காஞ்சி காமாட்சி பாமாலை

முத்துமணி மண்டபம் ரத்தினச் சிம்மாசனம்
முழங்கிடும் மணி ஓசையே
முப்பெரும் சக்தியாம் திரிசூலம் ஏந்திடும்
முத்து நகை பெற்ற தாயே

பத்துவிரல் சூட்டிய பவளமணி மோதிரம்
பாடகத் தண்டை கொலுசும்
பசையுடன் நீலமும் புஷ்பராகத்திலும்
பதித்திட்ட தாலியழகும்

முத்து மூக்குத்தியும் முழுவையிரக் கம்மலும்
மிளிர்கின்ற ஒட்டியாணம்
முத்துமணி மாலையுடன் முக்தி தரும் கைகளில்
முக்கனிக் கரும்பு வில்லும்

சித்தத்தில் என்றுமே சக்தியாய் விளங்கிடும்
தேவியவள் அருள் மாட்சியே
செந்தமிழ் பாடிடும் சிந்தையில் வாழ்ந்திடும்
தேவியுமை காமாட்சியே !!!