Simma rasi guru peyarchi palangal 2024-25

சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Simma rasi guru peyarchi palangal 2024-25

சவால்களை வென்று… சாதனை படைக்கும் சிம்ம ராசி அன்பர்களே…!!

சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025

நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே!

சிம்மம் குருப் பெயர்ச்சிப்பலன்கள் – 01.05.2024 முதல் 13.04.2025 வரை

 குருபகவானின் நட்சத்திரப் பயணம்: 

 1.5.2024 முதல் 13.6.2024 வரை உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் உங்களின் செல்வாக்கு உயரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். நிர்வாகத் திறன் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு மனை வாங்குவீர்கள். நோய் விலகும்.”

 “13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை உங்களின் விரய ஸ்தானாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் அடிக்கடி பதட்டப்படுவீர்கள். முன்கோபத்தால் ஆரோக்கியம் குறையும். தூக்கம் கெடும். அனாவசியமாக அடுத்தவர்களை சந்தேகப்பட வேண்டாம். தவிர்க்கமுடியாத செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும்.

20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். கருத்து வேறுபாடால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வீர்கள். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சகோதரர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து ஓரளவு பணவரவையும் தந்துக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார்.

10-ம் இடம் பதவியை கெடுக்குமே, அந்தஸ்தை குறைக்குமே என்றெல்லாம் பெரிதாக கவலைப்பட வேண்டாம். ஓரளவு நல்ல பலன்கள் உண்டாகும். 10-ல் குரு அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும்.

பெரிய பிரச்சினைகளெல்லாம் வந்துவிடுமோ, இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்து விடுவோமோ என்ற கவலைகள் வந்து நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளை குடும்பத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வதில்லையென்று ஆதங்கப்படு வீர்கள். மற்றவர்களுக்கு ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தக் கூடும்.”

 “முக்கிய விஷயங்களுக் கெல்லாம் இடைத்தரகர்களை நம்பாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. ஊர் பொது விஷயங்களில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. சில காரியங்களை முன்னின்று நடத்தப்போய் நீங்கள் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும். கணவருடன் வாக்குவாதங்கள் வரும். அவரும் அடிக்கடி கோபப்படுவார். அவர் ஏதோ ஒரு டென்ஷனில் கத்துவதையெல்லாம் நீங்கள் பெரிதுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம்.

பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணத்துக்காக அதிகம் அலைய வேண்டி வரும். மாமனார், மச்சினர், நாத்தனார் வகையில் விமர்சனங்கள் அதிகமாகும். உங்களின் யதார்த்தமான பேச்சை சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உறவினர், தோழிகளுக்கு ஓடி ஓடி உழைத்தும் யாரிடமும் நன்றியில்லையே என்று வருத்தப்படுவீர்கள்.

குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டின் மீது விழுவதால் பணவரவு குறையாது. வருமானம் உயரும். ஆனால் தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும். குரு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள். குரு 6-ம் வீட்டை பார்ப்பதால் பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும்.

வியாபாரத்தில் பெரிதாக முதலீடு செய்ய வேண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரருடன் மோதல் வரும். குரு 10-ல் நுழைந்திருப்பதால் உத்தியோகத்தில் அவமானங்களும், நெருக்கடிகளும், விரும்பத்தகாத இடமாற்றங்களும் இருக்கும். அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது.

சகிப்புத் தன்மையுடனும், நாவடக்கத்துடனும் செயல்பட்டால் இந்த குரு மாற்றம் ஓரளவு நன்மையை தருவதாக அமையும்.

 பரிகாரம்: கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் எனும் ஊரில் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குகள். வாய்ப் பேச முடியாதவர்கள், காது கேளாதவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நடக்கும்.”

குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-25

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment