இன்று தடைகளை நீக்கும் குரு வார சங்கடஹர சதுர்த்தி

ஜூன் 20-06-2019, ஆனி 05, வியாழக்கிழமை

சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், கணபதியை வழிபடுவோம். கவலைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் ஆனைமுகத்தான்.

இந்தநாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம். மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஆனைமுகனைத் தரிசிப்பது நன்மை பயக்கும்.

*குருவார சங்கடஹர சதுர்த்தி என்பது ரொம்பவே விசேஷம். இந்த நன்னாளில் *(20.6.2019) வியாழக் கிழமையில்,* விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள்.

காரியத்தில் இருந்த தடைகளையெல்லாம் தகர்ப்பார்; காரியம் அனைத்தையும் வெற்றியாக்கித் தருவார் விநாயகர்.

*அருகம்புல்லும் விநாயகரும்*

எத்தனை துன்பங்கள் வந்தாலும் நல்லவர்கள் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருப்பார்கள். அவர்களை இறைவனின் கருணை என்னும் மழை வந்து காப்பாற்றி விடும் என்று ஆன்றோர்கள். அருகம்புல்லை வைத்து நம்மை தேற்றுவார்கள். காட்சிக்கு எளிமையாகவும், மருத்துவ குணங்கள் அதிகமும் கொண்ட அருகம்புல் குளிர்ந்த தன்மை கொண்டது.

உடல் சூட்டை அகற்றும், சிறுநீர் கடுத்தால் பெருக்கி குணமாக்கும், நாள்பட்ட குடல் புண்களைக்கூட ஆற்றிவிடும், ரத்தத்தை தூய்மையாக்கும், கண்பார்வையை தெளிவாக்கி குளுமை தரும். ஆற்றல்கள் பல கொண்ட இந்த அருகம்புல்லைத்தான் கணபதி தனக்கு விருப்பமான மாலையாக ஏற்றுக்கொண்டார். எங்கும் எப்போதும் கிடைக்கும் அருகம்புல்லை அர்ப்பணித்தால் போதும் கணபதி மகிழ்ந்து கேட்கும் வரங்களை கொடுத்துவிடுவார் என்கிறது புராணம்.

அது சரி எத்தனையோ மலர்களும், இலைகளும் இருக்க கணபதி ஏன் அருகம்புல்லை சூட்டிக்கொண்டார். அதற்கும் ஒரு புராண வரலாறு உண்டு.

அனலாசுரன் என்பவன் யமனுடைய மகன். வேண்டாத சேர்க்கையினால் தீயவனாகி சாபம் பெற்றான். இதனால் மூர்க்கனாக மாறி தேவர்களை இம்சித்து வந்தான். வரங்கள் பல பெற்றதாலும், பிறப்பிலேயே அவனது உடல் பெரும் அனலைக் கக்கியதாதால் அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை. செல்பவர்களை எல்லாம் சாம்பலாக்கினான் அனலாசுரன்.

என்ன செய்வது என்று புரியாத தேவர்கள் பிள்ளையாரை வேண்டி அவரது உதவியை நாடினர். கணநாதரும் அவனை ஒழித்து தேவர்களை காக்க அவனிருக்கும் இடம் சென்றார். அங்கு கணபதியின் கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டன. இதனால் கணபதியின் கோபம் எல்லை கடந்தது.

அனலாசுரனை பெரும் அனல் வடிவம் கொண்டு கணபதி தாக்கினார். அந்த அசுரன் ஓய்ந்துபோன தருணத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் கணபதி. காரணம் அவனது பூத உடல் கூட பெரும் வெப்பம் கொடுத்தது உயிர்களை வாட்டும் என்பதுதான். அனலோடு அவன் விழுங்கப்பட்டதால், கணபதியின் வயிறு எரிந்துகொண்டிருந்தது. உஷ்ணம் தாங்காத கணநாதர் சக்தியை எண்ணி வணங்கினார்.

தேவர்கள் யாவரும் கணநாதரை குளிர்விக்கும் வகையில் என்ன என்னவோ செய்துபார்த்தார்கள். கங்கை நீரை ஊற்றினார்கள். பனிப்பாறையைப் பெயர்த்தெடுத்து கணபதியின் தலையில் வைத்தார்கள். எதிலுமே தீ தணியவில்லை. இதனிடையே, சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள இருபத்தொரு அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது.

இதனால் விநாயகர் மகிழ்ந்தார். தனக்கான பூஜைப்பொருள் அருகம்புல்லே என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார். ‘இனி தன்னை பூஜிக்க இருப்பவர், வரத்தைப் பெற விரும்புவோர் அனைவரும் அருகம்புல் கொண்டு வணங்கினால் மகிழ்வேன்’ என்று வரமளித்தார் பிள்ளையார்.

அன்று முதல் கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நலம் பயப்பவை தான்.

Leave a Comment