மேஷ ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Mesham sani peyarchi palangal 2017-20

சிறு கண்ணோட்டம்:

மேஷ ராசி நண்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நன்மையாகவே உள்ளது. இதுவரை இருந்த அஷ்டம சனி முடிவுற்று இப்போது பாக்ய சனி துவங்குகிறது. அதனால் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகிவிடும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை, தேவை இல்லாத மருத்துவ செலவு போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும். இனிமேல் உங்களுக்கு ஏறுமுகம் தான். உங்கள் ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் புதிய முயற்சிகளை நீங்கள் துணிந்து செய்யலாம். இனி செய்யும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி என அனைத்தும் நல்லதாகவே நடக்கும்…

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் இராசி அறியாவதவர்கள் பலன் அறிய:

சு, செ, சே, சோ, சொ, சை, ல, லி, லு, லோ, அ, ஆ, ஆகிய எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக்க் கொண்டவர்களும் சித்திரை மாத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்.

வான மண்டலத்தில் உள்ள ராசிகளில் முதல் ராசியான நவக்கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்த கிரகமான செவ்வாயின் வீட்டிற்கு உரியவரான மேஷராசி நேயர்களே யாரையும் வசிகரிக்கும் ஆற்றலும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் வீரமும் அதிகமான தன்னம்பிக்கையும் உடையவர்கள் ஆவீர்கள்.

உங்கள் ராசிநாதனாக செவ்வாய் பகவான் விளங்குவதால் எதிலும் முதன்மையானவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் வல்லமையும் கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் இழக்கத்தயாராகவும் இருப்பீர்கள். எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சா நெஞ்சமும் தைரியமும் வீரமும், விவேகமும் உடையவர்கள்.

உழைப்பு என்ற சொல்லுக்கு உதாரணமாக இருப்பவர் நீங்கள். அதே சமயம் அதிகமான கோபமும், படபடப்பும் யாரையும் தூக்கி எறிந்து பேசும் கர்வம் உடையவர்கள். எதிரிகளை தேடிச் சென்று பலி தீர்க்கும் சுபாவம் உடையவர்கள். பலி தீர்க்கும் எண்ணத்தையும் கோபத்தையும் விட்டொழித்தால் வாழ்க்கையில் உயர்நிலை அடைவீர்கள். என்பது மட்டும் நிச்சயம். ஏனெனில் உங்களது ராசியில் தான் சூரிய பகவான் உச்சம் பெறுகிறார். ஆக சூரியன் உச்சம் பெற்ற ராசிக்கு உரியவரான நீங்கள் அரசு அதிகாரம், செல்வம் செல்வாக்குடன் வலம்வர வாய்ப்புகள் ஏராளம். அதனால் நிதானத்துடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் உயர்நிலையை அடையலாம்.

இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் இதுகாரும் சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், மனகுழப்பங்கள், அசிங்கம், அவமானங்கள் ஏற்பட வைத்து உங்களை ஒரு வழி பண்ணிவிட்டார். வேலையில் பிரச்சனை, விபத்து, ஆபரேசன் இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார். சனி பகவானுடன் உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயும் சேர்ந்து கடந்த 6 மாதங்களாக சொல்லெனாத் துன்பங்களை கொடுத்து வந்தார்.

இப்பேர்ப்பட்ட சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அதாவது தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு மிகவும் நற்பலன் என்று தான் கூற வேண்டும். 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தெய்வ அனுகூலத்தை உண்டுபண்ணுவார். மேலும் உங்களது ராசிக்கு ராகுபகவான் – 5ம் இடத்திலும், குருபகவான் – 6ம் இடத்திலும், கேது பகவான் 11ம் இடத்திலும் சஞ்சரிப்பது ஓரளவு நற்பலன் ஆகும்.

சனிப்பெயர்ச்சியால் இதுகாறும் உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். மற்றவர்கள் உங்களை நேசிப்பது மட்டுமில்லாமல் உங்கள் நட்பை விரும்பி போற்றுவர். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள்.

பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களைப் பற்றிய செய்திகள் பரவலாக பரவும். அவை நல்லவிதமாக அமையும்.

அடிக்கடி பயணங்கள் ஏற்படும். நீண்ட தூர பிரயாணங்கள் ஏற்படும். வீடு, இடம், மனை மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். உறவினர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எடுக்கும் புது முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுப்புது விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.

தாயாரின் அன்பும் ஆதரவும் இக்காலங்களில் நன்கு அமையும். மேலும் ஒரு சிலருக்கு இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், நிறைய வீட்டு உபயோகப்பொருள்கள் வாங்க வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும். மேலும் அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில், சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் வந்து சேரும்.

விருந்து கேளிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் சற்று பொறுமையுடன் இருத்தல் வேண்டும். உங்களுடைய 5 ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் விருந்து கேளிக்கைகளில் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இருப்பினும் கடும் போராட்டத்திற்கு பின் புத்திர பாக்கியம் ஏற்படும். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு புத்ர தோஷத்தை உருவாக்குவார். பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. குழந்தைகளால் நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும்.

வேலை தேடுபவர்களுக்கும், இது காறும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். சந்தர்ப்பங்களும் சேர்த்து வரும். நல்ல வேலையாட்களால் நன்மை ஏற்படும். வழக்குகள் சாதகமாக இருந்து வரும்.

சுய தொழில் செய்ய வாய்ப்பும், தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க சந்தர்ப்பங்களும் வந்து சேரும். பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். முன்னோர்களது சொத்துகள் கிடைக்கும். அடிக்கடி ஸ்தல யாத்திரையும், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பும். வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். ஒரு சிலருக்கு 2வது திருமணமும் நடைபெற வாய்ப்பும் அமையும்.

பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் ஒரு சிலருக்கு முதலாளிகளாக உருவாகும் வாய்ப்பு அமையப்பெறும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். அவர்களால் நன்மைகள் ஏற்படும். மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டும். அவர்களால் நன்மையும் எற்படும். வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமும் திறமையும் ஒரு சிலருக்கு அமையும்.

பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூரில் அருளும் பெருமாளையும் ராமாநுஜரையும் ஏகாதசி தினத்தில் வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.

Leave a Comment