Panguni Uthiram 2025

11-04-2025

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :

திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

ராமபிரான் – சீதாதேவி, பரதன் – மாண்டவி, லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருக்னன் – ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.

அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.

காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.

தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்.

ஓம் நமசிவாய போற்றி

இத்தகைய சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர திருநாளில் அனைவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பெரும் பலன்களை பெற்று ஆனந்தமாய் இருங்கள்….
தென்மாவட்ட மக்கள் தங்கள் பூர்வீக குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபட்டு குலதெய்வ அருளை பெறவும்.

அனைவருக்கும் இனிய பங்குனி உத்திர திருநாள் நல் வாழ்த்துகள்..

நன்றி வணக்கம்… ஓம் நமஹ சிவாய…

 

பங்குனி உத்திர திருவிழா வரலாறு

Leave a Comment

error: Copying content is Prohibited, Instead you can share it! :)