சுந்தரப் பேரம்பு எய்த படலம் | Veduvar story thiruvilaiyadal

சுந்தரப் பேரம்பு எய்த படலம் (Veduvar Story Thiruvilaiyadal) இறைவனான சொக்கநாதர் வேடுவர் வடிவம் எடுத்து விக்கிரம சோழனின் படையின் மீது அம்புகளை எய்து வங்கிசேகர பாண்டியனை வெற்றி பெறச் செய்த‌தை விளக்குகிறது.
விக்கிரம சோழனின் படையெடுப்பு, பாண்டியனின் வேண்டுதல், இறைவனார் சுந்தரேசன் பெயர் எழுதிய அம்புகளை எதிரி படையின்மீது ஏவி பாண்டியனை வெற்றி பெறச் செய்தல் ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.
சுந்தரப் பேரம்பு எய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் திருஆலவாய்க் காண்டத்தில் ஐம்பதாவது படலமாக அமைந்துள்ளது.

பாண்டியனின் வேண்டுகோள்

வங்கிசேகரப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது விக்கிரம சோழன் என்ற சோழ அரசன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.
அவனுக்கு உதவியாக வடநாட்டு அரசர்கள் பலர் பாண்டிய நாட்டினை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தனர்.
சோழனின் படைகள் பாண்டிய நாட்டிற்குள் புகுந்து நீர்நிலைகளை உடைத்தும், பசுக்களைக் கவர்ந்தும், வியாபாரிகளிடம் கொள்ளை அடித்தும் தாக்குதல் நடத்தினர்.
இச்செய்தியை ஒற்றர்களின் மூலம் அறிந்த வங்கிசேகர பாண்டியன் பாண்டிய நாட்டினை சொக்கநாதரை தவிர யாராலும் காப்பாற்ற இயலாது என்று எண்ணி அவரைச் சரணடைந்தான்.
திருகோவிலுள் நுழைந்த பாண்டியன் “எம் தந்தையே, விக்கிரம சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். என்னிடமோ சோழனை எதிர்க்கும் அளவுக்கு படை வலிமை இல்லை. ஆதலால் தாங்கள்தான் பாண்டிய நாட்டினையும் என்னையும் காத்தருள வேண்டும்.” என்று வேண்டினான்.
அப்போது இறைவனார் வானத்தினின்றும் ‘பாண்டியனே, நீ முதலில் சென்று சோழனை எதிர்கொள். யாம் பின்னால் வந்து வெற்றியை உமதாக்குவோம்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

பாண்டியனை வெற்றி பெறச் செய்தல்
இறைவனின் திருவாக்கினைக் கேட்டதும் வங்கிசேகர பாண்டியன் தெளிவடைந்து சோழனை எதிர்க்கப் புறப்பட்டான்.
போர்க்களத்தில் பாண்டிய மற்றும் சோழப் படைகள் ஒன்றை ஒன்று எதிர்த்து போரிட்டன. அப்போது சோழனுக்கு உதவியாக வடநாட்டுப் படைகள் போர்க்களத்தை அடைந்தன.
இதனால் பாண்டியனின் படைகள் சோழனின் படைகளை எதிர்க்க முடியாமல் சிதறி ஓடின. சோழன் போரில் வெற்றி பெற்றோம் என்று எண்ணி சங்கை முழங்கினான்.
அப்போது சொக்கநாதர் வேடுவ வடிவம் கொண்டு பாண்டியனின் சேனைக்கு தலைவராக சுந்தரேசன் என்ற திருப்பெயருடன் போர்க்களத்திற்கு வந்தார்.

தம்முடைய கணைகளை சோழனின் படைகளின் மீது எய்தார். ஒவ்வொரு அம்பும் சோழப்படையில் பதினாறாயிரம் வீரர்களைக் கொன்றது.
இதனைக் கண்ட சோழன் ஐயமுற்று “இவ்வம்புகளுக்கு இவ்வளவு வலிமை ஏது?” என்று எண்ணி அம்பினை ஆராய்ந்த போது அம்பில் சுந்தரேசன் என்ற பெயர் பொறித்திருந்ததைக் கண்டான்.
வேடுவ வடிவில் உள்ளவர் சொக்கநாதர் பாண்டியனுக்கு துணையாக வந்துள்ளார் என்பதை உணர்ந்த விக்கிரம சோழன் போர்க்களத்தை விட்டு வெளியேறி சோழநாட்டிற்கு பயணமானான்.
அவ்வாறு திரும்பிச் செல்லும்போது வடநாட்டு அரசர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி மீண்டும் போர்க்களத்திற்கு அழைத்து வந்தனர்.
சொக்கநாதர் மீண்டும் திரும்பி வந்த சோழப் படைகளின் மீது அம்புகளை எய்தார். இறைவனாரின் அம்பு பட்டு பல்லாயிரக்கணக்கான வீரர்களும், யானைகளும், குதிரைகளும் மாண்டனர்.
வடநாட்டு அரசர்களும் இறைவனாரின் அம்பு பட்டு மடிந்தனர். விக்கிரம சோழன் போர்களித்திலிருந்து தப்பித்து ஓடினான். வங்கிசேகர பாண்டியன் போரில் வெற்றி பெற்றான். இறைவனார் பாண்டியனின் வெற்றிப் புன்னகையைப் பார்த்து அருள் நகை புரிந்து மறைந்தருளினார்.
வெற்றி பெற்ற திருக்கோயிலுக்குச் சென்று வங்கிசேகர பாண்டியன் இரத்தினத்தால் செய்த வில்லும் சுந்தரப் பேர் எழுதிய அம்பும் செய்து சாத்தி வணங்கினான். பின்னர் நீதிதவறாமல் ஆட்சி செய்து வந்தான்.

சுந்தரப் பேரம்பு எய்த படலம் கூறும் கருத்து
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

error: Copying content is Prohibited, Instead you can share it! :)