கண்ணன் கதைகள் – 12

கயிறா? கதலியா?

ஒரு ஏழைப் பெண்மணி தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்து வியாபாரம் செய்து வந்தாள். அவளுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. மிகவும் வருந்திய அவள் குருவாயூரப்பனிடம் தனக்குக் குழந்தை உண்டானால் கயிற்றுப் பிரியால் துலாபாரம் செய்வதாய் வேண்டிக் கொண்டாள்.

சிறிது நாட்களிலேயே அவள் கருவடைந்தாள். வியாபாரமும் செழிக்கத் தொடங்கியது. குழந்தைக்கு ஆறு மாதமானதும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் சென்றாள். இப்போது வசதியாய் இருப்பதால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று முடிவு செய்தாள். குழந்தையைத் துலாபாரத் தட்டில் கிடத்தி, மற்றொரு தட்டில் கதலிப் பழத்தை வைத்தார்கள். குழந்தையின் எடையை விட பத்து மடங்கு கதலியை வைத்தும், தட்டு சமநிலையை அடையவில்லை. கோவில் சிப்பந்தி அவளிடம், “ஏதோ தப்பு நடந்திருக்கிறது, என்ன பிரார்த்தித்தாய்?” என்று கேட்டனர். அவளும், “ஏழையாய் இருக்கும் சமயம் கயிறு வேண்டிக் கொண்டேன், இப்போது அவன் அருளால் வசதி பெருகிவிட்டது, அதனால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று செய்தேன்” என்று கூறினாள். கோவில் சிப்பந்திகள்,“ உன்னிடம் எவ்வளவு கோடி இருந்தாலும், பிரார்த்தித்த வேண்டுதலையே அப்பன் ஏற்பான்” என்று கூறினார்கள். பழங்களை இறக்கிவிட்டு கயிற்றை ஏற்றினார்கள், என்ன ஆச்சர்யம்! தராசு கீழே இறங்கியது. அப்பன் பொருட்களில் உயர்வு, தாழ்வைப் பார்ப்பதில்லை, அன்புடன் சமர்ப்பிக்கும் எதையும் ஏற்பான் என்பதற்கு இந்த லீலை உதாரணம்.

Leave a Comment