செவ்வாய் தோஷமும் பரிகாரமும்!

🌷  பொதுவாக ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டங்கள் இருக்கும். அந்த ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று அர்த்தம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு, அதேப்போல் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

🌷 செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை தாக்கங்கள் இருக்கும் என கருதப்படுகிறது. அதுவும் திருமணத்தின் மீது இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதற்கு காரணம், திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இதை ஒரு முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. திருமணத்தை தீர்மானிக்கும் போது ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா எனவும், பொருத்தம் உள்ளதா எனவும் உறுதி செய்ய வேண்டும்.

*செவ்வாய் தோஷப் பரிகாரங்கள் :*

🌹 செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோவிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

🌹 செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.

🌹 செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால், செவ்வாய் கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

🌹 கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

🌹 செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.

🌹 செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தினக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம்.

🌹 இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.

🌹 செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

இவ்வாறு செய்வதால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும்.

Leave a Comment