தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Thanusu sani peyarchi palangal 2017-20

சிறு கண்ணோட்டம்:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பல பிரச்சனைகளை அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் தடை ஏற்படலாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடன் கொடுப்பதையும் ஜாமின் கையெழுத்து போடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானத்தை விட அதிகமாக செலவுகள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களால் தீமையே ஏற்படும். பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை செலுத்தவும். கணவன் மனைவி அன்பு சுமாராக இருக்கும், குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். போராட்டம் நிறைந்த காலமாகவே இது இருக்கும், நாட்கள் செல்ல இது படிப்படியாக குறையலாம். சனிக்கிழமை தோறும் காகத்திற்கு மதிய உணவு வைத்த பின் உண்ணவும். திருநள்ளாறு சென்று நீராடி எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. இதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.

(மூலம், பூராடம், உத்தராடம் 4ம் பாதம்)

(யே, யோ,பா,பீ, பு, பூ, த, ப, ட, பே) போன்ற எழுத்துகளை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களும் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்)

வான மண்டலத்தில் 9வது ராசியாக வலம் வரும் தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் – நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்குகிறார். இவருடைய ராசியில் ஜனனமான நீங்கள் தலைமை பதவி ஏற்கும் ஆற்றலும் எதிலும் உங்களை முன்னிலைபடுத்துவதிலும் முதன்மையானவர்கள் இயற்கையாகவே இறை சிந்தனை மற்றும் தெய்வ அனுகூலத்தையும் பெற்றவர்கள். மக்கள் மத்தியில் உங்களுக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் சமர்த்தர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் உடையவர்கள். செலவு செய்வதில் கணக்கு பார்க்காதவர்கள். உழைப்புக்கு உறைவிடமாகிய நீங்கள் எப்பொழுதும் ஓடி ஓடி உழைப்பவர்கள். அடிக்கடி மாற்றத்தை விரும்புவீர்கள்.

இத்தகைய உயர் குணமுடைய உங்களுடைய ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வது நன்மையும் தீமையும் கலந்த பலன் பயங்களாகவே நடந்து வரும். இதுவரை விரயச் சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களை உருவாக்கிய சனிபகவான் இப்பொழுது தேவையற்ற விரயங்களையும் நஷ்டங்களையும் வைத்யச் செலவுகளையும் குறைத்து ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் வாழ வைப்பார்.

எடுக்கும் முயற்சிகளில் போராட்டங்கள் வலுவாக இருந்தாலும் இறுதியில் அவை நாம் எதிர்பாராத வெற்றியில் முடியும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக அமையும். இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள் சற்று குறைந்து காணப்படும். எதையும் தைரியமாகவும் விவேகமாகவும் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பாராத வெற்றி அடைவீர்கள் என்பது நிச்சயம். பேச்சில் அதிக எச்சரிக்கை தேவை. பணவரவு தாராளமாக இருந்து வரும். அதற்கேற்ப செலவினங்களும் அதிகரித்துக் காணப்படும். தேவையற்ற பேச்சைக் குறைத்து உழைப்பை அதிகரித்தல் வேண்டும்.

உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தடை ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சகோதர சகோதரிகளால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. எதிர்பார்த்த செய்திகள் வருவதில் சற்று தடை ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் குறைந்து காணப்படும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துதல் வேண்டும். ஆரம்பத்தில் சொத்துகள் வாங்கினாலும் அதைப் பின்னால் கொடுக்க வேண்டியது வரும். ஒரு சிலருக்கு பழைய சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகள் வாங்க வாய்ப்பு அமையும்.

உயர்கல்வியில் தடை ஏற்படும். எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வீடு மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு சாதகமாக அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையாகச் சென்று வருதல் வேண்டும். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்த்து எதையும் நன்கு சிந்தித்து செயல்பட வெற்றி நிச்சயம் உண்டாகும். விருந்து, கேளிக்கை இவைகளில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும்.

சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள சந்தர்ப்பம் உருவாகும். குடும்பத்தில் புது வரவால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வலுவான போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஆரம்பத்தில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் விருப்பமான வேலையை தேர்வு செய்தல் வேண்டும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டி வரும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுத்தல் கூடாது. எதிர்பார்த்த பணம், பொருள் வருவதில் சற்று கால தாமதமாகும்.

உடல் உழைப்பை அதிகப்படுத்தவும், வழக்குகள் சாதகமாக இருந்து வரும். வேலையில் ஊதிய உயர்வில் உத்யோக உயர்வில் வலுவான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் பெற சிரமப்பட்டாலும் வேலை என்ற ஒன்று தொடர்ந்து நடந்து வரும். அதன் மூலம் வருமானமும் வந்து சேரும். புதிய தொழில்கள் அல்லது கூட்டுது தொழில் செய்ய சந்தர்ப்பம் அமையும். சிறு தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும்.

வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாக இருந்து வரும். புதிய நண்பர்கள் பழக்கமாவார்கள். அவர்களால் நன்மை ஏற்படும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் அதிகரித்து காணப்படும். காதல் விஷயங்கள் சந்தோஷமாக அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிட்டும். வேலையாட்களால் எதிர்பார்த்த நன்மை அமையும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். தேவையற்ற செலவினங்களைக் குறைத்தல் வேண்டும்.

பரிகாரம்:தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சகல பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும். கோயிலிற்கு வெளியே அமர்ந்து தானம் கேட்கும் முதியோர்களுக்கு அன்னதானம் அளியுங்கள். குச்சனூரில் சுயம்பு வடிவாக அருள்பாலிக்கு சனிபகவானை ஒரு முறை தரிசித்து வாருங்கள், துன்பங்கள் பறந்தோடும்.

Leave a Comment