முனையடுவார் நாயனார்

முனையடுவார் பண்டைய சோழ நாட்டில் திருநீடூரில் அவதரித்த பெருமானாவார். திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.
பண்டைய காலத்தில் வீரத்தில் சிறந்தவர் தம்மோடு பல வீரர்களையும் சேர்த்துக் கொண்டு சிறுபடையை உருவாக்கி அவற்றிற்கு தலைமை பொறுப்பேற்று படைப்பிரிவை உருவாக்கிவைப்பர்.

மன்னர்களுக்கிடையே போர்நிகழும் காலகட்டத்தில், அம்மன்னர்களுள் எவரேனும் இவர்களின் உதவியை வேண்டினால், அம்மன்னனுடன் சேர்ந்து போர் செய்து, உதவி நாடிய மன்னனுக்கு வெற்றி கிடைக்கும்படி செய்வர்.
போரில் வென்ற மன்னனும் தனக்கு உதவிய படையுடை பெரும்வீரனுக்கு பல பரிசுகளையும் பொன்னையும் பொருளையும் வழங்கி சிறப்பிப்பர். இவ்வழக்கம் தொன்றுதொட்டு உள்ள வழக்கமாகும். கடையேழு வள்ளலில் ஒருவரும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவருமான காரி நாயனாரும் இத்தொழிலையும் செய்து வந்தார். இதனால் அவர் திருநாமமும் மலையமான் திருமுடி காரி என வழங்கப் பெற்று சிறப்பிக்கப்பட்டார்.

வீரத்தில் சிறந்த முனையடுவார் நாயனாரும் தம்முடன் பல வீரர்களைச் சேர்த்துக் கொண்டு பெரும்படை வீரராகத் திகழ்ந்தார்.
தம்மிடம் உதவியை நாடிவரும் மன்னர்களின் சார்பாகப் போர் புரிந்து அம்மன்னருக்கு பெரும் வெற்றியை ஈட்டி தந்தார்.
மன்னர்களும் பெரும்படை வீரரான முனையடுவாருக்கு பொன்னையும் பொருளையும் பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

பல உயிர்களைக் கொல்லும் கொடிய தொழிலான போர்த்தொழிலை செய்தாலும், முனையடுவார் சிவபெருமானிடத்தும் சிவனடியவர்களிடத்தும் பேரன்பினைக் கொண்டிருந்தார்.
ஆகையினால் போர் தொழிலால் கிடைத்த பொருட்கள் முழுவதையும் சிவனடியார்களுக்கும் சிவத்தொண்டுகள் புரிவதற்கும், சிவாலயங்களுக்கு எழுப்புவதற்கும் பயன்படுத்தினார்.
சிவனடியார்களை வரவேற்று அறுசுவை உணவளித்து, அவர்கள் வேண்டுவனவற்றை முகம் சுளிக்காது வழங்கி திருதொண்டுகள் பலபுரிந்து இன்புற்றார்.
போர்முனையில் எதிரிகளை அழிப்பதைத் தொழிலாக கொண்டிருந்ததால், இவரின் இயற்பெயர் மறைந்து முனையடுவார் என்று அழைக்கப்பட்டார். இதில் முனை என்பது போர் முனையைக் குறிக்கும் சொல்லாகும்.

போரிட்டு வந்த ஊதியத்தால் சிவனடியார்களுக்கும் சிவாலயத்திற்கும் தொண்டுகள் பல செய்தமையால் ஈசன் திருவடிபேறு பெற்று சிவபுரம் சார்ந்தார். முனையடுவார் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராக வைக்கப்படும் சிறப்பினையும் சிவனது அருளால் பெற்றார்.

முனையடுவார் நாயனார் குருபூசை பங்குனி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப் படுகிறது.

முனையடுவார் நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.