#வசந்த_பஞ்சமி_ஸ்பெஷல் !

சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

கலைமகள் அந்தாதி !

இறை வணக்கம்:

கருத்துட் கனன்ற கலைமகட் பொருண்மை
அருட்பா நிறைத்த அந்தாதியால் – உரைக்க
வயப்படு வாணிநீயே வனப்புடை வாக்காய்
நயத்தொடு நல்குவாய் நயந்து.
அந்தாதிக் கட்டளை:
காயத்துரு வடிவமுமாய் கண்மலரும் வண்ணமுமாய்
நேயர்செவி மடுக்குமொலி நெஞ்சுருகும் பண்ணமுதாய்
தூயவெண் தாமரைக்கண் துலங்குமெழில் நான்முகியாய்
தாயறிவாய் பேதித்துத் தரங்காட்டும் நறுமுகையே!

முகவெழிலும் முறுவலிதழும் முத்தென்னும் பல்லொளியில்
அகவிருள்தம் முனைவரிடம் அகல்வித்தும் எழுத்துவித்தும்
பகுத்துணரும் மதிநலனாய் பருப்பொருளின் உருப்பொருளாய்
தொகுத்துணர விதித்தருளும் தொகைஞானக் கலைவாணியே!

அந்தாதி:

1. அன்பினழகு வடிவமே அன்னைக் கலைமகள்!

காயத்துரு வாகிவெண் கமலாசனத்(து)
அமர்மலர்க் கருணையாய்
ஆயகலை அகிலத்து அருளிடும்
அன்னையாய் அயனகத்து
நாயகியாய் வீணைதரும் நாதமுடன்
விளம்பிமிகு நல்லிசை
வாயமுதாய் ஞானமெழில் வள்ளலாய்
வழங்குநல் வடிவமுமே!

2. அறிவுநெறித் தெய்வமே அமுதஞானத் தலைமகள்!

வடிவமுமாய் வளமைசொல் வனப்புமாய்
வளர்நிலை வரம்பிலியாய்
விடியலுமாய் வித்தைதரும் போதகியாய்
விதிவகுக்கும் வேதகியாய்
படிகநிறமாய் பனிமலராய் பதம்மிகுத்த
பைந்தமிழ்ப் பாவையாய்
கடிமலராய் மனமலரில் கருதுபொருட்
கமழ்ந்திடுங் கண்மலரே!

3. ஆயகலை அனைத்தையும் அருளும்வாணி அம்மையள்!

கண்மலரும் எண்ணமுமாய் கருப்பொருளின்
வண்ணமுமாய் கனிமொழித்
திண்ணமுமாய் திசையெங்குந் திறல்பவளோ?
தெளிர்பவளோ? தண்மதியால்
பண்புவளர்ப் பைங்கிளியோ? பால்பிரிக்கும்
அன்னமோ பயில்நடையில்?
வண்ணமயில் தோகையோ? வல்லெழிலாய்நீ
விளையாடும் வண்ணமுமே!

4. ஆடல்பாடல் ஆனந்தம் அறிநிலையின் செம்மையள்!

வண்ணமுமாய் இன்பமுமாய் வானிலொளி
நடம்புரியும் வான்கொடியாய்
விண்ணகமாய் தத்துவமாய் வெளிச்சந்தரு
விளக்கமுமாய் வித்தைமிகும்
மண்ணகமாய் பிண்டமுமாய் வியங்குகோள்
அண்டமுமாய் மனவெழிலாய்
நுண்மதியால் பண்மிகுத்து நுகர்பொருளாய்
பரிணமிக்கும் நேயர்செவியே!

5. இயலிசை நாடகமாய் இனிமையாகும் நயத்தினள்!

நேயர்செவி விருந்தாய் நெஞ்சிளக்கி
மருந்ததுவாய் நினைவறமாய்
நயனமொழி பொழியுமதி நடனமெனும்
கலையருவி நதிமழையாய்
இயம்புவழி தேன்மொழி யாலிசைக்கும்
நல்லறமாய் ஏந்திழையாள்
முயங்குமது நரம்புவழி முகக்குமிசை
வருடுமழை மடுக்குமொலியே!

