உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் | Thiruvilaiyadal Ukkirapandiyan story tamil

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் ( Thiruvilaiyadal Ukkirapandiyan story) உலக அன்னையான மீனாட்சிக்கு தமிழ்கடவுளான முருகப்பெருமான் மகனாகத் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

உக்கிரபாண்டியனின் பிறப்பு, கல்வி பயின்ற முறை, அவனின் அழகு மற்றும் குமரப்பருவம் எய்திய அவனுக்கு மணம் முடிக்க எண்ணிய சுந்தரபாண்டியனாரின் கருத்து ஆகியவை இப்படலத்தில் விளக்கப்படுகின்றன.

இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் பதினொன்றாவது படலம் ஆகும். நன்மக்களைப் பெற தாய்மார்கள் செய்ய வேண்டியதை பற்றி இப்படலம் குறிப்பிடுகின்றது. இனி இப்படலம் பற்றிப் பார்ப்போம்.

மீனாட்சி கர்ப்பவதியாக விளங்குதல்
மீனாட்சியின் பெற்றோரான காஞ்சன மாலை மற்றும் மலயத்துவசனுக்கு வீடுபேற்றினை அளித்தார் இறைவனான சுந்தரபாண்டியனார்.
பின் அவர் நீதிமுறை பிறழாமல் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்தார். தடாதகை பிராட்டியார் பாண்டியவ வம்சத்தை தழைக்கச் செய்ய மகவு ஒன்றினை பெற விரும்பினார்.
இதனை அறிந்த சுந்தர பாண்டியனார் தமிழ் கடவுளான முருகப் பெருமானை மீனாட்சியின் வயிற்றில் தோன்றச் செய்தார். அம்மையாரும் கர்ப்பவதியானார்.
மீனாட்சியின் கர்ப்பம் குறித்து அறிந்த மதுரை மக்கள் தங்களின் எதிர்கால மன்னனின் வரவை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மீனாட்சி கர்ப்பவதியானதைக் கொண்டாட மதுரை நகரமே திருவிழா பூண்டது.
கர்ப்பவதியான மீனாட்சிக்கு குங்குமப்பூ கலந்த பால், பழங்கள் உள்ளிட்ட அவர் விரும்பிய பொருட்களை எல்லாம் உண்ணக் கொடுத்தனர்.
ஆன்மீகக் கதைகள், பாடல்கள், போதனைகள், தத்துவங்கள் உள்ளிட்ட இறைசிந்தனை மிக்கவற்றை மீனாட்சியைக் கேட்கச் செய்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு விழாவும் மீனாட்சிக்கு நடத்தப்பட்டது.

உக்கிரகுமரார் திருஅவதாரம்
கர்ப்பவதியான மீனாட்சி திங்கட்கிழமையும், திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாள் ஒன்றில் ஆண்மகவினைப் பெற்றெடுத்தாள்.
மீனாட்சியின் குழந்தையைப் பார்க்க திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து வாழ்த்துக்களை வணங்கினர். மதுரை மாநகர மக்கள் தங்களின் இளவரசரின் வரவினை எண்ணி மகிழ்ந்தனர்.
வீடுகள், தெருக்கள் உள்ளிட்டவைகளை அலங்கரித்து விழாக்கள் கொண்டாடினர். பின்னர் அக்குழந்தைக்கு உக்கிரவர்மன் எனப் பெயரிட்டனர்.
நான்காம் மாதத்தில் குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். ஆறாம் மாதத்தில் குழந்தைக்கு அன்னம் ஊட்டினர். பதின்மூன்றாம் மாதத்தில் மயிர்வினை முடித்தனர்.
தேவகுருவாகிய வியாழ பகவான் வேதம் முதலிய கலைகளையும், விற்பயிற்சியையும், வாட்பயிற்சியையும், யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலியவற்றை உக்கிரவர்மனுக்கு கற்பித்தார்.
பாசுபதப் படைப்பயிற்சியை மட்டும் சிவபெருமான் உக்கிரவர்மனுக்கு கற்றுக் கொடுத்தார். பலவித படைப்பயிற்சியையும், வீரவிளையாட்டுகளையும் கற்றுத்தேர்ந்த உக்கிரவர்மன் காளைப்பருவத்தை அடைந்தார்.
அவர் காளைப்பருவத்தில் முப்பத்திரெண்டு இலட்சணங்களும் பொருந்தி சிறந்த நற்குணம் உடையவராக திகழ்ந்தார்.
மகனுடைய போர்திறனும், சாதுர்யத்தையும் கண்டு மகிழ்ந்த சுந்தரபாண்டியனார் “இவன் பூமண்டலம் முழுவதும் அரசாள‌ வல்லவன்” என்று எண்ணினார்.
உக்கிரவர்மனுக்கு திருமுடி சூட்டுவதா? மணம் முடிப்பதா? என தடாதகை பிராட்டியாரும், சுந்தரபாண்டியனாரும் மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து திருமணம் செய்வது என்று முடிவு செய்து திருமணத்திற்கு பெண் பார்க்கத் தொடங்கினர்.

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் கூறும் கருத்து
பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் நல்லனவற்றை பார்க்க, கேட்க செய்தால் நல்ல குழந்தைகளைப் பெறலாம் என்பதே உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் கூறும் கருத்தாகும்.