Shani Dosha Remedies Tamil

சனி தோஷம் விலக்கும் பாடல் (Shani Dosha Remedies Tamil) –  அஷ்டமச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியினால்  இந்த சனிப்பெயர்ச்சியால், எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும். அதில் இருந்து இறையருளால் தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் இது.

1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே

2. தோடுடைய காதுடையன், தோலுடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே

3. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே

4. புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே

5. ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே

6. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே

7. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே

8. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே

9. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே

10. மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே

11. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே!…

சனிப்பெயர்ச்சி பலன்கள்

Leave a Comment