Thirukodiyalur saneeswaran temple

திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில் (Thirukodiyalur saneeswaran temple) பற்றிய சிறப்பு பதிவு!

கொடியவன் என்று அழைக்கப்படும்
சனீஸ்வர பகவான் பிறந்த­­ இடத்திற்கு
அந்தப் பெயரையே வைக்கப்பட்டுள்ள திருக்கொடியலூர் சனீஸ்வரர் பற்றிய
சிறப்பு பதிவு!

மக்கள் வழிபடும் விதத்தில் இந்த பூமியில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் இருக்கின்றன.

இவையெல்லாம் மனித குலத்துக்கு தெய்வத்தால் வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும்.

நாம் அனைவரும் ‘எனக்கு இது வேண்டும்’ என ஒரு ஆலயத்தை தேடிச் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுகிறோம்.

வேண்டியது கிடைத்தவுடன் ஆனந்த கூத்தாடுகிறோம்.

அதே வேளையில் எதிர்பாராத விதமாக
நாம் ஒரு திருத்தலத்துக்கு சென்று வந்த பிறகு,
நமது வாழ்வில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் பெறுகிறோம் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம்.

அப்படியொரு பாக்கியத்தை வழங்ககூடிய தலம்தான் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்.

பெயர்க்காரணம்:

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ளது திருக்கொடியலூர்.

இந்த ஊரில் ஶ்ரீ ஆனந்தவல்லி சமேத
ஶ்ரீ அகத்தீஸ்வரர்
ஆலயம் அமைந்துள்ளது.

இது யமதர்மனும் சனீஸ்வர பகவானும் அவதரித்த தலம்
என்பது விசேஷ தகவல்.

சூரிய பகவான் அவர் மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும் கூடி ஈசனை ஆராதித்த தலம் இது என்பதால் திருக்கூடியலூர் என்றானது.

அதுவே பிற்காலத்தில் மருவி திருக்கொடியலூர் என்றானது என்றும் கூறப்படுகிறது.

மக்களாலும், ஜோதிடர்களாலும் பயமுறுத்தி பேசக்கூடிய சனீஸ்வர பகவான் கொடியவன் என்று அழைக்கப்படுகிறான்.

அந்தக் கொடியவன் ஆகிய சனீஸ்வர
பகவான் பிறந்த­­ இடத்திற்கு
அந்தப் பெயரையே வைக்கப்பட்டுள்ள
தலமாக
திருக்கொடியலூர் விளங்குகிறது
என்று மற்றொரு செவிவழிச்செய்தியாக கூறப்படுகிறது..

தென் தமிழ்நாட்டின் தேவாரப் பதிகத் தலங்கள் மிகவும் பெருமையும், புகழும் கொண்டவை.

இந்த தலங்களை ‘பாடல் பெற்ற தலங்கள்’ என போற்றுகிறோம்.

அதுபோன்ற ஒரு பாடல் பெற்ற திருத்தலமே திருமீயச்சூர்.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளம் ரயில்வே ஸ்டேஷனுக்கு சிறிது தொலைவில் மேட்டூர் என்ற ஊரில் புராதனமான திருமீயச்சூர் சிவன் கோவில் உள்ளது.

இங்கு ஆதி சக்தியான லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில் மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார்.

இங்குள்ள அம்பாள் லலிதாம்பிகை தனது பக்தையிடம் “எனக்கு கொலுசு வேண்டும்”
என்று கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்ட வரலாறு பற்றி சுருக்கமாக பார்ப்போம்

தனது கனவில் “எனக்கு கொலுசு வேண்டும்” என்று கேட்டுகொண்ட லலிதாம்பிகையின் பக்தை அந்த கொலுசை போடுவதற்கு லலிதாம்பிகையின்
இந்த ஆலயத்திற்கு சென்று கொடுத்த போது,கொலுசெல்லாம் போட முடியாது என்று குருக்கள் சொன்னதற்கு, “எனது கனவில் போடலாம்” என்று அம்பாள் சொன்னார்
என பதில் கூறினாள்.

நிறைய காலங்களாக அபிஷேக துளிகள் படர்ந்து சிறு துளைகள் எல்லாம் அடைபட்டு இருந்த லலிதாம்பிகையின்
கால் பகுதியில் கொலுசு அணிவித்த தடம் போல் ஒரு துளை இருந்ததை அபிஷேகம் செய்யும் பொழுது அர்ச்சகர் கண்டுள்ளார்.

ஆகையால் அதன்
பிறகு அந்த கொலுசை தேவியின் பாதங்களில் அணிவித்து சந்தோஷம் அடைந்தனர்.

