சிவவாக்கியர் பாடல்கள் 481 – 500

என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமோ
உனது நாட்டம் எனதுநாவில் உதவி செய்வீர் ஈசனே (481)

எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே
எந்தைபூர ணப்பிரகாசர் ஏகபோகம் ஆகியே
நல்லின்ப மோனசாக ரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம் உண்டு நான் அழிந்து நின்றநாள் (482)

ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லிரேல்
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
வான நாடும் ஆளலாம் வண்ண நாடார் ஆணையே (483)

நித்தமும் மணி துலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ
அத்தனுக்கு இது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே (484)

எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லிரேல்
கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே (485)

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீற தானதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே (486)

பன்னிரண்டு நாள் இருத்திப் பஞ்சவன்னம் ஒத்திட
மின்னி அவ்வெளிக்குள் நின்று வேரெடுத்து அமர்ந்தது
சென்னியான தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆவரே (487)

தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டு மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்து நின்றது எவ்விடம்
இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே (488)

முத்திசித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அப்புலன்
அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே (489)

வல்லவாசல் ஒன்பதும் மருத்தடைத்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்பது இல்லையே (490)

வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம்
உண்டுளே அடங்கும் வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத் தொடுங்க வல்லிரேல்
பண்டுகொண்ட வல்லினை பறந்திடும் சிவாயமே (491)

ஓரெழுத்தி லிங்கமாகஓதும் அக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே (482)

தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபார பாரம் என்று பரிந்திருந்த பாவிகாள்
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே (493)

குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள் தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின்மா சறுக்கிலீர்
மண்டை ஏந்துகையரை மனத்திருத்த வல்லிரேல்
பண்டைமால் அயன் தொழப்பணிந்து வாழ லாகுமே (494)

கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே
மாடுகொண்டு வெண்ணெய் உண்ணும் மானிடப் பசுக்களே
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே (495)

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ (496)

நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ
தானதான தத்ததான நாதனான தான்னா (497)

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லதென்ற போத்து நல்லதாகி நின்றுபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே (498)

பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா
நாய்கள்பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே (499)

உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில் நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம் கெட்ட தடியனாகும் மனமேகேள்
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே (500)

Leave a Comment