Famous Shiva temples in Tamilnadu

இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் (famous shiva temples in tamilnadu) பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற பேரரசுகளின் காலத்திலும் கணிசமான அளவு சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில் சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 39 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம்.

1 திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.

2 நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி

திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.

3 தியாகராஜர் கோயில், திருவொற்றியூர்

சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.

4 ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை

மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.

5 ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல்

திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் ‘அப்பு’ என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழநாள் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.

6 பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

7 தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்

மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.

அதேவேளை மனிதனுக்கு இதயம் (ஆகாயம்) இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறது.

அதோடு சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.

நடராஜர் 108 போற்றி

8 மருந்தீஸ்வரர் கோயில், சென்னை

சோழ நாட்டை பல்லவம் ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச்சாலையாக உருமாறியுள்ளது. பரபரப்பான சென்னையின் நடுவே திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.

9 ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்..

10ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் ‘இராம+ஈஸ்வரம்’ இராமேஸ்வரம் ஆனது

11அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகின்றார்.

12 கபாலீசுவரர் கோயில், சென்னை

சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

13 ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்

600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

14 வேதகிரீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்

சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

15 தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்

சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை “வன்மிகிநாதர்” என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.

16 ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.

17 ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு

தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். இங்கு சிவபெருமான், “ஸ்வேதாரண்யேஸ்வரர்” என்ற திருப்பெயருடன், மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். பார்வதி தேவி, “பிரம்மவித்யாநாயகி” என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.

18 ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

19 பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம்

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர் கோயில் சைவத் திருத்தலங்களில் முக்கியமானதாகும். இந்தக் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இத்தலம் காசியை விட வீசம் (தமிழ் அளவு : 1/16) புண்ணியம் அதிகம் கொண்டதென நம்பப்படுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு

20 சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

21 திருவாலீஸ்வரர் கோயில்

சென்னையிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள பாடி என்ற பகுதியில் திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவபெருமான் திருவாலீஸ்வரர் வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் சன்னதியை தவிர விநாயகர், பாலசுப்பிரமணியர், சூரிய பகவான் சன்னதிகளும் உள்ளன. அதோடு இங்குள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் தொந்தி இல்லாமல் காட்சியளிக்கிறார்.

22 ஐராவதீஸ்வரர் கோயில்

கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

23 காசி விஸ்வநாதர் கோயில்

கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம்பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.

24 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்

சோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது. மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் காட்சியளிக்கிறது.

25 கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டதெனினும், அவனுடைய மகனான 3-ஆம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை முடித்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

26 பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர்

கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதோடு, பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

27 காசிவிஸ்வ நாதர் கோவில், தென்காசி

காசிவிஸ்வ நாதர் கோவில் குற்றாலத்திலிருந்து 8 கி. மீ தொலைவில் தென் காசியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.பி 1455-ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. புராணங்களின் படி இந்த மனனன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அந்நகரம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டின் இருந்ததால் காசியில் உள்ள அதே அசல் கோவிலின் மாதிரியாக இந்தக் கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

28 திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில், மதுரை

மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில் அமைந்துள்ளது. சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை (சுயம்புலிங்கத்தைக்) கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் எடுப்பித்தான் என்று சொல்லப்படுகிறது.

29 மாசில்லாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில்

சென்னையின் அம்பத்தூர் பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயிலில் மாசில்லாமணீஸ்வரர் கோயில் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நந்தி சிலை வழக்கத்துக்கு மாறாக சிவபெருமானை நேராக நோக்காமல், கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.

நிலப்பகுதிகளில் மட்டுமல்லாது கடற்கரைகள் பக்கத்திலும் பல சிறப்புக்கு வாய்ந்த கோவில்கள் உள்ளது அப்படி கடற்கரை அருகில் உள்ள 10 தமிழக கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்

30 அஷ்டலட்சுமி கோவில், சென்னை

இந்த கோவிலானது சென்னை பெசன்ட் நகரில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன.
முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள் புரிகின்றனர்.
இரண்டாவது தளத்தில் திருமால் திருமகளுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இவர்களை வழிபட்ட பின்பே ஏனைய தெய்வங்களை மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
மூன்றாவது தளத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்தியாலட்சுமி, கஜலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள்புரிகின்றனர்.
நான்காவது தளத்தில் தனலட்சுமி அருள்பாலிக்கிறார். இக்கோவில் 1976-ல் சலவைக் கற்களால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கோபுரத்தின் நிழலானது தரையில் விழுவதில்லை.

