செல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி Sivarathri fasting

மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து சிவ ஆலயங்களிலும் பல சிறப்புப் பூஜைகள் செய்யப் படுகின்றன.

மஹா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் மூவேழு தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கின்றன புராணங்கள்.

சிவபெருமான் அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும். காரிய வெற்றியும் ஏற்படும் என்கின்றன புராணங்கள். அப்பாற்பட்ட சிவராத்திரியின் விரதமகிமை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

#தேவர்களும்_விரதம்

பிரம்மதேவன், திருமால், குபேரன், இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி பகவான் உள்ளிட்ட தேவர்கள் பலரும் சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள் என்று புராண கதைகள் கூறுகின்றன.

#விரத_மகிமை

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது என்கின்றனர்.

#ஒருவேளை_உணவு

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.

#சிவபூஜை

சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

#கோபப்படக்கூடாது

மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிடவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்.

#சிவ_வழிபாடு

மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும்.

#யார்_சிவராத்திரி_விரதம்_இருக்கலாம்?

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

#அபிஷேகப்_பொருட்கள்

சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைக்கு பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.

#நள்ளிரவு_வழிபாடு

சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணிமுதல் 1 மணிவரை ‘லிங்கோத்பவர்’ காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கு கிடைக்கும்.

அந்த நேரத்தில் வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியமாக வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி பஞ்சாட்சரங்களை பலநூறு முறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும் என்கின்றனர்.

#உண்ணாமல்_உறங்காமல்

சிவராத்திரி தினத்தன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.

#சிவபுராணம்_படிங்க

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவன் கோயிலுக்குச் சென்று இரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

#தலைமுறைகளுக்கும்_நன்மை

மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து,
முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்.

அவனருளால் வாழ்க வளமுடன்…

 

Leave a Comment