Vaikasi Visakam Fasting Benefits

வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம் – முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்

வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திர நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். வல்வினைகள் நீங்கும் வளமான வாழ்க்கை அமையும் வேலை வாய்ப்பு பெருகும். காரிய வெற்றி கிடைக்கும். இந்த ஆண்டு வைகாசி விசாகம் புதன் கிழமை மே மாதம் 22 ஆம் தேதியன்று வருகிறது.

வைகாசி விசாகம் வழிபாடு

விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.

வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ள லாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்

வைகாசி விசாகம் புராண கதை

சிவபெருமானின் பெருமையை உணராத பிரம்ம தேவர் மற்றும் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், தட்சனுக்கு பயந்து அவன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டனர். அதனால் அவர்கள் அனைவரும் பெரும் துன்பத்தில் துவளும் நிலை ஏற்பட்டது.

‘உங்கள் அம்சம் பொருந்திய சக்தியை தவிர வேறு எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது’ என்று சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் அந்த துன்பம் தேவர்களுக்கு வந்து சேர்ந்தது.

சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வெற்றி கொள்ளப்பட்டனர். தாங்கள் ஏவிய பணிகளை செய்ய பல பணியாளர்கள், தேவலோக வாழ்வு என்று இன்ப களிப்பில் மிதந்து வந்தவர்கள் அனைவரும் சூரபத்மனுக்கு ஏவல் புரியும்படி ஆயிற்று. இந்த ஏவல் பணி செய்யும் தேவர் குழாமில் பிரம்மதேவரும் கூட தப்பவில்லை.

பல ஆண்டுகாலமாக சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் துன்பம் அனுபவித்து வந்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம் இயற்றினர். அவரை சந்திக்க நந்தி எம்பெருமானிடம் அனுமதி கேட்டு கயிலையின் கதவு அருகே காத்திருந்தனர். எதற்கும் பலனில்லாமல் போயிற்று. செய்த பாவங்கள் அவர்களை துரத்தி வந்தன.

இறுதியாக ‘சிவபெருமானை தரிசித்து தங்கள் துயரங்களை போக்கும்படி கூறி மன்றாடுவது எப்படி’ என்று விஷ்ணுவிடம் தேவர்கள் அனைவரும் சென்று கேட்டனர். அதற்கு அவர், ‘சிவபெருமானின் அம்சத்தில் உருவாகும் குமாரனால் தான் சூரபத்மனுக்கு அழிவு நேரும். இமயனிடம் வளர்ந்து வரும் பார்வதியின் மீது சிவபெருமானுக்கு மையல் வரும் வகையில், மன்மதனை கொண்டு காம பாணம் தொடுக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்.

அதன்படி பிரம்மதேவர், மன்மதனை அழைத்து, சிவபெருமான் மீது மன்மத அம்பு தொடுக்கும்படி கூறினார். நெருப்பே வடிவான ஈசனின் கோபத்தைப் பற்றி தெரிந் திருந்ததால், பயந்து போன மன்மதன் எவ்வளவோ மறுத்தும், பிரம்மதேவர் விடவில்லை. இறுதியில், ‘என் சாபத்திற்கு ஆளாவாய்!’ என்ற பிரம்மதேவரின் மிரட்டலுக்கு அடிபணிந்தான் மன் மதன்.

நந்தி தேவரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற மன்மதன், யோக நிலையில் இருந்த சிவனின் மீது காம பாணத்தை தொடுத்தான். அந்த அம்பு அவரை தொடும் முன்பாகவே, அனைத்தும் அறிந்த ஈசன் தன் நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிப் போய்விட்டனர்.

அவர்கள், ஈசனின் முன்போய் அவரை துதித்து பாடத்தொடங்கினர். சாந்த நிலைக்கு வந்த ஈசன், இமயமலை சென்று பார்வதியை மணம் முடித்து கயிலாயம் திரும்பினார்.

அப்போது தேவர்கள் அனைவரும், ‘சர்வேஸ்வரா! இவ்வுலகில் தங்களுக்கு சமமானவர் எவரும் இல்லை. ஆயினும், சூரபத்ம அசுரர்களை அழிக்கும் வகையில், உங்களுக்கு நிகரான மைந்தனை தாங்கள் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினர்.

தேவர்களுக்கு மேலும் துன்பம் அளிக்க விரும்பாத சிவபெருமான், தனது பழமையான ஆறு திருமுகங் களையும் கொண்டார். ஈசானம், தத் புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம் என்னும் அந்த ஆறு முகத்தில் இருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி பொருந்திய அந்த தீப்பொறிகள் வெளிக் கொணர்ந்த சத்தமும், வெப்பமும் அம்பிகை, தேவர்கள் அனைவரையும் நடுநடுங்கச் செய்தன.

பின்னர், அந்த ஆறு தீப்பொறிகளையும் கங்கையில் விடும்படி அக்னி மற்றும் வாயு தேவர்களுக்கு சிவபெரு மான் உத்தரவிட்டார். அவர்கள் அதனை கங்கையில் சேர்த்தனர். கங்கை, அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்ப்பித்தது. அங்கு ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகிய திருவுருவம் கொண்ட குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை ஆறு தாமரை மலர்கள் தாங்கின. (ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் ஆகும்)

Murugan ashtothram lyrics

விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கம். ‘வானவர்களுக்கும், வையகத்தில் அனைவருக்கும் வாழ்வளிக்க வந்து விட்டான் ஆறுமுகப் பெருமான்‘ என்று எங்கும் ஒரே முழக்கம். சிவபெருமான், அம்பிகையுடன் சரவணப் பொய்கைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்பிகை ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக்கி தன் கையில் அள்ளி, ஞானப்பால் பருகக் கொடுத்தார்.

அன்னையின் கையில் தவழ்ந்து, ஞானப்பால் குடித்து தாகம் தணிந்ததும் ஆறுமுகக் கடவுள் சிரித்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது. தேவர் களுக்கு அந்த அழகு சிரிப்பில், சூரபத்மனின் அழிவு கண்கூடாக தெரிந்தது.

வைகாசி விசாகம் புராண கதை2

பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.

அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் மீன்களாக மாறக்கடவது என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.

மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.

ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார் என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது.

சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்!!

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்

சுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள்

கந்த சஷ்டி விரத முறை பலன்கள்

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன என்று தெரியுமா?

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications