காமாட்சி அம்மன் விருத்தம் வரிகள் | kamatchi amman virutham lyrics in tamil
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே
மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே – திங்கட்
புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.
நூல்
சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியா நின்ற வுமையே.
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்.
சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திராது
சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடனுன்னதம்மா.
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன்மணியு நீ.
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
– பாதச் சிலம்பி னொலியும்,
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும் ;
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும் ,
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையில் பொன்கங்கணம்,
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்,
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனாற் சொல்லத் திறமோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
குழப்பமா யிருப்ப தேனோ
விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக முனக் கிலையோ
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே.
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள்வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்
பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்,
வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,
வாயினாற் பாடியறியேன்,
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்,
சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்
சரணங்கள் செய்து மறியேன்,
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,
சாஷ்டாங்க தெண்ட னறியேன்,
ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்
ஆச்சி நீ கண்ட துண்டோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமாயிருந்த னம்மா,
மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
புருஷனை மறந்தனம்மா,
பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
பராமுகம் பார்த்திருந்தால்,
பாலன் யானெப்படி விசனமில்லாமலே
பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்களாகாது ஆகாது
இது தர்மமல்ல வம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
யிதுநீதி யல்லவம்மா,
அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ
அதை யெனக்கருள் புரிகுவாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணி மந்தர காரிநீயே
மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ
மலையரையன் மகளானநீ,
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,
தயாநிதி விசாலாட்சி நீ
தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ
சரவணனை யீன்ற வளும் நீ,
பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்
பேர்பெற வளர்த்தவளும் நீ,
பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ
பிரிய வுண்ணாமுலையு நீ
ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ,
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்,
கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
காதினுள் நுழைந்த தில்லையோ
இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
இனி விடுவதில்லை சும்மா,
இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
இதுதரும மல்ல வம்மா,
எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
ஏதும் நீதியல்ல வம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்
மூடனான் செய்த னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு
மோசங்கள் பண்ணி னேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா
சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணமாகு தம்மா,
சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக உன்
அடியன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க
ளின்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை
போக்கடித் தென்னை ரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
பாரதனி லுள்ளளவும் பாக்கிபத்தோ டென்னைப்
பாங்குடனி ரட்சிக்கவும்,
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்
சீர்பெற்ற தேசத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய ளணு காமலும்,
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
பேர்பெற்ற காலனைப் பின்றொடர வொட்டாமற்
பிரியமாய்ச் காத்திடம்மா.
பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி.
ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்
னம்மை யேகாம்பரி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத்திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பினேனே,
முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக்காதே யம்மா,
வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனாரேசப் போறார்,
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
108 அம்மன் போற்றி
1008 அம்மன் போற்றி
துர்கை அம்மன் – 20 வழிபாட்டு குறிப்புகள்
அன்னை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் காணொளி பாடல் வரிகள்!!!
காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *15.03.2023* *புதன் கிழமை*… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் (more…) Read More
கந்தன் காலடியை வணங்கினால் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது... அருமையான மெல்லிய பாடல் முருகப்பெருமானை போற்றி பாடப்பட்டுள்ளது... … Read More
தைப்பூசம் / thai poosam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது… Read More
Draupadi amman 108 potri tamil திரௌபதி அம்மன் 108 போற்றி (Draupadi amman 108 potri tamil) -… Read More
Sani peyarchi palangal 2023-2025 மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கும் திருக்கணிதப் படி சனிப்பெயர்ச்சி பலன்கள், மதிப்பெண்,… Read More
Leave a Comment