பொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம் (pongal festival)

பொங்கல் பண்டிகையில் விசேஷம் அனைவரின் பசிதீர்க்க, உணவளிக்கும் உயிரோட்டமுள்ள பண்டிகை எனலாம்.

பொங்கல் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் முதல் நாள் ஞாயிறு (சூரியன்) கொண்டாடப்படுகின்றது. இந்த திருநாள் மனிதனை புது முயற்சியில், புதிய நம்பிக்கையில், புதிய திருப்பத்தில் புகுத்தும் நாள் என்று சொல்லலாம்.

இதனை உழவர் திருநாள் எனலாம். ஆடி முதல் மார்கழி வரை கழனியில் ஓயாது உழைத்ததால் சோர்வடைந்து விடுவதால், மார்கழியில் அறுவடை காலம் முடிந்து புது நெல் வீடுவந்து சேரும்போது, சோர்வு நீங்கி, மகிழ்வுடன் இருக்கிறோம். ஓய்வு கொள்ளவும், இறைவனை தொழுது அருள் பெறவும், குடும்பத்துடன் குதூகலமாக இருக்கவும், விவசாய வேலைகள் இல்லாத தை மாதம், முதல் நாள் வசதியான நாள். ஆகவே தான் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறோம் என்கின்றனர்.

இப்பண்டிகையின் ஆன்மீக இரகசியம் என்னவாக இருக்கும் என்று பார்க்கும்போது, முதல் நாள் பழையதை எரித்தல், போகி பண்டிகையாக (தீயதை விலக்கிவிடுதல்) கொண்டாடப்படுகின்றது, புதியன புகுத்தல் (நற்பண்புகளை நடைமுறையில் கொண்டு வருதல்), இறைவன் அருள் பெறுதல் என்ற தன்மைகளின் அவசியத்தை உணர்த்துவதாக இருக்கின்றது.

பெரும் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் எனப்படும் இரண்டாம் தினத்தன்று முதலில் ஞான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவது ஆகும்! அதாவது உழவு செய்ய சூரியன் முழுமையாக உதவுவது போல் (உதாரணத்திற்கு: தேவையற்ற கிருமிகளை அழிப்பது), நமது துக்கங்களுக்கு காரணமாக இருக்கும் அஞ்ஞான இருளை நீக்கி, அதில் நல்ல எண்ணங்கள் விளைய ஞான சூரியனான இறைவன் ஞானத்தை (Knowledge) தருகின்றார், இதன் மூலம் சுயம் மற்றும் முழு உலகிற்கும் நன்மை ஏற்படுகின்றது, அதாவது மகிழ்ச்சி நிறைந்த நிலை உருவாகின்றது. அப்படிப்பட்ட இறைவனுக்கு நன்றி சொல்லும் தினம் ஆகும்.

மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் ஆகும். உழவுக்கு பெரும் உதவி செய்த மாடுகளை கொண்டாடும் நாள். நாமும் நம்முடைய நலனுக்கு உதவி செய்த அனைத்திற்கும் அன்பு & நன்றி செலுத்தி கொண்டாடி மகிழ்வோம்.
அதற்கு அடுத்த நாள் பெரியவர்களுக்கும், உறவினர்களுக்கும் அன்பையும், நன்றியையும் தெரிவிக்கும் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இது மகிழ்ச்சியை பகிர்ந்தளிக்கும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. நாமும் நம்முடைய நலனுக்காக உதவிய அனைவருடனும் நம் மகிழ்ச்சியை பகிந்துகொள்வோம். இதன் மூலம் நம் மனது மிகுந்த லேசாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஏன்னென்றால் கொடுக்கும் மனதில் ஒரு பொழுதும் குறைவிருக்காது
.
மேலும் பொங்கல் பண்டிகை திட்டமிட்ட வாழ்க்கை முறையை குறிக்கின்றது, திட்டமிடாத மனம் அனாவசிய சிந்தனைகளில் அலை பாயலாம். ஆதாலால் இதனை வெற்றி கொள்ள நல்ல இலட்சியங்களைக் கொண்ட வாழ்க்கையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது அவசியம். இதில் ஆத்மீக ஞானமும், தியானமும் உதவியளிக்க முடியும்.
ஆதாலால் இதன் ஆன்மீக இரகசியத்தை புரிந்து நமக்குள் இருக்கும் பழைய தேவையில்லாத அவகுணங்களை எரித்து, நற்குணங்கள் எனும் ஆடை அணிந்து, பொங்கல் நல்நாளில் உடலும், ஆத்மாவும், வளம் பெறக் இறைவனை அன்புடன் நினனவு செய்து கொண்டாடி மகிழ்வோம். நல்வாழ்த்துக்கள்!

Leave a Comment