Kanni rasi palangal Ragu ketu peyarchi 2019

கன்னி: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

கன்னி ராசி வாசகர்களே

எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகு தரப்போகும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்குப் பதினோராம் வீட்டில் அமர்ந்து பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதி என்று பலவகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். இந்த ராகு சுயமாகச் சிந்திக்க வைப்பதுடன், சுயமாகத் தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.

குழந்தை இல்லையே என்று வருந்திய தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். வி.ஐ.பி.க்கள் அறிமுகமாவார்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். தடைபட்ட கல்வியைத் தொடருவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய நண்பர் களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். 10-ல் ராகு வருவதால் ஒரே நேரத்தில் பல வேலைகள் இருக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் ஓரளவு பணம் வரும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். கிரகப்பிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டும். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் சொந்த ஊரை விட்டு இடம்பெயர்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்யோகத்திலும் செல்வாக்கு கூடும்.

ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் ஆரோக்கியம் பாதிக்கும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கூடாப் பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத் தால் பிரிவு வரக்கூடும்.

செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் நிலம், வீடு வாங்குவது விற்பதில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பிப் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, உறவினர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு களையும், பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பதற்றத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படுத்துவார். கனிவான பேச்சாலேயே காரியங் களைச் சாதிப்பீர்கள்.

வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாதக் குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், கேது 4-ல் வந்தமர்வதால் வீடு கட்டத் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீடு கட்டத் தொடங்குவது நல்லது.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் ஆன்மிகத்தில் உங்கள் மனம் லயிக்கும். நீண்டநாள் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களை அதிவேகமாக இயக்க வேண்டாம். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். திருமணம் கூடி வரும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக் கசப்புகள் நீங்கும்.

கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் ஆரோக்கியத்தில் கூடுதலாக அக்கறை காட்டுங்கள். உணவுக் கட்டுப்பாடு தேவை. தூக்கம் குறையும். விபத்துகள் வந்து நீங்கும். எதிர்பாராத தொகை கைக்கு வரும்.

பயிர்கள், கால்நடைகள் மூலமாக விவசாயிகளுக்கு ஓரளவு லாபங்கள் இருக்கும். அராசாங்க மானியங்கள் கிடைக்க சிறிது தாமதம் ஆகும். கிடைக்கின்ற வாய்ப்புகளை கலைஞர்கள் பயன்படுத்திக்கொள்வதால் பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கலாம். பெண்களுக்கு சிறிய அளவிலான வீண் விரயச் செலவுகள் இருக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் தேவையற்ற கவன சிதறல்களை தவிர்த்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த வெற்றிகளை பெறலாம்.

இந்த ராகு-கேது மாற்றம் சின்னச் சின்ன ஏமாற்றங்களையும், குழப்பங்களையும் தந்தாலும் தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெற வைக்கும்.

Leave a Comment