6. இன்பதுன்பம் யாதிலும் இயல்புமாகும் வயத்தினள்!

மடுக்குமொலி இசைமிகுத்து வையத்துயிர்
இன்பதுன்பம் வாழ்ந்துயர
முடுக்குவித்து நிலத்துமிசை முனைந்தேற
அனல்புனல் வான்படராய்
எடுத்தியம்பி இயன்றவுயிர் முயன்றவரை
முக்திநலம் இயல்பவளை
நெடும்புகழ் நிறைதரும் நித்திலத்தை
நினைந்திருக்க நெஞ்சுருகுமே!

7. ஈகைகருணை உள்ளமதில் ஈண்டுதருந் தாயவள்!

நெஞ்சுருகும் ஏழையர்க்கும் நினைவறமும்
ஏழிசையும் நிலைநிறுத்தும்
வஞ்சமிலா நெஞ்சினர்பால் வாஞ்சையுடன்
கல்விஞானம் வரமளிக்கும்
கொஞ்சுமொழி ஏடேந்துங் கோலமயில்
செங்கரத்துக் கலைவாணிநின்
பஞ்சணைய பதமலர்த்தாள் பணிந்துருகப்
பரிமளிக்கும் பண்ணமுதே!

8. ஈரமுள்ள நெஞ்சினுள் என்றுமேயிளச் சேயவள்!

பண்ணமுதாய் புதுமைகளைப் படைப்பிக்கும்
பொன்னமுதப் பூங்குழலி;
எண்ணமதில் செழுங்கலையும் ஏற்றநலமும்
முழுமையும் இயலுங்கிளி;
கண்ணியத்து நெஞ்சகத்தே கருமவினை
திறமுயர்த்துங் கலைக்கிழத்தி;
துண்ணியகச் சுடர்பெருக்கி துறையெலாம்
அறிவுநல்குந் தூயவளே!

9. உதயமதியம் இரவுயென உலகினில் இலங்குவள்!

தூயவெண் சங்கத்துத் தொடரொலியாய்
ஓங்காரஞ் சங்கமித்து
நாயகியாய் இரவுபகல் நாளுருளக்
கனவும்நனவு நடப்புமாகி
மாயப்பிறப் பிடரால் துயருழலும்
வாழ்வை மானுடத்தை
சாயத்தால் சதுராடிச் சீராக்குஞ்
சதுர்மகள் தாமரையே!

10. உயர்வுதாழ்வு நிலையென உணர்வினில் துலங்குவள்!

தாமரைக்கண் அகத்தேவுயர் தமியளாய்
தாயாய் தாரமாய்
தோமத்தில் சோதரியாய் தோழியாய்
சேயாய் தரணிவுயிர்
வாமத்தில் வகையறிவு வடிவுநிற
இயலுறழ்ந்து மாற்றகலத்
தூமதியால் சோதித்து போதித்து
சாதித்தன்பு துலங்குமெழிலே!

11. ஊழியையுங் காலத்தையும் உருவகிக்குந் தலைமகள்!

துலங்குமெழில் காரணியாய் தூயன்புத்
தாரணியாய் துன்பநிலை
கலங்குமனம் தெளிந்தறிய அறம்பொருள்
இன்பம்வீடாய் கலைநெறி
இலங்குமயில்; இதந்தருநல் கடையவருங்
கடைந்தேற இனிமைநிறை
நலங்குவித்து நடைவிளம்பி தெளிஞானத்
துணைநல்கும் நான்முகியே!

12. ஊக்கத்தையும் ஆக்கத்தையும் நிருவகிக்குங் கலைமகள்!

நான்முகியாய் நல்லறத்து வாழ்வளிக்கும்
அருங்கலையே; நானிலத்து
வான்முகிலாய் இடபிங்கலை மையநிலை
பிரணவாணவ ஒடுங்கலை
ஊன்பொதிக்கு உறுத்தியும் நடுங்கலை
தடங்கலை ஒறுங்கலையாய்
தேன்மதிக்குத் தேவையெனுந் திகட்டொணாத்
தேறுங்கலை தாயறிவே!

13. எழிலொழுங்கு நேர்மையில் இலங்கிடும் இனியவள்!

தாயறிவாய் ஒருமனத் திருகண்
முக்குணச் சதுர்மறை
நாயகியாய் ஐம்பொறி அறுசுவை
ஏழிசை நல்லறச்
சேயகமாய் எண்திசை நவரசப்
பற்றாகித் தீதெனும்
பேயகலப் பிணியகலப் பேணுவித்து
வாலறிவாய் பேதித்தவளே!

14. எண்ணம்நினைவு வாய்மையில் துலங்கிடுங் கனியவள்!

பேதித்து வகையாகி பிணக்கொழி
ஞானவருட் பொருளாகி
வாதித்து இயல்விதி போதித்து
வாய்மை உணர்வித்து
சோதித்து மெய்நீதி ஓதுவித்து
சுழற்சிதன் சூட்சுமமும்
சாதித்து சலித்து சகலகலை
சமைக்கிறாய் தரங்காட்டியே!

15. ஏற்றமிறக்கம் பண்ணென எழுச்சிநல்கும் பாமகள்!

தரங்காட்டும் அருங்கலைத் துலாக்கோலாய்
தரணிமிசைத் தையலாய்
உரங்காட்டும் உள்ளறிவாய் உணர்வாய்
உதயமிக்கும் உத்தமியாய்
சிரங்காட்டும் சிந்தனைத் தெளிவுமாய்
நற்கலை தீக்கலையாய்
நரங்காட்டும் செய்வினைக் காரணியாய்
நலங்காட்டும் நறுமுகையே!

16. ஏற்றுவாக்கில் பண்பென இசைமிகுக்கும் நாமகள்!

நறுமுகையே நயக்கும் நலவுறுதி;
நளினவழி நேர்மறை
குறுநகையே பயக்கும் கோலயிசை;
நடுநிலை குளிர்மதி
பொறுமையே செயக்கும் பெருமை;
இன்சொல் பொருந்து
மறுமொழியே இயக்கும் வாக்கும்
முயக்கும் முகவெழிலே!

17. ஐயம்விளக்கம் உபாயம் அனைத்தையுங் கொடுப்பவள்!

முகவெழிலும் எழில்நடையும் முழுவயிர
உடற்பொலிவும் முழுமதியின்
தகவொளியும் இளங்கதிரின் தகுவெயிலும்
இளஞ்சுவடில் தருபொருளும்
அகவெழிலும் அறப்பொருளாய் அனுபவத்து
விழுப்பொருளாய் அறிவுநிலை
முகத்தெரியும் முதற்றறிவாய் மூதறிவாய்ப்
பரிமளிக்கும் முறுவலிதழே!

18. அச்சந்துக்கம் அபாயம் அனைத்தையுங் கெடுப்பவள்!

முறுவலிதழும் மோகமும் முத்தமும்
காமமும் முனைந்தேறி
செறுபகையும் போகமும் செற்றறுக்கும்
யோகமும் சேர்ந்தேகி
உறுபசியும் ஓவாப்பிணியும் உதறுஞ்சுக
அறிஞானம் உணர்ந்தாகி
வறுமையும் வல்வினையுங் களையுங்கலை
வாக்காகும் முத்தென்னே!

19. ஒப்பனை கற்பனை உருவுமாகும் எழிலவள்!

முத்தென்னும் கற்பனை சிற்பமாய்
சித்திரமாய் மொழியியலாய்
சித்தென்னும் அகம்நாடி செயல்வித்தாய்
ஒழுங்கியல் சொத்துமாய்
அத்தென்னும் அலகில்லா அடிவிதியாய்
அகிலத்து அருள்ஞானப்
பித்தென்னும் பேரருளில் பிணைந்தாடும்
பரம்பொருட் பல்லொளியே!

20. ஒப்புமை பேதமாகி ஒயிலுமாகுங் கலையவள்!

பல்லொளியில் ஒன்றாய்மிகு பொருளாய்
பரவசப் பிரிவொப்பாய்
வல்லெழிலில் இலைதளிரில் மலரிதழில்
இயல்புதரு வடிவழகில்
நல்லறத்தில் செஞ்சொல் நனிமொழியில்
கனிந்துருகி நுவலுதலில்
அல்பகலென்? அகற்றுவாய் அரற்றும்
அறியாமை அகவிருளையே!

21. ஓவியம் காவியம் உறைந்திடும் நுண்ணியள்!

அகவிருள்தம் அகல்விக்கும் அறிவொளி
அருள்விக்கும் அன்னையாய்
தகவல்மொழி தளைத்துவளர் தரணிவசம்
தகைத்துயருஞ் சாத்திரமாய்
அகரமுதலும் விளங்கலை அன்னார்க்கும்
விளங்குகலை அனுபவமாய்
முகவருளாய் விழுமியத்தால் அன்னாய்
விளக்கிடுவாய் முனைவரிடமே!

22. ஓதலில் வாதுவில் ஒளிர்ந்திடும் திண்ணியள்!

முனைவரிடம் ஊக்கமும் ஆக்கமும்
உரங்கூட்டும் வளர்மதியால்
சினைபெருகும் எழிலின்பச் சிந்தனையின்
வளங்கூட்டி செய்தொழிலால்
வினையகலும் நன்னெறியும் வழிமுறையும்
தகைக்கும் விளக்கமதாய்
அனைவருளும் இருளகற்றும் அகத்துறை
ஆன்மவொளி அகல்வித்தே!

23. ஔடதம் விடமுமாய் யாதுமாகுங் கன்னியள்!

அகல்வித்தும் அருள்வித்தும் அகவழுக்கைத்
தெளிவித்தும் ஔடதமாய்
நுகர்வித்தும் நுண்கலையைப் பகர்வித்தும்
நுழைபுலத்தை நேர்மறையாய்
புகல்வித்தும் உணர்வித்தும் புணர்வித்தும்
உண்ணுவித்தும் புன்மைதனை
இகல்வித்தும் கல்வித்தாய் இலங்குகிறாய்
எண்ணுவித்தும் எழுத்துவித்தே!

24. அன்னம் அமுதமாய் ஆர்த்திடும் அன்னையள்!

எழுத்துவித்தும் உறங்குவித்தும் நச்சினார்க்கு
இனியவளாய் இரங்குவித்தும்
வழுத்துவித்தும் பரம்பொருளை மெச்சினார்க்கு
வணக்குவித்தும் வழங்குவித்தும்
செழுத்துவித்தும் செம்பொருளால் செயல்வித்தும்
சேகரத்துவளர் செழுஞானம்
பழுத்துவித்தும் சூத்திரமாய் பண்பாடாய்
பரிணமிப்பாய் பகுத்துணரவே!

25. கல்விகேள்வி ஞானந்தரும் கலைவாணி வேணியள்!

பகுத்துணரும் அறிவுதரும் பண்புநலம்
மிகுத்துவரப் பற்றறுக்கும்
தகுத்துணரும் முக்குற்றைத் தகர்த்தெறிய
தானதருமம் தாமந்தரும்
நகுத்துணரும் நல்லறிவால் நாணயத்தால்
நாநயத்தால் நயம்பயக்கும்
வகுத்துணரும் யாக்கையும் வளர்ந்தேகும்
வாழ்கலை மதிநலனே!

26. கருத்திலொளி யோகந்தரும் வண்ணமயில் மேனியள்!

மதிநலனாய் மூவாசை மும்மலமழிய
முக்திதரும் மருங்கினில்
கதியருளாய் யோகத்துயில் யாகந்தரும்
மோனமுயர் கருத்ததனில்
நதிவழிவாய் அருவியலாய் ஞாலந்தரும்
அறிவொளி ஞானப்பிழிவாய்
பதியறிவாய் பாரதியாய் பரம்பொருளாய்
பதமாகும் பருப்பொருளே!

