Thaipusam 2024 – தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்

தைப்பூசம் / Thaipusam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள்.

ஜனவரி 25, 2024 வியாழக்கிழமை

தைப்பூச தினம். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.
சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பவுர்ணமியில் நிகழும். இந்தச் சிறப்பு மிக்க தினம் தான் தைப் பூச தினம்.

தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகிறது. சிவசக்தி ஜக்கியம் இந்த நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்று கூறப்படுகிறது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகிறது.

சிவசக்தி இணைந்த இந்தப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீர், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கிறோம். எனவே உலக இயக்கத்துக்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இந்தத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கிறோம். இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது.

இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள்.அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்கள் வழியாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள்.

உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினதும் தோற்றத்துக்கும் வாழ்வுக்கும் செயல்பாடுகளுக்கும் மறைவுக்கும் இயற்கையே காரணியாக அமைகிறது. இயற்கையை மீறி எதுவும் செயல்படமுடியாது. அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியாகிய இறைசக்தியை மீறிச் செயற்பட முடியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இயற்கையே விதியாக அமைகிறது. இதை வலியுறுத்துவதும் இந்தத்தைப்பூச நன்னாளின் ஒரு அம்சமாகும்.

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகிறார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகிறார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராஜப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குகிறது.

அத்துடன் வாயு பகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்த நாள் போற்றப்படுகிறது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளார் என்பதை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள் இந்தத் தைப்பூச நன்னாளாகும்.

சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத்தைப் பூச நன்னாளானது, முருகப் பெருமானுக்குரிய விசேஷ நாளாகவும் விளங்குகிறது. முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது. சிவன் அருளினால் தோன்றிய முருகன் அன்னை சக்தியையும் பெற்று சிவசக்தி பேரருள் மிக்கவராக இந்தத் தைப்பூச நாளில் திகழ்வதால் முருகன் கோவில்களில் அபிஷேகம், திருவிழா நிகழ்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்த நாளில் விரதமிருப்பார்கள்.

Thai poosam

முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்துக்கும் உள்ள இத்தகைய தொடர்பு காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.

சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூச நாளில் பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைய தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தில் முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தில் முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தில் காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

தைப்புச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டிவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ, வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகிறோம். இந்தத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும். இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் தைப்பூச நன்னாள் பல நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகிறது.

விரதம்

தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். அன்றைய தினம் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும். தைப்பூச நாளில் விரதமிருந்து உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். அல்லது அன்றைய தினம் முழுவதும் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று, சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். நாம் வேண்டும் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும் வல்லமை கொண்டது தைப்பூச விரதம்.

தைப்பூச சிறப்புகள்

* தைப்பூச நாளில்தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

* சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

* சிதம்பரத்துக்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை ரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே.

* தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தில் குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

* வடலூரில் தை மாதத்தில் தைப்பூச நாளில் ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் ராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள். காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

* வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில்தான் சமாதியானார். இதை குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூச நாளில் லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

* முருகப்பெருமானுக்கும் பூசம் உகந்தது. அவர் பூச நட்சத்திரத்தில் தான் வள்ளியை மணந்து கொண்டார். இந்நாளில் முருகனுக்கு காவடி எடுப்பதுண்டு.

* அகத்தியர் தந்த சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளை காவடி போல் கட்டி தூக்கி வந்தான் இடும்பன் என்ற அசுரன். அவனை தடுத்து நிறுத்தி, அந்த மலைகளை ஆட்கொண்டார் முருகபெருமான். “மலை போன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்; ஆனால், அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்து விடு. நீ உன் பாதையில் செல்” என்பதே காவடி தத்துவம். இதற்காகத்தான், முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுப்பார்கள்.

தொட்டதெல்லாம் துலங்கும்

‘தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்‘ என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற்கொள்ளப்பெறுகின்றன.

இந்தத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி. எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப் படைத்து, காத்து, அருளி, அழித்து, மறைக்கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்னம்பிக்கை தானே நமக்கு வந்து விடும்.

அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே தம்பதி சமேதரராக சிவாலயங்களுக்கும், முருகன் கோவில்களுக்கும் சென்று, எந்த சந்தர்ப்பத்திலும் பிரியாத வரம் வேண்டி வருவது நல்லது.
🙏வாழ்க வளமுடன் 🙏

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

கந்த குரு கவசம் பாடல் வரிகள்

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்

பண்பொழி ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி கோவில்

ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள்

 

Leave a Comment