நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Navarathri Puratasi
புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சித்திரை மாதத்திலும் நவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என, இந்து சாஸ்திரம் கூறுகிறது. இவை முறையே, சரத் ருது, வசந்த ருது என்றழைக்கப்படுகின்றன.ஏன் இப்படி என்ற கேள்விக்கு, இந்த மாதங்கள், எமனின் கோரைப் பற்கள் என்றும், மனித குலம், கடுமையான நோய்களால் பீடிக்கப்படும் காலம் என்றும் பதில் வருகிறது. சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்; ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம் கொண்டவள். எப்பேற்பட்ட துக்கங்களையும் துாக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான காலமாகவே, நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது. மகாளய பட்சம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து கொண்டாடினால், நோய் வரும் முன் விரட்டலாம்.
வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், எதிலும் வெற்றி வாகை சூட விரும்புபவர்கள், அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க விரும்புபவர்கள், சுக வாழ்வு வாழ விரும்புபவர்கள், நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என, வியாசர் சொல்கிறார்.நவராத்திரி, பெண்களுக்கு மட்டுமே உரிய பண்டிகை என நம்பப்படுகிறது. ஆனால், மேலே சொன்ன பராக்கிரமங்களை பெரும்பாலும் விரும்புபவர்கள் ஆண்களே. எனவே, அவர்களுக்கு இந்த பண்டிகை மிகவும் முக்கியம்.
நவராத்திரி விரதம், பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில், அம்பிகையை பூஜித்தால், அம்மை நோய் வராது என்றும், கிரக தோஷங்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. எதிர்மறையான விளைவுகள் எதுவும் வாழ்க்கையில் அண்டாது. அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றை, பெண் வடிவமாக கருதுவது நம் மரபு. கல்லையும், பெண்ணுருவாக்கி வழிபடுவது, நம் கலாசாரம். இவை இப்படி இருக்க, பெண் என்றால் பலவீனம் என நினைத்து, சுயஅழிவை தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான், நவராத்திரி விழாவின் துவக்கம். அன்னை பராசக்திக்காக, ஒன்பது நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யப்படும் பூஜையாகும். பொதுவாக, நவராத்திரி பூஜை, ஆண்டிற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு…