கள் துர்க்கையை பூஜை செய்தால் தரித்திரத்தை துரத்தி அவள் தனதான்யம் பொழிந்திடுவாள்
மந்தாரப்பூ கொண்டு வந்தே எங்கள் லலிதாம்பிகையே பூஜை செய்தால் பந்த பாசம் ஆசை நீக்கி அவள் வந்தனங்கள் செய்திடுவாள்
வெட்டி வேர் கொண்டு வந்தே எங்கள் புவனேஸ்வரியை பூஜை செய்தால் மட்டில்லாத மகிழ்ச்சியுடன் அவள் கட்டாயமாய் கிட்டிடுவாள்
கதிர்ப்பச்சை கொண்டு வந்தே எங்கள் காமாட்சியை பூஜை செய்தால் கடைக்கண்ணால் கடாட்சிக்க ஜன்மம் கடைத்தேற செய்திடுவாள்
கருமாரி சாம்பல் பெற்றால் கண்ட பிணி ஒடிவிடும்
இடைஞ்சல்கள் மாறி இன்பம் இல்லத்தை நாடிவரும்

Leave a Comment