31 மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்

இந்த கோவிலானது சென்னையில் திருவான்மியூரில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் மருந்தீஸ்வரர், ஒளசதநாதர், பால்வண்ணநாதர் என்ற திருப்பெயரிலும், அம்மை திரிபுரசுந்தரி, சொக்கநாயகி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் 2000 வருடங்கள் பழமையானது ஆகும்.

32 காயாரோகனேஸ்வரர் கோவில், நாகபட்டினம்

பழங்காலத்தில் இந்த கோவில் ‘நாகை காரோணம்’ என்றழைக்கப்பட்டது. இங்கு இறைவன் காயாரோகணேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை நீலதாயாட்சி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
புண்டரீக மகரிஷிக்கு இத்தல இறைவன் கட்டித் தழுவி முக்தி கொடுத்தால் காயாரோகணேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

33 அமிர்தகடேஸ்வரர் கோவில் கோடியக்கரை

இந்த கோவிலானது நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் அமிர்தக்கடேஸ்வரர், திருக்கோடி குழகர் என்ற திருப்பெயர்களிலும், அம்மை அஞ்சனாட்சி, மைதடங்கண்ணி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.

34 திருமறைக்காடர் கோவில், வேதாரண்யம்

வேத நூல்கள் வழிபட்ட தலமாதலால் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டு வேதாரண்யம் என ஆனது.
இங்கு இறைவன் திருமறைக்காடர் என்றும் அம்மை யாழைப்பழித்த மென்மொழியாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

35 இராமநாதர் கோவில், இராமேஸ்வரம்

இராமநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னும் ஊரில் வங்காள விரிகுடா கடற்கரையோரம் அமைந்துள்ளது.

36 சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர்

இந்த கோவிலானது தூத்துக்குடி மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இவ்விடம் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாகும்.

37 சுயம்புலிங்க சுவாமி, உவரி

இந்த கோவிலானது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரிலிருந்து 35கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்புலிங்கம் என்ற பெயரிலும், அம்மை பிரம்மசக்தியம்மன் என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

38 குமரிஅம்மன் கோவில், கன்னியாகுமரி

இக்கோவில் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இவ்விடம் தாட்சாயணியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்பட்டு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அன்னை துர்க்காதேவி, பகவதி, பாலசவுந்தரி, தியாகசவுந்தரி என்றெல்லாம் போற்றப்படுகிறாள்.

39 மாமல்லபுரம் , காஞ்சிபுரம்

மாமல்லபுரம் என்றாலே கடற்கரை கோவிலே அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்விடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது.
இக்கோவில் இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டது.
இக்கோவிலின் விமானம் 60 அடி உயரம் உடையது. இக்கோவிலில் சிவபெருமான், உமையம்மை, குமரக்டவுள், விநாயகப் பெருமான் ஆகியோர் உள்ளனர்.

கோபுர அமைப்பு
ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது இராஜ கோபுரம். இராஜ கோபுரத்தை ஸ்துல லிங்கம் எ‎‎‎‎ன்று கூட கூறுவார்கள். ஆலயத்தி‎ன் உள் இருக்கும் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால், நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்தும் கோபுரத்தை காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில் ‏ இருப்பவர்களுக்கும் இறைவனி‎ன் நினைவு கூறவே கோபுரம் அமைக்கப்பெற்றது. கோபுரத்தின் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும்.

கருவறை சிறியதாகவும், கோயில்களின் மையப்பகுதியிலும் அமையும். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம், அதற்கு முன்பாக ஸ்தபன மண்டபம், அதற்கும் வெளியே மகா மண்டபம் ஆகியன காணப்படும். உள்ளிருக்கும் பிரதான தெய்வத்தைப் பொறுத்து வாகனம் இடம் பெறும்.ஒரே கோயில், ஒன்றுக்கு மேற்பட்ட சந்நிதிகள் இருக்கலாம். ஆனாலும் மூலஸ்தானம் என்பது பிரதான தெய்வத்தின கருவறைக்கு வழங்கப்படும். மூலஸ்தானக் கருவறையும், பிற சந்நிதிகளையும் தனித்தனியாக வலம் வரும் அமைப்பு இருக்கலாம்.