27. சங்கடங் களையுமதிச் சகலகலா வல்லியள்!

பருப்பொருளின் பரணிமிகும் படைப்பருளால்
படருந்துயர் பற்றறுத்து
கருப்பொருளின் திரள்பொருளை கூர்மதியால்
சீர்செய்து கவனமீர்
திருப்பொருளாய் திருவமுதத்து திடப்பொருளாய்
திரட்டியாய் திருவுளத்து
விருப்பொருளாய் எண்ணெண் கலைப்பொருளாய்
விளங்கும் உருப்பொருளே!

28. சத்தியத் துள்பொதிந்து சாதிக்கும் மெல்லியள்!

உருப்பொருளாய் நல்லறத்தால் உள்ளுணர்வில்
மெய்யுணர்வை உய்த்துணர
பருப்பொருளாய் விரியுமுடல் பண்கூட்டிப்
பக்குவமாகிப்பின் பராபரமறிய
கருப்பொருளாய் இருத்திமனங் கைகூட்டி
நல்வினையைக் கைக்கொள்ள
தரும்பொருளாய் முக்திஞானந் தழைக்குஞ்
சித்தியாகுவாய் தொகுத்துணரவே!

29. நறுமணத்துள் நாதத்துள் நடனமிடுந் தேவியள்!

தொகுத்துணர வையத்துயிர் துகளெலாம்
அன்புநிறைச் செம்பொருளாய்
செகுத்துணர மதிநலத்துள் செறிவாகும்,
நிலையாமைத் தன்மையுமாய்
பகுத்துணர பொழிஞாலம் பரிணமிக்கும்
மெய்ஞானப் பாங்குமதுவாய்
வகுத்துணர நிலைவாழ்வு மன்னுபுகழ்
ஒன்றென்றே விதித்தருளுமே!

30. நல்மனத்துள் நளினத்துள் நலந்தரும் மாதவள்!

விதித்தருளும் நறுங்கலையும் வழிமுறையும்
வினையறமும் விழுப்பொருளும்
கதித்தருளும் மொழிவளமும் கல்வியறிவும்
உளநலமும் கருதுபொருளும்
மதித்தருளும் அறக்குருபரரும் ஐம்பூதங்களும்
மறுக்கடவுளரும் உன்னகத்தில்
துதித்தருளும் படிக்களித்துத் திறமனைத்தும்
வலிந்தளிக்கும் தொகைஞானமே!

31. மலரிதழில் இலைதளிரில் மணங்கமழுங் கலையவள்!

தொகைஞானக் கலைமாதே கண்ணகத்தே
தெளிஞானம் துலக்கியபின்
பகையேது? புகையேது? பாவந்தரும்
வினையேது? பற்றுமகன்றின்
நகைநாண வகையேது? கையறு
வதையுமேது? நள்ளிருளுமேயேது?
குகையெனும் அகமாடத்துட் குலையா
அறிவொளிக் கலைவாணியே!

32. மனமலரில் கவிதையென மடல்விரிக்குங் கலைமகள்!

கலைவாணியே! களங்கமிலா மனமலரில்
களிமிகுத்துக் கவிநிறைக்குங்
கலைஞானமே! உளங்குவித்துக் கரங்குவிப்பார்
நலங்குவிக்கக் கசிந்துருகி
கலைபொழியும் நாமகளே! கவிமழையே!
நற்பெருஞ்சீர் கனிந்தருளும்
கலையமுதே! நின்பதமலர் சரணடைந்தேன்!
நிறைநின்றன் காயத்துருவே!

*கலைமகள் அந்தாதி முற்றும் *

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

வசந்த பஞ்சமி ஸ்பெஷல் !

ஸ்ரீசரஸ்வதிக்கு ஒரு த்வாதச நாம ஸ்தோத்திரம் இருக்கிறது. பன்னிரு நாமங்கள் கொண்டது.