இத்தலத்தின் இறைவன் மேகநாத சுவாமி.

இவரை வணங்கி நிற்போருக்கு வறுமை நீங்கி செல்வம் மழையாகப் பொழியும்.

ஒருமுறை இந்த மேகநாத சுவாமியை, வருணனும், சூரியனும் வணங்கி நின்றனர்.

தங்களுக்கு சாப நிவர்த்தி தர வேண்டும் என்று வேண்டினர். அவர்களுக்கு மேகநாத சுவாமி சாப நிவர்த்தி கொடுத்தார்.

இதற்கிடையில் சூரியனுடைய பத்தினியான
உஷாதேவி,
மேகநாதரிடம்
‘தனக்கு புத்திர
பாக்கியம் வேண்டும்’ என்று வழிபட்டார்.

அதற்கு இறைவன் அவளது கணவர் சூரியனுடன் இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி, அம்பாள் லலிதாவையும், என்னையும் பூஜை செய்து வந்தால் புத்திர பாக்கிய பலன் கிடைக்கும்” என வரம் அளித்தார்.

அதன்படியே சூரியன், உஷாதேவி, இருவரும் திருமீயச்சூர் வந்து சூரிய புஷ்கரணியில் நீராடி பூஜை செய்தனர்.

நவகிரகங்களில் சூரியன் ஒருவர் மட்டுமே அதீத காம உணர்வு கொண்டவர்

அத்தகைய சூரிய பகவான் தவத்தின் வலிமையால் புத்தி பாக்கியத்திற்காக தன் மனைவி உஷாதேவியுடன் உறவு கொள்கிறார்.

சூரியபகவான், உஷாதேவி உடலுறவு கொள்ளும் பொழுது அவரின் காம வெப்பம் தாங்க முடியாமல் குதிரையாக மாறி ஓடுகிறாள் உஷாதேவி.

சூரியபகவானும் குதிரையாக மாறி விரட்டுகிறார்.

அப்போது உஷாதேவி கருப்பு நிற குதிரை உருவத்தைப் படைத்து மறைந்து விடுகிறாள்.

சூரியபகவான் அந்த கருப்புநிற குதிரையை உறவு கொண்டதால் சனீஸ்வரபகவானும், எமதர்மராஜாவும்
மகனாக பிறக்கிறார்கள்.

சூரியபகவானுக்குரிய இந்த வரலாற்று முக்கியத்துவத்தை திருமீயச்சூர்க்கு கொடுக்காமல், அங்கிருந்து ஒரு கிலோமீட்டர்
தொலைவில் மேற்கே உள்ள திருக்கொடியலூர் என்ற ஒரு ஊருக்கு கொடுத்துள்ளார்கள்.

இந்த ஊரில் உள்ள கோவிலில் அகஸ்தீஸ்வரர் என்ற சுவாமியின் ஒருபக்கம் எமதர்மனும் மற்றொரு பக்கம் சனீஸ்வர பகவானும் அங்கு சிவபூஜை செய்வதாகவும்,
இங்கேயே சனீஸ்வர பகவான் அவருடைய குருவை அதாவது பைரவரை பார்த்துக்கொண்டு இருப்பது போலவும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சனீஸ்வரர் பிறந்த இந்த திருக்கொடியலூரில் சனியினுடைய ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக ஐதீகம்.

திருநள்ளாறில் இருந்து சனீஸ்வர பகவான் உடைய பார்வை இங்கு படுவதாக ஐதீகம்.

உலகத்தின் நீதிபதி சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்மராஜாவின்
பிறந்த தலம் இந்த திருக்கொடியலூர்.

சுவாமியினுடைய வலதுபுறம் சனீஸ்வர பகவானும், இடது புறத்தில் எமதர்மராஜனும் காட்சியளிக்கின்றனர்.

புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள்,
பிறந்த சிறு குழந்தைக் நீண்ட ஆயுள் வேண்டி இந்த தளத்தில் வழிபட்டால் சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார்
என்று ஒரு ஐதீகம்..

இந்த தலத்தில் பரிவார தேவதைகளாக விளங்கும் யமதர்மனையும், சனிபகவானையும் வழிபட்டால் கால பயமும் சனி தோஷ துன்பங்களும் நீங்கி விடுவதாக ஐதீகம்.

ஒருமுறை இந்திரனைப் பீடித்த சனிபகவான்
இங்கு வந்து ஒளிந்திருந்ததாகவும் ஈஸ்வர கிருபையால் அவன் தோஷம் விலகியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

ஒருவருக்கு சனி தோஷம் பிடித்தாலும், எமன் பிடிக்க வந்தாலும் அது வாழ்வில் கஷ்டமான காலம்தான்.