இராஜகோபுரத்தி‎‎ன் கோட்பாடுகள்:
எல்லா கோபுரஙகளிலும் உயரமானது இராஜ கோபுரம். கருவறையின் மீது அமைக்கப்படும் சிகரம், விமானம் எனப்படும். எண்கோண வடிவத்தைக் கொண்தாகவே இவை அமைக்கப்படுகின்றன. இராஜ கோபுரத்தி‎‎ன் அருகில் செ‎‎‎‎‎‎ன்‎று அத‎ன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்களைக் காணலாம். அவற்றுள் மா‎னிட வடிவங்களையும் காணலாம். ‏இறைவனி‎ன் திருவிளையாடல்கள், அற்புதம் நிகழ்த்திய காட்சிகள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அதில் ‏ இடம் பெற்று‏ இருக்கும். பிரபஞ்ச அமைப்பில் ‏இவைகளுக்கும் இடமுண்டு எ‎ன்பது கோட்பாடுகள்.

சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்கினம், மக்கள் ‏இனம், தேவர் கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் ‏இருக்கிறார்கள், அண்டத்தினுள் ‏ இ‎‎ன்‎னது ‏இருக்கிறது எ‎‎‎‎ன்று எல்லாப் படித்தரங்களிலும் உள்ள அனைத்தும் அங்கு ‏ இடம் பெற்றிருக்கும். ‏இக்கோட்பாட்டை ‏ இராஜகோபுரம் உருவகப்படுத்தி விளக்குகிறது. இயற்கையி‎‎ன் நடைமுறையி‎ன் புறச்சி‎‎ன்‎னமாகப் பெரிய கோபுரம் அமைந்திருக்கிறது எ‎‎ன்றால் ‏ இயற்கையில் ‏உள்ளவைகளை எல்லாம் அத‎‎ன் மூலம் விளக்கம் பெற்றுள்ளன.

#யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு..

ஒரு யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு காணப்படுகிறது. மனிதனுடைய உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டே திருக்கோவில்கள் கட்டப்பட்டு, வழிபாட்டுக்கு உரிய அமைப்பாக மதிக்கப்படுகின்றன.

கொடிக்கம்பம்
கொடிக்கம்பம் உள்ளிருக்கும் தெய்வத்தையும், தெய்வத்தை வணங்குவதால், உண்டாகும் மகிழ்ச்சியையும் சுட்டுகிறது. கொடிமரத்துக்குக் கீழ் வாகனம் இருக்கும்; இது ஆன்மாவைச் சுட்டு; ஆன்மாவான வாகனம் தெய்வத்தைப் பார்த்தபடி காணப்படும்.
குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமே கொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்தில் காணப்படும் 32 வளையங்கள், மனித உடலின் முதுகுத் தண்டிலுள்ள 32 எலும்புகளைக் குறிப்பதாகும். மேலும் மனிதனுடைய முப்பத்து இரண்டாவது வயதில்தான் அறிவுப் பல் முளைக்கிறது.

கருவறை.
கோயிலின் மையப்பகுதியாக உள்ள கருவறையில், தெய்வ திருமேனி இருக்கும். கருவறை, மனித இதயத்தைக் குறிப்பதாகும். கருவறையில் இருப்பது போல், இறைவன் இதயத்தில் இருக்க வேண்டும். கோவில்களும், கோயில் கட்டுமானமும் வளர்ச்சி பெறப் பெற, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகிய பல்வேறு துறைகளும் கோயில்களோடு இணைக்கப்பட்டுள்ளன.

எண்ணங்களின் பிறப்பிடமாக விளங்கும் கொப்புள் ஸ்தானத்தில் சிவனுடைய வாயிற் காப்போனாகிய நந்தியைப் பிரஷ்டை செய்வதன் மூலம் எண்ணங்களை அடக்கி, மனதினைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ்தானத்தைப் பிரம்ம கபால உருவில் அமைப்பது வழக்கம். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் பொழுது ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக் குறிக்கவே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துக் கொடுத்து, கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியைக் கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் கூறினர்.

பிராண சக்தி

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுக்கிறது.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ஆயிரம் உயிர் சக்தி) நம் உடலில் உள்ள உயிர் அணுக்களை தாக்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அப்போது அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் நமக்கு ஆன்மீக உணர்வு, புத்துணர்வு, புத்துணர்ச்சியை ஏற்படுத்தி நம்முள்ள கவலைகள், பிரச்சனைகள், உடல் நோய்களைப் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.

கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும் நீரிலும் பிராண சக்தி கலந்து வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரைக் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்ணிலும், சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீது பிராண சக்தி பரவுகிறது.

ஓம் சிவாய நம

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம்

சிவபெருமானின் தாண்டவங்களும், ஆடிய ஸ்தலங்களும்

வியக்க வைக்கும் நமது கோவில்களின் அதிசயங்கள்

ஆருத்ரா புராண வரலாறு

சிவ தலங்களின் அதிசயங்கள்

Leave a Comment