ஸரஸ்வதி திவ்யம் த்ருஷ்டா

வீணாபுஸ்தக தாரிணீ

ஹம்ஸவாஹ ஸமாயுக்தா

வித்யா தாநகரீ மம

ப்ரதமம் பாரதீ நாம

த்விதீயம் ச சரஸ்வதி

த்ருதீயம் சாரதா தேவீ

சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ

பஞ்சமம் ஜகதீக்யாதம்

ஷஷ்டம் வாகீஸ்வரீ தத

கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா

அஷ்டமம் ப்ரஹ்மசாரிணீ

நவமம் புத்திதாத்ரீ ச

தசமம் வரதாயினீ

ஏகாசதசம் கூத்ரகண்டா ச

த்வாதசம் புவனேச்வரீ

ப்ராஹ்மி த்வாதச நாமானி

த்ரிசந்த்யம் யஹ் படேன் நர:

ஸர்வஸித்திகரீ தஸ்ய

ப்ரஸன்னா பரமேச்வரீ

ஸா மே வஸது ஜிஹ்வாக்ரே

ப்ரஹ்மரூபா ஸரஸ்வதீ:

“வித்யா தானத்தைச்செய்யும் சரஸ்வதி தேவி திவ்யமான பார்வையால் என்னைப் பார்க்க வேண்டும். அவள் வீணை, புஸ்தகம் ஆகியவற்றைத் தாங்கியவள்; அன்னப்பட்சியை வாகனமாகக் கொண்டிருப்பவள்” என்று சங்கல்பித்து அவளைக் கேட்டுக்கொண்டு,

பாரதி,

ஸரஸ்வதி,

ஸாரதாதேவி,

ஹம்ஸவாஹினி,

ஜகதி,

வாகீஸ்வரி,

கௌமாரி,

ப்ரஹ்மாசாரிணி,

புத்திதாத்ரி,

வரதாயினி,

க்ஷூத்ரகண்டா,

புவனேஸ்வரி

ஆகிய பன்னிரு நாமங்களால் துதிக்கிறோம்.

“அவள் எல்லாவகையான சித்திகளையும் செய்பவள். மலர்ச்சியுடன் எழுந்தருளியிருப்பவள். அவள் என்னுடைய நாவில் வசிக்கவேண்டும். அவள் பிரம்மரூபியாகிய சரஸ்வதி” என்றும் பிரார்த்திக்கிறோம்.

அனைவருக்கும் வசந்த பஞ்சமி நல்வாழ்த்துகள் !

வசந்த பஞ்சமி ஸ்பெஷல் !

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம்

ஸுவக்ஷோஜகும்பாம் ஸுதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதா வலம்பாம் ப்ரபுண்யா வலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதாநோஷ்ட பிம்பாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

நல்ல மார்பகங்களாகிய கும்பமுடையவளும், அம்ருதம் நிரம்பிய கும்பத்தை கையில் உடையவளும், அருளாகிய பிடிப்பு உடையவளும், க்க புண்யம் வாய்த்தவருக்கே எட்டிப்பிடிக்க முடிந்தவளும், கொடுக்கிறேனே என்ற சொல்லுடன் கூடிய கோவைப் பழ மொத்த உதடு உடையவளுமான எனதன்னை ஸ்ரீசாரதாம்பாளை சேவிக்கிறேன்.

கடாக்ஷே தயார்த்ராம் கரே ஜ்யானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபை:ஸுபத்ராம்
புரஸ்த்ரீம் விநித்ராம் புரஸ்துங்கபத்ராம்
பஜேசாரதாம்பாமஜஸ்ரம் மதம்பாம்

கடைக்கண்ணில் கனிவுகொண்டவள், கையில் ஞான முத்திரையும், கலைகளில் விழிப்பும், செயல்பாடுகளில் நல்லவற்றையும் கொண்ட கண்காணிப்புள்ள பதிவ்ரதையாயும், உயரிய நல்லவற்றையே தன் முன்னே காண்பவளாயும் இருக்கிற என தன்னை ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.

