Tharumi story thiruvilayadal | தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் (Tharumi story thiruvilayadal) சொக்கநாதர் ஏழையான தருமிக்காக பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு பாடல் எழுதி பொற்கிழி அளிக்கச் செய்ததைக் குறிப்பிடுகிறது.

பாண்டியனின் சந்தேகம், தருமியின் வேண்டுகோள், இறைவனார் தருமிக்காக பாடல் கொடுத்தது, நக்கீரர் இறைவன் என்றறிந்தும் இறைவனாரின் பாடலைக் குறை கூறியது, இறைவனார் நக்கீரரை எரித்தது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து இரண்டாவது படலமாக அமைந்துள்ளது.

பாண்டியனுக்கு ஏற்பட்ட சந்தேகம்
வங்கிசூடாமணிப் பாண்டியன் பாண்டியநாட்டை ஆட்சி செய்தபோது நந்தவனம் அமைத்து இறைவழிபாட்டிற்காக அதில் மலரும் பூக்களைப் பயன்படுத்தினான்.
அந்த நந்தவனத்தில் வண்டுகள் மொய்க்காத செண்பக மலர்களும் இருந்தன. வங்கிசூடாமணிப் பாண்டியன் சண்பக மலர்களை சொக்கநாருக்கு அணிவித்து வழிபாடு நடந்தினான். ஆதலால் சொக்கநாதர் சண்பக சுந்தரேசர் என்ற பெயரினையும் பெற்றார். வங்கிசேகர பாண்டியனும் சண்பகப் பாண்டியன் என்று சிறப்பாக அழைக்கப்பட்டான்.
வசந்த காலத்தில் ஒருநாள் சண்பகப் பாண்டியன் தன்னுடைய மனைவியுடன் நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்போது நறுமணம் வருதை உணர்ந்தான்.
காற்றிற்கு இயற்கையில் மணம் இல்லை. ஒருவேளை அரசியின் கூந்தலிருந்து இம்மணம் வருகிறதா? என்று எண்ணினான்.

பின்னர் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா? அல்லது பூக்கள் மற்றும் நறுமணப் பொருட்களை பூசிக்கொள்வதால் மணம் உண்டாகிறதா? என்று எண்ணினான்.
தன்னுடைய சந்தேகத்தை அரசியிடம் கேட்டான். அதற்கு அரசி தங்களின் சந்தேகத்தை சங்கப்புலவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினாள்.
பாண்டியனும் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை சங்கமண்டபத்தின் முன்னர் கட்டித் தொங்கவிட்டான். என்னுடைய சந்தேகத்தை பாடல்கள் மூலம் தீர்ப்பவருக்கு இப்பொற்கிழி பரிசளிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்தான்.
தருமி மன்னனின் சந்தேகத்தைத் தீர்த்தல்
பாண்டியனின் அவையில் இருந்த புலவர்கள் பலரும் பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்க முடியாமல் திணறினர்.

அப்போது மதுரையில் ஆதி சைவர் மரபில் தோன்றி தருமி என்பவன் அரசனின் அறிவிப்பினை அறிந்தான். சொக்கநாதரிடம் பேரன்பு கொண்ட அவனுக்கு தாய், தந்தை, மனைவி என நெருங்கிய உறவினர் எவரும் இல்லை.
ஆனால் திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்ட தருமி ஒருவேளை உணவிற்கு மிகவும் திண்டாடினான். ஆதலால் அவனுக்கு யாரும் பெண்தர முன்வரவில்லை.
சொக்கநாதர் முன்னர் சென்று “அப்பனே, பாண்டியன் தன்னுடைய சந்தேகத்தைப் போக்கும் பாடலை அளிப்போருக்கு ஆயிரம் பொற்காசுகளை பரிசாக அறிவித்து உள்ளான். எனக்கோ பாடல் ஏதும் எழுதத் தெரியாது. ஆனால் ஆயிரம் பொன் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொண்டு சுற்றத்தாரோடு இனிது வாழ்வேன். ஆகையால் எனக்கு ஆயிரம் பொற்காசுகளை கிடைக்க அருளவேண்டும்” என்று மனமுருகி வேண்டினான்.

அப்போது இறைவனார் புலவரின் வடிவத்தில் வந்து பாண்டியனின் சந்தேகத்தைப் போக்கும் பாடலை தருமிக்கு அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட தருமி நேரே சண்பகப் பாண்டியனைச் சந்தித்து அரசனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினான். பாண்டியனும் அப்பாடலை வாசிக்கச் சொன்னான்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியிற்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

என்று தருமி இறைவன் அளித்த பாடலை வாசித்தான்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதாக அமைந்த பாடலின் உட்கருத்தை அறிந்த சண்பகப் பாண்டியன் மகிழ்ச்சி அடைந்து தருமிக்கு பரிசளிக்க உத்தரவிட்டான். இதனைக் கேட்டதும் தருமி கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நக்கீரர் இறைவனிடம் வாதிடுதல்
சங்கமண்டத்திற்கு முன்னே கட்டியிருந்த பொற்கிழியை தருமி எடுக்கச் செல்கையில் நக்கீரர் பொற்கிழியை எடுக்க விடாமல் தடுத்தார்.
அங்கே வந்த சண்பகப் பாண்டியனிடம் “இப்பாடலில் சொல் குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் பொருள் குற்றம் உள்ளது. இதற்கு தாங்கள் பரிசளிப்பது ஆச்சரியமாக உள்ளது” என்று கூறி தருமியிடம் பாடலைத் திருப்பிக் கொடுத்தார்.
தருமி நேரே சொக்கநாதரின் சந்ததிக்குச் சென்றார். “பொருள் வேண்டும் என்ற ஆசையில் உன்னைக்கூட மறந்து பாடலை அரசரிடம் எடுத்துச் சென்றேன். அப்பாடலில் பிழை இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பி விட்டனர். குறையுள்ள பாடலை என்னிடம் கிடைக்கச் செய்ததேன்?” என்று புலம்பினான்.

அப்போது மீண்டும் புலவர் வடிவில் தோன்றிய சொக்கநாதர் தருமியிடம் நடந்தவற்றைக் கேட்டறிந்து நேரே சங்கமண்டபத்துக்குச் சென்றார்.
அங்கிருந்தோரிடம் “யார் என்னுடைய பாட்டில் குற்றம் இருப்பதாகச் சொன்னது” என்று சிங்கம்போல் கர்ஜித்தார். அப்போது நக்கீரர் “உங்களுடைய பாட்டில் சொல் குற்றம் இல்லை. பொருளில்தான் குற்றம் உள்ளது.” என்றார்.
அதாவது பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதானே உங்கள் பாடலின் கருத்து. அதுதான் குற்றம்.
பெண்கள் நறுமலர்கள் மற்றும் திரவியங்களைப் பூசிக்கொள்ளுதல் போன்ற செயல்களால்தான் அவர்களின் கூந்தலுக்கு மணம் உணடாகிறது. இயற்கையில் அவர்களின் கூந்தலுக்கு மணம் இல்லை என்று கூறினார் நக்கீரர்.

அதனைக் கேட்டதும் இறைவனார் “கற்புக்கரசிகள், தேவலோகத்துப் பெண்கள் ஆகியோரின் கூந்தலுக்குக்கூட இயற்கையில் மணம் இல்லையா?” என்று வெகுசினத்துடன் கேட்டார்.
அதற்கு நக்கீரர் “நான் தினந்தோறும் வணங்கும் திருகாளத்தியப்பரின் இடப்பாகத்தில் இடம்பெற்ற ஞானப்பூங்கோதையாகிய உமையம்மையின் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் கிடையாது” என்று வாதிட்டார்.

இறுதியில் இறைவனார் தன்னுடைய நெற்றிக்கண்ணினை திறந்து காட்டினார். வந்திருப்பது இறைவனார் என்று தெரிந்தும் நக்கீரர் “நீர் இந்திரன் போல் உடல் முழுவதும் கண்களாக்கிச் சுட்டாலும் உம்பாடல் குற்றமுடையதே” என்று கூறினார்.
உடனே இறைவனாரின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த தீப்பொறியானது நக்கீரரைச் சுட்டது. நக்கீரர் வெப்பம் தாளாமல் பொற்றாமரைக் குளத்தில் அழுந்தினார். சொக்கநாதர் அவ்விடத்தைவிட்டு மறைந்து அருளினார்.

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் உணர்த்தும் கருத்து
இறைவனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்று நக்கீரர் கூறியதிலிருந்து நடுநிலை வகிப்பவர்கள் யாருக்காகவும், எந்த சூழ்நிலையிலும் நடுநிலை மாறக் கூடாது என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

தருமி சிவாஜி கணேசன் வசனம் – திருவிளையாடல் படம் 

தருமி: பிரிக்க முடியாதது என்னவோ
சிவா: தமிழும் சுவையும்
தருமி: பிரியக்கூடாதது
சிவா: எதுகையும் மோனையும்

தருமி: சேர்ந்தே இருப்பது
சிவா: வறுமையும் புலமையும்
தருமி: சேராதிருப்பது
சிவா: அறிவும் பணமும்

தருமி: சொல்லக் கூடாதது
சிவா: பெண்ணிடம் ரகசியம்
தருமி: சொல்லக் கூடியது
சிவா: உண்மையின் தத்துவம்

தருமி: பார்க்ககக்கூடாதது
சிவா: பசியும் பஞ்சமும்
தருமி: பார்த்து ரசிப்பது
சிவா: கலையும் அழகும்

தருமி: கலையில் சிறந்தது
சிவா: இயல் இசை நாடகம்
தருமி: நாடகம் என்பது
சிவா: நடிப்பும் பாட்டும்

தருமி: பாட்டுக்கு
சிவா: நாரதன்
தருமி: வீணைக்கு
சிவா: வாணி

தருமி: அழகுக்கு
சிவா: முருகன்
தருமி: சொல்லுக்கு
சிவா: அகத்தியன்
தருமி: வில்லுக்கு
சிவா: விஜயன்

தருமி: ஆசைக்கு
சிவா: நீ
தருமி: அறிவுக்கு
சிவா: நான்