ஆனால் இத்தலத்தில்
பிறந்த சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்மராஜாவும்
குழந்தையாய், அனைவருக்கும் அருள்தரும் வல்லுநராய், பக்தர்கள் கேட்ட வரத்தைத் தருபவர்களாகவே விளங்குகிறார்கள்.

அதனால்தான்
எதையும் எதிர்பாராமல் இந்த தலத்தில்
கால் வைத்த
உடனேயே
நமது வாழ்வில்
பெரும் மாற்றமும், வளர்ச்சியும்,நாம்
வேண்டிய அனைத்துமே கிடைத்து விடுகிறது.

ஆலயம் உருவான வரலாறு:

ஹயக்ரீவர் கூறியபடி
ஒரு முறை திருமீயச்சூர் வருகை தந்த அகத்தியர், லலிதாம்பிகையை தரிசித்து அங்கு அன்னையை மனதுருக வேண்டி லலிதா நவரத்தின மாலை பாடினார்.

இதனால் அவருக்கு அம்பாளின் பேரருள் கிடைத்தது.

அதன்பின் அவர் சிவபூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

அதற்காக அவ்விடத்தில் இருந்து சற்று மேற்கே உள்ள கூடியலூர் என்ற கொடியலூருக்கு வந்தார்.

இத்தலத்தில் அவர் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார்.

இங்குள்ள லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் ‘அகத்தீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்.

தாயார் லலிதாம்பிகையை நினைத்து அன்னையையும்
இங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்தார்.

தேடிவந்து வணங்கும் பக்தர்களுக்கு அருள்
தரும் அன்னைக்கு ‘ஆனந்தவல்லி’ என பெயரிட்டார்.

தொடர்ந்து இத்தலத்தில் இறைவனையும், இறைவியையும் நினைத்து தவம் இருந்தார்.

எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு, எம வதையும், சனி உபாதையும் நீங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்தார்.

அதன்படியே
அருள்வதாக இறைவனும், அகத்தியருக்கு அருளாசி வழங்கினார்.

திருமீயச்சூர் ஆலயத்தில் லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில், மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள்.

கொடியலூரில்
லலிதா பரமேஸ்வரி ஆனந்தவல்லியாக பரிபூரணமாக காட்சி தந்து அருளாசி வழங்குகிறாள்.

அன்னை ஒரே எல்லையில் திருமீயச்சூரில் அமர்ந்த கோலமாகவும், கொடியலூரில் நின்ற கோலமாகவும் இருந்து அருள் செய்வது மற்றொரு சிறப்பு.

இக்கோவிலில் தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது
மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு.

இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி.

இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்கிறார்கள்.

ஆலய அமைப்பு:

ஆலயத்தின் சிறிய நுழைவு வாசலைக்
கடந்து உள்ளே சென்றால் நந்திதேவர் அருள்கிறார்.

இறைவனுக்கு
இடதுபுறத்தில் எமதர்மனும், வலது புறம்
சனீஸ்வரனும் உள்ளனர்.

கோவிலை சுற்றி
வந்தால் விநாயகர், பாலசுப்பிரமணியர், விஜயலட்சுமி, சண்டீகேஸ்வர், நவக்கிரகங்கள்,
பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம்.

கருவறையில் அகத்தீஸ்வரர்,
லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

அருகில் தெற்கு நோக்கியபடி ஆனந்தவல்லி
அன்னை, ஆனந்த பரவசத்துடன் காட்சி தருகிறாள்.

மக்களின் துன்பத்தினை அகற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை தருபவள் இந்த அன்னை.

எனவே அன்னையின் கருணையை தேடி வரும் பக்தர்கள் ஏராளம்.

இந்தக் கோவிலில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை
தோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் உள்பட அனைத்து நிகழ்வுகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.

இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை.

ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும்
சகல தடைகளையும் இத்தலம் களைகிறது.

எனவே இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினைகளும்
நீங்குகிறது.

இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு
வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.

Thirukodiyalur saneeswaran temple timings

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆலய அமைவிடம் – Thirukodiyalur saneeswaran temple location

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரளம் என்ற ஊர்.

இங்கிருந்து மேற்கே 2 கிலோ மீட்டரில் திருமீயச்சூர் திருத்தலமும்,
அதன் அருகிலேயே கொடியலூர் திருத்தலமும் அமைந்திருக்கிறது.

பேரளத்தில் இருந்து
மினி பஸ் வசதி,
ஆட்டோ வசதி உண்டு.

Leave a Comment