லலாமாங்கபாலாம் லஸத்கானலோலாம்
ஸ்வபக்தைகபாலாம் யச:ஸ்ரீகபோலாம்
கரேத்வக்ஷமாலாம் தநத்ப்ரத்னலோலாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

நெற்றியில் சிறந்த திலகம் கொண்டவள், நல்ல கீதத்தில் ஈடுபாடுள்ளவள், தனது அடியார்களைப் காப்பவள், புகழ் அழகுடன் ளிரும் கன்னங்கள் உள்ளவள். கையில் ஜபமாலை, தெளிவான பழமையில் நேசமும் கொண்டவள், அத்தகைய எனதன்னை ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.

ஸுஸீமந்த வேணீம் த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத்வஜ்ரபாணீம்
ஸுதாமந்தராஸ்யாம் முதா சிந்த்ய வேணீம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

நல்ல வகிடும், பின்னலும் கொண்டவள், கண்பார்வை காரணமாக மான்களை விஞ்சியவள், அழகிய கிளிப்பேச்சுள்ளவள். இந்திரன் வணங்க, அம்ருத பாணத்தால் தெளிவு கொள்ளாத முகபாவமுடையவள், கரைபுரண்டோடும் மகிழ்ச்சி கொண்டவள். அத்தகைய ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.

.ஸுசாந்தாம் ஸுதேஹாம் த்ருகந்தே கசாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனந்தா மசிந்த்யாம்
ஸ்ம்ருதாம் தயஸை:ஸர்க பூர்வதிதாம் தாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

நல்ல அமைதியும், உடல்வாகும் கொண்டவள், கண் முடிகின்ற இடத்தில் கேசம் முடிவதும், கொடி போன்ற அங்கம் அமைந்தும் இருப்பவள். இவ்வளவு என்றோ, இப்படி என்றோ சொல்ல முடியாதவள். முனிவர்கள் தியானம் செய்யப்படுபவள், பிரம்மன் படைப்புக்கு முன்னமே இருப்பவள். அத்தகைய அன்னை சாரதாம்பாளை சேவிக்கிறேன்.

குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே மஹோக்ஷேsதிரூடாம்
மஹத்யாம் நவம்யாம் ஸதாஸாமரூபாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

மான் மீதும், குதிரை மீதும், சிங்கத்தின் மீதும், கருடன் மீதும், அன்னத்தின் மீதும், யானை மீதும், விருஷபத்தின் மீதும் ஏறப் பயணிப்பவளும் மஹாநவயன்றும் எப்பொழுதும் ஸாம் வேத ஸ்வரூபிணியாக இருப்பவளுமான அன்னை சாரதாம்பாளை சேவிக்கிறேன்.

ஜ்வலத்காந்திவஹ்னீம் ஜகன்மோஹனாங்கீம்
பஜே மானசாம்போஜாசுப்ராந்தப்ருங்கீம்
நிஜஸ்தோத்ரசங்கீதந்ருத்யப்ரபாங்கீம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

அனல்ரூப மானவளாம்
அனைத்துலகும் ஆள்பவளாம்
இதயமெனும் தாமரைமலரில் – அன்னை
வண்டெனவே ரீங்கரிப்பாளாம். அத்தகைய சாரதாம்பாளை எனதன்னையை சேவிக்கிறேன்.

பவாம்போஜநேத்ராஜ ஸம்பூஜ்ய மாநாம்
லஸன்மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சின்ஹாம்
சலச்சஞ்சலா சாருதாட ங்ககர்ணாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

பிரஹ்ம விஷ்ணு மகேச்வரர்களால் பூஜிக்கப்பட்டவள், அழகிய புன்முறுவலையே முகத்தின் அடையாளமாக உடையவள். அசையும் ன்னலெனத் தோன்றும் காதணி கொண்டவள். அத்தகைய சாரதாம்பாளை எனதன்னையை சேவிக்கிறேன்.

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் முற்றிற்று.

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

வசந்த பஞ்சமி ஸ்பெஷல்

சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

வசந்த பஞ்சமி ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகின்றது.

ஆதியில், பிரம்ம தேவர் அனைத்து உலகங்களை யும், உயிரினங்களையும் படைத்த பின்னரும், அவருக்கு ஏதோ குறை இருப்பது போலவே தோன்றியது. அனைத்துப் படைப்புகளும் அமைதியாக, மௌனமாக‌ இருந்தன.

இது குறித்து சிந்தித்தவாறே பிரம்ம தேவர் தம் கமண்டலத்தை எடுத்தார். அப்போது அதிலிருந்து சில துளிகள் கீழே சிந்தின. அவை ஒருங்கிணைந்து, ஒரு பெரும் சக்தியாக, மிகுந்த பிரகாசத்துடன் உருவெடுத்தன.

ஒரு அழகிய பெண், நான்கு திருக்கரங்களுடன் கூடிய உருவில் பிரம்ம தேவர் முன் தோன்றினாள்.. சுவடிகள், ஸ்படிக மாலை, வீணை முதலியவற்றைத் தாங்கியவளாகத் தோன்றிய அந்த மஹாசக்தி, தன் வீணையை மீட்டி, தேவகானம் இசைக்கத் தொடங்கினாள். ஞான ஒளிப் பிழம்பான அம்பிகை, கானம் இசைக்கத் தொடங்கியவுடன், பிரம்ம தேவரின் படைப்புகள், ஒசை நயம் பெற்றன..

ஆறுகள் சலசலக்கும் ஒலியுடன் ஓடத் துவங்கின. கடல் பெருமுழக்கத்தோடு அலைகளைப் பிரசவித்தது.. காற்று பெருத்த ஓசையுடனும், முணுமுணுக்கும் ஒலியுடனும் வீசியது.

மனிதர்கள் மொழியறிவு பெற்றனர். பிரம்மதேவர் மகிழ்ந்தார்.வாக்வாதினி, வாகீசுவரி, பகவதி என்றெல்லாம் அம்பிகையைப் போற்றித் துதித்தார். இவ்வாறு சரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி நாள் என கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞானம் மற்றும் அறிவு சார் கலைகளில் முன்னேற்றம் கிடைப்பதுடன், உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை.

வட மாநிலங்களில் குறிப்பாக, மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் வசந்த பஞ்சமி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

அம்பிகையின் திருவடிகளில் சரணம்!

வசந்த பஞ்சமி ஸ்பெஷல் !

சரஸ்வதி தேவியின் திருவுருவத்தைத் தியானிக்க ஒரு அருமையான ஸ்லோகம் இது!

“யா குந்தேந்து துஷார ஹார தவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர தண்ட மண்டித கரா
யா ஸ்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவை: சதா பூஜிதா
சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி
நிச்சேஷ ஜாட்யாபஹா”

யா குந்த இந்து துஷார ஹார தவளா –

யார் சந்திரனைப் போலவும் பனியைப் போலவும் வெண்மையான மல்லிகை மாலையை அணிந்து கொண்டிருக்கிறாளோ

யா சுப்ர வஸ்த்ராவ்ருதா –

யார் வெண்மையான ஆடையை அணிந்திருக்கிறாளோ

யா வீணா வர தண்ட மண்டித கரா –

யார் வீணையை ஏந்திய வரம் தரும் திருக்கைகளை உடையவளோ

யா ஸ்வேத பத்மாஸனா –

யார் வெண்தாமரையில் வீற்றிருப்பவளோ

யா ப்ரஹ்ம அச்யுத சங்கர ப்ரப்ருதிபி: தேவை: சதா பூஜிதா –

யார் பிரம்மன் அச்சுதன் சங்கரன் முதலிய தேவர்களால் என்றும் வணங்கப்படுபவளோ

சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி நிச்சேஷ ஜாட்யாபஹா –

செயலின்மையையும் அறிவின்மையையும் அறவே நீக்கும் அந்த ஸரஸ்வதியென்னும் தாய் என்னை என்றும் காக்கட்டும்!

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

#வாழ்க_வளமுடன்

#ஓம்_சிவ_சிவ_ஓம்

#திருச்சிற்றம்பலம

Leave a Comment